அண்மைய செய்திகள்

recent
-

தமிழர்களின் பிரச்சினையை மூன்றாவது நாடு தீர்க்கப்போவதில்லை.....!


இலங்கை அரசாங்கத்துடன் பேசுவதன் மூலமே தமிழ் மக்களுக்கான நீடித்து நிலைத்து நிற்கும் தீர்வினைப்பெற்றுக்கொள்ள முடியும் என கிழக்கு மாகாண விவசாய அமைச்சரும் தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளருமான கி.துரைராஜசிங்கம் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் மீனவர்களுக்கு உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு சத்துருக்கொண்டான் மீன்பிடி நிலையத்தில் நடைபெற்றபோது கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,
தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரையும் மிகச்சிறந்த சட்டவாதியான சுமந்திரனையும் இன்று தும்படித்துக்கொண்டிருக்கின்றனர். எங்களுடைய சகோதரர்களே இதனைச்செய்கின்றனர்.

எங்களை கூடுதலாக விமர்சிப்பவர்கள் எங்களுடன் இருந்தவர்கள்தான். அவர்கள் உடனடியான ஒரு தீர்வு வரும் என நினைக்கின்றனர். தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் மிகவும் அனுபவம் வாய்ந்தவர்.


பல நூல்களை வாசித்துள்ளார். அதன் மூலமும் பல அனுபவங்களைப்பெற்றுள்ளார். அதிகமான இராஜதந்திரிகளையும் சந்தித்துக்கொண்டிருக்கின்றார். அதன் மூலமும் அனுபவங்களைப்பெற்றுள்ளார்.

இவற்றினைக்கொண்டு பிரச்சினையினை எப்படி தீர்ப்பது என்பதுதொடர்பில் நடவடிக்கையெடுத்து வருகின்றனர்.

பிரச்சினையை தீர்ப்பது என்பது ஒருவருக்கு தோல்வியேற்பட்டு ஒருவர் வெற்றிபெறும்போது ஏற்படாது. எவருக்கும் தோல்வி ஏற்படக்கூடாது.


போர் வெற்றியை இறுமாப்புடன் கொண்டாடியவர்கள் அழுத்தம் காரணமாக போர்குற்றம் தொடர்பில் விசாரணைசெய்வதற்கு இணக்கம் தெரிவித்தனர்.

போர்வெற்றியை கொண்டாடியவர்கள் பான்கீன்மூன் வந்தபோது சிலவற்றை செய்தனர். பின்னர் இலங்கை அரசாங்கம் செய்யாததன் காரணமாக நிபுணர்குழுவொன்றை ஐ.நா.உருவாக்கியது. அதுவந்தபோது இலங்கையில் கற்றறிந்த பாடகங்கள் ஆணைக்குழு உருவாக்கப்பட்டது.

இவ்வாறுதான் விடயங்கள் நடைபெற்றுவருகின்றன. இவ்வளவு விடயங்களும் நடைபெறுதவற்கு வெறுமனே சர்வதேச நாடுகள் மட்டும் காரணமல்ல.


இந்த சர்வதேச நாடுகளில் மிக முக்கியமான நாடான அமெரிக்காவினை எங்களது தலைவர்கள் சந்தித்து என்ன பொறிமுறையை கையாள்வதன் மூலம் எங்களது மக்களுக்கு நிவாரணங்களை பெற்றுக்கொடுக்கலாம்.

மகிந்த ராஜபக்ஸ சிங்கள மக்களிடம் சென்ற என்னை மின்சார கதிரையில் ஏற்றப்போகின்றார்கள், அதற்காகத்தான் ஜெனிவா தீர்மானம்கொண்டுவரப்படுகின்றது என சிங்கள மக்கள் மத்தியில் பிரசாரம் செய்துவந்தார்.

அவரை மின்சாரக்கதிரையில் ஏற்றுவதா? இல்லையா? என்பதை பிறகுபார்க்கலாம்; முதலில் எங்களுக்குரிய நிவாரணத்தை வழங்குவதற்கான பொறிமுறையை உருவாக்கவேண்டும் என்று கூறினோம்.


இன்று பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டாலும் அதன்கீழ் விசாரணைசெய்வதும் இல்லை, அதன் கீழ் வழக்கு தாக்கல்செய்வதும் இல்லை.

ஒவ்வொரு பொறிமுறையினையும் நாங்கள் கையாள அரசாங்கம் எங்களுக்கு எதிரான விடயங்களை கைவிட்டேயாகவேண்டிய நிலைக்கு சென்றுள்ளது.

இன்று எதுவும் நடைபெறவில்லையென்று நாங்கள் கூறிவிடமுடியாது. பல விடயங்கள் 18மாத அவகாசத்திற்குள் நடைபெற்றுள்ளன. சில இடங்களில் இருந்து இராணுவம் நகர்ந்துள்ளது, பல போராளிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

மீள்நிர்மாணம் என்ற தோனியில் சில நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. நாங்கள் நினைத்தவேகத்தில் சர்வதேசம் நினைத்தவேகத்தில் நடைபெறவில்லையென்பது உண்மையாகும். ஆனால் அரசாங்கம் ஒன்றும் செய்யவில்லையென சொல்லமுடியாது.


வழங்கப்பட்ட கால அவகாசத்தில் இலங்கை அரசாங்கம் என்ன செய்தது என்பது தொடர்பில் ஆராய்ந்து எதிர்வரும் 23ஆம் திகதி இறுதி தீர்மானத்தை வெளியிடவுள்ளது ஐ.நா.மனித உரிமைகள் ஆணைக்குழு. இன்று கால அவகாசம் வழங்குவதா இல்லையா என்ற கேள்வியெழுந்துள்ளது.

பாதிக்கப்பட்ட மக்களை பொறுத்தவரையில் அவர்களுக்கான நீதி நிவாரணங்கள் கிடைக்கவேண்டும். கால அவகாசம் வழங்குவதா இல்லையா என்பதை மக்கள் தீர்மானிக்கவேண்டும்.

இலங்கையினை அகற்றிவிட்டு இலங்கை வந்து ஐ.நா.சபை எதனையும் செய்யப்போவதில்லை. ஒரு நாட்டினை வைத்தே ஐ.நா.செயற்படுமே தவிர ஐ.நா.படையினைக்கொண்டுவந்து ஒரு நாட்டின் இறைமைக்கு எதிராக ஐ.நா.செயற்படாது.


அவ்வாறு செய்தாலும் எதுவும் நடக்கப்போவதில்லை. இந்திய படை வந்து இங்கு இறங்கியது. பல பிரச்சினைகள் எதிர்கொள்ளப்பட்ட மூன்றாவது நபர் வந்து எமது பிரச்சினையை தீர்க்கப்போவதில்லை.

எங்களது சமாதானத்தை ஐக்கிய நாடுகள் சபையோ வேறு எந்தசபையோ வந்து பறித்து எங்களிடம் தந்துவிட்டு காவல்பார்க்கமுடியாது. அரசாங்கத்திடம் அதன்பொறுப்புகளை கூறி அவர்களாகவே அதனைச்செய்யவேண்டும்.எங்களுக்கான தீர்வானது நின்று நிலைத்து நீடித்துநிற்ககூடியதாக இருக்கவேண்டும்.

சிங்கள மக்கள் மத்தியில் சென்று நாங்கள் ஐ.நா.விசாரணையை ஏற்றுக்கொள்கின்றோம் என்றால் சிங்கள மக்கள் மத்தியில் இன்று கூட்டு எதிர்க்கட்சி என்று கூறிக்கொள்பவர்கள் அதனை வேறுவிதமாக பயன்படுத்தும் நிலையேற்படும்.


பத்திரிகையில் வரும் செய்திகள் அனைத்தும் அரசாங்கத்தின் சரியான நிலைப்பாடு என்று எடுக்கமுடியாது.அவ்வப்போது அந்ததந்த மக்களை திருப்திப்படுத்தும் வகையில் சில விடயங்களை சொல்லவேண்டிய நிலையுள்ளது.

எமது உறவுகளிடம் ஒன்றை வினயமாக கேட்டுக்கொள்கின்றேன்.உங்களது உணர்வுகளை வெளிப்படுத்துவது ஓரளவுக்கு சரி.ஆனால் தலைமைத்துவத்தினை தேவையற்ற விதத்தில் விமர்சிக்காதீர்கள்.

இதனால் எங்களுக்கு எந்த இழப்பினையும் சந்திக்கப்போவதில்லை.நீங்கள்தான் உங்களது செல்வாக்கினை இழப்பீர்கள்.

ஜனாதிபதி,பிரதமரை தவிர எமது தலைவரை சம்பந்தன் என்று சொல்வதுகுறைவு.சம்பந்தன் ஐயா என்றுதான் கூறுவார்கள்.

ஆனால் எங்களோடு இருந்து பிரிந்துசென்ற சில சகோதரர்கள் வெறும் சம்பந்தன் என்று உறுத்தமாக சொல்கின்றனர்.

நீங்கள் சொல்வதுபோன்று சம்பந்தன் ஐயாவினையும் சுமந்திரனையும் தூக்கியெறிந்துவிட்டு நீங்கள் சொல்பவர்களை வைத்து நடாத்தினால் அவர்கள் எவ்வளவு தூரத்திற்கு கொண்டுசெல்லப்போவார்கள்.உங்களுககு; அந்த தகுதியில்லையென மக்கள் உங்களை நிராகரித்துள்ளனர்.

தந்தை செல்வாவினை ஜி.ஜி.பொன்னம்பலம் செவிடன் என்று ஏளனப்படுத்தியபோதும் தந்தை செல்வா அவரை இறுதி நேரத்தில் அழைத்துவந்தார், தமிழர் விடுதலைக்கூட்டணியை உருவாக்கி ஜி.ஜி.பொன்னம்பலம் உயிரிழந்தபோது முழு தமிழர்களும் அஞ்சலி செலுத்தும் நிலைமையினை தந்தை செல்வாவே ஏற்படுத்தினார்.

தமிழர்களின் பிரச்சினையை மூன்றாவது நாடு தீர்க்கப்போவதில்லை.....! Reviewed by Author on March 20, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.