எச்சரிக்கை யாழில் புதிய நோய்....
யாழ்ப்பாணத்தில் ஒருமாத காலமாக புதியதொரு சுவாசம் தொடர்புபட்ட நோய் பரவிவருவதாக யாழ். போதனா வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவு பொறுப்பு வைத்திய அதிகாரி வைத்தியர் ஜமுனாநந்தா தெரிவித்துள்ளார்.
இது குறித்த அவர் மேலும் தெரித்ததாவது,
கடந்த ஒரு மாதகாலமாக குறித்த ஒரு நோய் பரவி வருகின்றது. இந்நோயானது இன்புளுவன்ஸா வைரஸால் ஏற்படுகின்றது. இதனால் சராசரியாக யாழ். போதனா வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவில் 400 பேர் வரையில் சிகிச்சைக்காக வருகை தரும் நிலையில் தற்போது இவ் எண்ணிக்கை ஆயிரமாக அதிகரித்துள்ளது.
இந் நோயின் தாக்கமானது வித்தியாசமானதாக உள்ளது. குறிப்பாக இந்நோயின்அறிகுறியாக தொடர்ச்சியான காய்ச்சல், உடல் வலி, சளி, தும்மல் காணப்படல் போன்ற அறிகுறிகள்தென்படும். குறிப்பாக இந்நோயின் அறிகுறியும், டெங்கு நோயின் அறிகுறியும் ஒரேமாதிரியாக இருப்பதால் மக்கள் இந்நோயை டெங்கு நோயாக தவறாக நினைக்கும் சந்தர்ப்பங்களும் உண்டு.
ஒருவருக்கு இந்நோய் காணப்படும்போது அவரது தும்மலாலேயே இந்நோய் மற்றையவர்களுக்கு தொற்றுகின்றது. அதாவது ஒருவர் மற்றவருக்கு எதிராக தும்மும் போது அவரது தும்மலில் இருந்து மற்றவருக்கு சிந்தும் சளியால் இந்நோய் பரவுகின்றது.
இந் நோயானது குழந்தைகள் மற்றும் வளர்ந்தவர்களில் சலரோக நோயாளர்கள், கர்ப்பவதிகள், அஸ்மா நோயாளிகள் போன்ற வர்களை அதிகம் தாக்குகின்றது. இந்நிலையில் இந் நோயால் பாதிக் கப்பட்டவர்களுக்கு நீராகாரம், நீர் சத்து நிறைந்த உணவுகள் கொடுக்க வேண்டியதுடன் வைத்தி யசாலைக்கு வருபவர்களுக்கு அவர்களின் நோயின் தாக்க அளவை பொறுத்து சிகிச்சை வழங்கப்பட்டு வருகின்றது.
இவ்வாறான நிலையில் இந் நோயினைதவிர்க்க வேண்டுமாயின் தற்போதைய சூழ்நிலையில் அதிகளவான சன நெருக்கம் நிறைந்த இடத்திற்கு செல்வதை தவிர்க்கவேண்டும். ஏனெனில் சுவாசம் தொடர்பான நோயாததால் அதிகளவான மக்கள் நெரிசலான இடத்தில் இந்நோய் பரவுவது இலகுவானதாக இருக்கும். மேலும் ஒருவர் தும்மும்போது மற்றையவருக்கு எதிரே தும்மாது இருக்க வேண்டும். இந்நோயின் கிருமியானது சுமார் ஒரு மீற்றர்வரை தொற்றிக்கொள்ளும் தன்மையுடையதாகும்.
அத்துடன் ஒருவர் தும்மும் போது கைக்குட்டைகளை பயன்படுத்துவதுடன் சளி ஏற்படும்போது அதற்காக பயன்படுத்தப்படும் துண்டுகளை பின்னர் தீயிட்டு எரிக்க வேண்டும். இதேபோன்று கைகளை நன்கு சுத்தமான நீரில் சவர்க்காரம் இட்டு கழுவிய பின்னரே எந்த விதமான வேலைகளையும் செய்ய வேண்டும்.
இவற்றினூடாகவே இந்நோயின் தாக்கத்தை கட்டுப்படுத்த முடியும். இவற்றைவிட இந்நோய் தொடர்பான அறிகுறிகள் காணப் படுமாயின் உடனடியாக அருகில் உள்ள வைத்தியசாலைகளுக்கு சென்று வைத்தியரின் ஆலோசனைகளை பெற்றுக் கொள்ள வேண்டும் எனவும் வைத்தியர் ஜமுனாநந்தா மேலும் தெரிவித்திருந்தார்.
எச்சரிக்கை யாழில் புதிய நோய்....
Reviewed by Author
on
March 20, 2017
Rating:
No comments:
Post a Comment