அண்மைய செய்திகள்

recent
-

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் மேற்கொள்ளப்பட்டு வரும் போராட்டங்களுக்கு பதில் வழங்குங்கள்- செந்தில்நாதன் மயூரன்.

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் மேற்கொள்ளப்பட்டு வரும் போராட்டங்களுக்கு உரிய பதில் வழங்காமல் போராட்டத்தை மலினப்படுத்தும், கேவலப்படுத்தும் உரைகளை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நிறுத்திக் கொள்ள வேண்டும் என வடமாகாண சபை உறுப்பினர் செந்தில்நாதன் மயூரன் தெரிவித்தார்.

இவ்விடையம் தொடர்பாக அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில்,,,,

போராட்டக்காரர்களோடு விளையாட வேண்டாம். கடந்த கால அரசுக்கெதிராக அவர்கள் சிந்திய கண்ணீரே உங்களை அரியாசனத்தில் அமரச் செய்தது.

உங்கள் பதவியையும் அமரத்துவம் அடையச்செய்ய அவர்களின் கண்ணீருக்கு வலிமை உள்ளது என்பதை மறந்துவிட வேண்டாம்.

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பெற்றோர்,உறவினர்கள் வெயிலிலும், மழையிலும் வீதியோரங்களில் இருந்து தமது உறவுகளை மீட்டுத்தரக் கோரியும், அவ்வாறில்லாவிடின் அவர்களுக்கு என்ன நடந்தது என்பதனை பொறுப்புவாய்ந்த அரசாங்கத்திடமிருந்து நீதி கோரி நிற்பதும் பிரதம அமைச்சருக்கு கேலியாகவே தெரிகின்றது.

காணாமல் போனோர் வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்று விட்டனர் என்று திரும்பத் திரும்ப சொன்னால் அது உண்மை என உலகம் நம்பும் என ரணில் விக்கிரமசிங்க நம்பிக்கொண்டிருக்கிறார்.

நம்பிய தமிழ் மக்களை ஏமாற்றியது போல் உலகத்தை துளி அளவேனும் ஏமாற்ற முடியாது.
அவர்கள் கொல்லப்பட்டார்கள் என்றால் யாரால், எப்போது, எங்கே கொல்லப்பட்டார்கள்.

வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்று விட்டார்கள் என்றால் அவர்களின் பெயர் விபரங்கள்,எந்த நாட்டில் இருக்கிறார்கள் என்ற தகவல்களை ஆதாரத்தோடு முன்வைக்க வேண்டுமல்லவா.

போராட்டத்தில் ஈடுபட்டுவரும் ஒரு பெற்றோருக்கேனும், ஒரு சகோதர, சகோதரிக்கேனும் உங்கள் மகள், உங்கள் சகோதரன் இந்த நாட்டில், இந்த ஊரில் வசிக்கிறான் என நிரூபிக்க முடியுமா.

அப்படி ஆதாரத்துடன் ஒருவரையேனும் நிரூபித்தால், கண்முன் நிறுத்தினால் அடுத்த நிமிடமே அவர்கள் அனைவருமே போரட்டத்தை கைவிடுவார்கள்.

வெளிநாட்டில் வசிக்கும் மகனுக்காக எந்த தாயாவது வீதியில் இறங்கி உயிர்ப்பிச்சை கேட்டு, நீதி கோரி, ஊண் உறக்கமின்றி அழுது புலம்புவாளா!
தினம் தினம் ஒப்பாரி வைத்து அழும் குரல் ஜனாதிபதிக்கும்,பிரதமருக்கும் கேட்காமல் இருக்கலாம், நல்லாட்சிக்கு கேட்காமல் இருக்கலாம், மூன்று வருடங்களுக்கு பிறகு மூச்சு விடக்கூட முடியாமல் முடங்கிப்போய் மூலைக்குள் இருக்கும் போது இந்த உறவுகளின் அழுகுரல்களின் வலியும், வலிமையும் உணரப்படும்.


பொறுப்பான ஒரு அரசாங்கம் பொறுப்பு வாய்ந்த பதில்களை பாதிக்கப்பட்டோருக்கு வழங்க முன்வரவேண்டும்.
நொண்டிச்சாட்டுக்களை சொல்லி அரசாங்கம் தப்பிக்க முனையக்கூடாது.என குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் மேற்கொள்ளப்பட்டு வரும் போராட்டங்களுக்கு பதில் வழங்குங்கள்- செந்தில்நாதன் மயூரன். Reviewed by NEWMANNAR on March 16, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.