கிளிநொச்சியில் 59ஆவது நாளாகவும் தொடரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்காகன போராட்டம்...
கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் தொடர்பில் உரிய பதிலை வழங்கக்கோரி மேற்கொள்ளப்பட்டு வரும் போராட்டம் இன்று 59ஆவது நாளாகவும் தொடர்கிறது.
குறித்த போராட்டம் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் ஆரம்பிக்கப்பட்ட போதும் இது தொடர்பில் எவ்வித பதில்களும் கிடைக்காத நிலையில், அரசிற்கு அழுத்தங்களை கொடுக்கும் வகையில் போராட்டத்தினை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் நேற்று பிற்பகல் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய அன்னதான மண்டபத்தில காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கான ஏற்பாட்டில் கலந்துரையாடலொன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இதன்போது, உரியபதிலை வழங்க அரசு காலத்தை இழுத்தடித்து வருகின்றது. இவ்வாறு தொடர்ந்து போராட்டத்தை முன்னெடுப்பதால் பலர் நோய்த் தாக்கங்களுக்கு உள்ளாகி வருகின்றனர்.
எனவே அரசுக்கு அழுத்தங்களை கொடுக்கும் வகையில் போராட்டங்களை விரிவு படுத்தவுள்ளதாக முடிவெடுக்கப்பட்டது.
இந்த கலந்துரையாடலில் மாவட்டத்தில் உள்ள விவசாய அமைப்புக்கள் கிராம அபிவிருத்தி சங்கம், மாதர் கிராம அபிவிருத்திச் சங்கங்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புக்கள், பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் வடக்கு மாகாண கல்வி அமைச்சர் த.குருகுலராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்தனர்.
இதேவேளை குறித்த போராட்டத்திற்கு ஆதரவு வழங்கும் வகையிலும் எதிர்வரும் 27ஆம் திகதி முதற்கட்டமாக முழு அளவிலான கதவடைப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுப்பதாகவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவிக்கையில்,
இலங்கையில் வாழுகின்ற தாய், சகோதரர்கள் போன்ற நாங்கள் மாதக்கணக்கில் இப்படித் தெருவில் இருக்கும் போது ஜனாதிபதி பல ஆலயங்களுக்கும், விகாரைகளுக்கும் சென்று ஆசி வேண்டுவது எந்த பலனையும் அழிக்காது.
காணாமல் ஆக்கப்பட்ட எங்களின் உறவுகள் தொடர்பில் அரசாங்கம் உரிய பதிலை வெளியிட வேண்டும், மறைமுக தடுப்பு முகாம்களில் உள்ளவர்களை வெளிப்படுத்த வேண்டும், அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் ஆரம்பிக்கப்பட்ட கவனயீர்ப்புப் போராட்டம் இன்று இரண்டு மாதங்களை நிறைவு செய்யும் வகையில் 59ஆவது நாளாகவும் எந்தவித பதில்களும் இல்லாது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
நாங்கள் அவரது தாய்க்கு, சகோதரர்களுக்கு சமனானவர்கள். இந்த வயதில் எங்களது உறவுகளின் பதிலைத்தேடி இப்படி மாதகணக்கில் போராடி வருகின்றோம்.
எங்களுக்கு எந்த ஒரு பதிலையும் வழங்காத நல்லாட்சியின் ஜனாதிபதி இன்று ஆசிவேண்டி நயினாதீவு நாகபூசனி அம்பாள், நாகவிகாரை ஆகியவற்றில் விசேட வழிபாடுகளை செய்துள்ளார்.
இவ்வாறு தெருவில் கிடந்து பல துன்பங்களை அனுபவித்து எங்கள் உறவுகளை நினைத்து துன்பப்பட்டு எங்களைப் போன்ற எத்தனையோ உறவுகள் கண்ணீர் வடிக்கின்ற போது அவருக்கு எப்படி ஆசி கிடைக்கும். எங்களின் கண்ணீரை துடைப்பதன் மூலம் தான் அவருக்கு நல்லாட்சி கிடைக்கும் என்று தெரிவித்துள்ளனர்.
கிளிநொச்சியில் 59ஆவது நாளாகவும் தொடரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்காகன போராட்டம்...
Reviewed by Author
on
April 19, 2017
Rating:
No comments:
Post a Comment