மன்னாரில் வீட்டுத்திட்ட பயனாளிகள் தெரிவில் அநீதி-பாதிக்கப்பட்ட பெண்கள் மன்னார் பிரதேசச் செயலகத்திற்கு முன் போராட்டத்தில் குதிப்பு-(படம்)
மன்னாரில் வீட்டுத்திட்ட பயனாளிகள் தெரிவில் அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக கோரி மன்னார் பிரதேச்ச செயலாளர் பிரிவைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட நான்கு குடும்பப்பெண்கள் மன்னார் பிரதேசச் செயலகத்திற்கு முன் இன்று திங்கட்கிழமை (3) காலை முதல் கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்து வருகின்றனர்.
மன்னார் பிரதேசச் செயலாளர் பிரிவில் வீட்டுத்திட்ட பயனாளிகள் தெரிவில் தொடர்ந்தும் பாரபட்சம் காட்டப்பட்டு வருவதாகவும், வீட்டுத்திட்டம் தொடர்பில் மன்னார் பிரதேசச் செயலகத்திற்கு சென்றால் அதிகாரிகள் அசமந்த போக்குடன் நடந்து கொள்ளுவதாக கோரியும், தனக்கு நீதியான முறையில் வீட்டுத்திட்டம் வழங்கப்பட வேண்டும் என கோரி மன்னார் பொலிஸாரின் அனுமதியைப் பெற்று மன்னார் எமிழ் நகர் பகுதியைச் சேர்ந்த மேறி கிறிஸ்டபெல் அன்ரனி (வயது-58) என்ற தாய் பல்வேறு வசனங்கள் எழுதப்பட்ட பதாதைகளை காட்சிப்படுத்தியவாறு மன்னார் பிரதேசச் செயலகத்திற்கு முன் இன்று திங்கட்கிழமை காலை 9 மணி முதல் நீதி கோரி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்தார்.
குறித்த உண்ணாவிரத போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து மேலும் பாதிக்கப்பட்ட 3 பெண்கள் குறித்த போராட்டத்தில் இணைந்து கொண்டனர்.
பள்ளிமுனை மேற்கு, உப்புக்குளம் வடக்கு, பள்ளிமுனை கிழக்கு ஆகிய கிராமங்களைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட பெண்களே குறித்த ஆர்ப்பட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கலந்து கொண்டனர்.
குறித்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட பெண்கள் தமக்கு வீட்டுத்திட்டம் நிறாகரிக்கப்பட்டமைக்கான காரணம் இது வரை கூறப்படவில்லை எனவும், வீட்டுத்திட்டத்தை பெற்றுக்கொள்ள 6 வருடங்கள் காத்திருந்ததாகவும்,3 வருடங்கள் தொடர்ச்சியாக வீட்டுத்திட்டம் கிடைக்கும் என எதிர்பார்த்திருந்ததாகவும், தற்போது உரிய புள்ளிகள் கிடைக்கப்பெற்றும் வீட்டுத்திட்டத்தை பெற்றுக்கொள்ள 3 மாதங்களுக்கு மேலாக போராடி வருவதாகவும் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் தெரிவித்தனர்.
தமது வீட்டுத்திட்டம் தொடர்பில் தாம் நாளாந்தம் மன்னார் பிரதேசச் செயலகத்திற்கு சென்றால் அங்குள்ள அதிகாரிகள் எமக்கு உரிய பதில் வழங்குவதில்லை எனவும் தங்களுடம் கடுமையாக அதிகாரிகள் நடந்து கொள்ளுவதாகவும் அந்த பெண்கள் தெரிவித்தனர்.
ஏற்கனவே வீட்டுத்திட்டம் கிடைப்பதற்கான புள்ளிகள் வழங்கப்பட்டு பயனாளிகள் தெரிவில் தமது பெயர் விபரங்கள் உள்வாங்கப்பட்டு பெயர் பட்டியல் காட்சிப்படுத்தப்பட்ட நிலையில் தற்போதைய பெயர் பட்டியலில் தமது பெயர் நீக்கப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட பெண்கள் தெரிவித்தனர்.
மன்னார் பிரதேசச் செயலாளர் பிரிவில் பலருக்கு வீட்டுத்திட்டம் வழங்கப்பட்டுள்ளதாகவும்,குறிப்பா க பண வசதி படைத்தவர்கள், தொழில் ரீதியில் முன்னேறியவர்கள் என பலருக்கு வீட்டுத்திட்டம் வழங்கப்பட்டுள்ளதாகவும், ஆனால் பாதிக்கப்பட்ட, கணவனை இழந்த, வறுமைக் கோட்டிற்குற்பட்ட பலருக்கு வீட்டுத்திட்ட தெரிவுகளில் தெரிவு செய்யப்பட்டு பின் பட்டியலில் இருந்து பெயர் நீக்கப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.
இவ்விடையத்தில் மன்னார் பிரதேசச் செயலாளர் அசமந்த போக்குடன் நடந்து கொள்வதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
இந்த நிலையில் போராட்டம் இடம் பெற்ற இடத்திற்கு வந்த மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி நந்தினி ஸ்ரான்லி டி மேல் குறித்த பெண்களுடன் கலந்துரையாடிய நிலையில் அவர்களை பிரதேசச் செயலாளரிடம் அழைத்துச செல்ல முற்பட்டார்.
எனினும் போராட்டத்தை ஆரம்பித்த மன்னார் எமிழ் நகர் பகுதியைச் சேர்ந்த மேறி கிறிஸ்டபெல் அன்ரனி (வயது-58) என்ற தாய் பிரதேச செயலாளரை சந்திக்க மறுப்பு தெரிவித்த நிலையில் ஏனைய பெண்கள் மூவரையும் அழைத்துச் சென்று கலந்துரையாடினர்.
எனினும் குறித்த கலந்துரையாடலில் எடுக்கப்பட்ட முடிவுகள் திருப்தி இல்லாத காரணத்தினால் குறித்த பெண்கள் மீண்டும் போராட்டம் இடம் பெறும் இடத்திற்கு வந்து தொடர்ச்சியாக போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற பெண்களுக்கு மன்னார் பிரதேசச் செயலாளர் பிரிவில் வீட்டுத்திட்டம் கிடைக்காது ஏமாற்றப்பட்ட பலர் கலந்து கொண்டு ஆதரவுகளை வழங்கி வருகின்றனர்.
குறித்த பிரச்சினை தொடர்பாக மன்னார் பிரதேசச் செயலாளர் என்.பரமதாசனிடம் வினவிய போது,,,
மன்னார் பிரதேசச் செயலாளர் பிரிவில் வீட்டுத்திட்ட பயனாளிகள் உரிய முறையில் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
புள்ளிகளின் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்ட பயணாளிகளுக்கு அதிக புள்ளிகளை பெற்றவர்களுக்கு வீட்டுத்திட்டம் வழங்கப்பட்டுள்ளது.
வீட்டுத்திட்ட பயணாளிகள் தெரிவில் பிழைகள் காணப்பட்டால் என்னிடம் முறையிட வேண்டும்.என அவர் தெரிவித்தார்.
மன்னாரில் வீட்டுத்திட்ட பயனாளிகள் தெரிவில் அநீதி-பாதிக்கப்பட்ட பெண்கள் மன்னார் பிரதேசச் செயலகத்திற்கு முன் போராட்டத்தில் குதிப்பு-(படம்)
Reviewed by NEWMANNAR
on
July 03, 2017
Rating:
No comments:
Post a Comment