தமிழகத்தில் உள்ள 107 அகதி முகாம்களில் மத்திய குழு ஆய்வு! தீர்வு கிடைக்குமா?
இவ்வளவு விரிவாக அகதி முகாம்களில் ஆய்வு நடத்தப்படுவது இதுவே முதன்முறை எனப்படுகின்றது.
மத்திய உள்துறை அமைச்சகத்தின் இணைச் செயலாளர் தர்மா ரெட்டி தலைமையில் எட்டுப் பேர் கொண்ட மத்திய குழு, மூன்று குழுவாகப் பிரிந்து தமிழகமெங்கும் உள்ள 109 முகாம்களில் 107 முகாம்களை ஆய்வு செய்துள்ளது.
இந்த ஆய்வு கடந்த ஜனவரி 5 முதல் ஜனவரி 8 வரை நடைபெற்றுள்ளது. ஆய்வுக்குப் பின்னர் தமிழக பொது மற்றும் மறுவாழ்வுத் துறை முதன்மைச் செயலாளர் பி. செந்தில் குமார் உடனும் மத்தியக் குழு ஆலோசனை நடத்தியுள்ளது.
மத்திய உள்துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தலின் பெயரில் இவ்வாய்வு நடத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது.
இலங்கையில் நடந்து வந்த இனப்போர் காரணமாக 1983 முதல் இலங்கைத் தமிழ் அகதிகள் தமிழகத்தில் தஞ்சமடையத் தொடங்கினர்.
இன்றைய நிலையில் அவர்களின் எண்ணிக்கை அதிகாரபூர்வ கணக்குகளின் படி, 1 லட்சம் பேர் எனப்படுகின்றது. இதில் சுமார் 60,000 பேர் முகாம்களிலும் 40,000 பேர் முகாம்களுக்கு வெளியிலும் வசித்து வருகின்றனர்.
2009 போர் முடிவிற்குப் பின்னர் அண்மைக் காலமாக இலங்கைக்கு அகதிகள் திரும்பிச் செல்வது நடந்து வருகின்றது. இந்த நிலையில், மத்திய குழுவின் ஆய்வு இந்தச் சூழலோடு ஒப்பிட்டுப் பார்க்கப்படுகின்றது.
“இரட்டைக் குடியுரிமை வழங்க வேண்டும், சொந்த நாட்டிற்கு திரும்பச் செல்ல கப்பல் வழி போக்குவரத்தை ஏற்பாடு செய்ய வேண்டும், முகாம்களில் உள்ள படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என பல கோரிக்கைகளை மத்திய குழுவிடம் அகதிகள் முன்வைத்துள்ளனர்.
இலங்கையில் போர் முடிவுற்று ஒன்பது ஆண்டுகள் நிறைவடையும் நிலையிலும், தமிழர்களுக்கான அரசியல் தீர்வு இன்னும் வழங்கப்படாமல் இழுத்தடிக்கப்படுகின்றது.
இராணுவமயப்படுத்தப்பட்டுள்ள வடக்கு கிழக்கு பிரதேசங்கள் இன்றும் பதற்றத்திற்குரிய பகுதியாகவே காணப்படுகின்றது.
இந்த நிலையில், தமிழகத்தில் உள்ள அகதி முகாம்களில் ஆய்வு நடத்திய இந்திய மத்திய குழுவிடம் அகதிகள் வைத்துள்ள கோரிக்கைகள், கொள்கை முடிவாக மாறுமா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.
தமிழகத்தில் உள்ள 107 அகதி முகாம்களில் மத்திய குழு ஆய்வு! தீர்வு கிடைக்குமா?
Reviewed by Author
on
January 13, 2018
Rating:
No comments:
Post a Comment