அம்பியூலன்ஸ் வண்டியில் பிறந்த 15 குழந்தைகள்: வடமாகாண சபையில் ஞா.குணசீலன் -
மன்னார் மாவட்டத்தில் கடந்த மாதம் 15 பிரசவங்கள் அம்பியூலன்ஸ் வண்டியில் நடந்துள்ளதாக வடமாகாண சுகாதார அமைச்சர் ஞா.குணசீலன் தெரிவித்துள்ளார்.
வடமாகாண சபையின் 115ஆவது அமர்வு இன்றைய தினம் இடம்பெற்றது.
இதில், கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,
மன்னார் மாவட்ட வைத்தியசாலையில் நிரந்தரமான மகப்பேற்று நிபுணர் இல்லை. மத்திய அரசாங்கத்திடம் பல தடவைகள் கேட்டும் பயனில்லை.
தாய்மாரை அம்பியூலன்ஸ் வண்டி மூலம் வெளிமாவட்ட வைத்தியசாலைகளுக்கு கொண்டு செல்லவேண்டிய தேவை எழுகின்றது.
இந்நிலையில் கடந்த மாதம் மட்டும் 15 பிரசவங்கள் அம்பியூலன்ஸ் வண்டிகளில் நடந்துள்ளன. மேலும் ஒரு கர்ப்பிணித்தாயை அவசர சிகிக்சைப் பிரிவில் வைத்து மயக்க மருந்து கொடுக்க முடியாமல் வவுனியா வைத்தியசாலைக்கு மாற்ற வேண்டிய நிலை உருவானதாகவும் கூறியுள்ளார்.
அங்கே மயக்க மருந்து நிபுணரும் இல்லை. இவ்வாறு பருத்திதுறை, தெல்லிப்பளை, சாவகச்சேரி போன்ற வைத்தியசாலைகளிலும் மருத்துவர்கள் இல்லை.
இது தொடர்பாக பல தடவைகள் மத்திய அரசாங்கத்துக்கு எடுத்துக் கூறியும் இதுவரை ஆக்கப்பூர்வமான பதில் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, வடக்கு முதல்வரிடம் இந்த விடயத்தை சுட்டிக்காட்டியிருந்த போது அவர் ஜனாதிபதியை சந்தித்து இந்த விடயத்தை கூறுவதற்கான நேரத்தை கேட்டு கொண்டிருக்கின்றார் என்றும் வட மாகாண சுகாதார அமைச்சர் ஞா.குணசீலன் தெரிவித்துள்ளார்.
வடக்கில் இருந்து வைத்தியர்கள் வெளியேறினால் வேறு மாகாண வைத்தியர்கள் வருவார்களா ? வடமாகாணத்தில் கடமையாற்ற விரும்பாது , வடமாகாண வைத்தியர்கள் வெளியேறும் போது வேறு மாகாண வைத்தியர்கள் எவ்வாறு வடக்கு வருவார்கள் என தன்னிடம் ஆளுனர் கேள்வி எழுப்பியுள்ளார் என வடமாகாண சுகாதார அமைச்சர் ஞா. குணசீலன் தெரிவித்துள்ளார். வடமாகாண சபையின் 115 ஆவது அமர்வு இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை கைதடியில் உள்ள பேரவைக்கட்டடத்தில் நடைபெற்றது.அதன் போது கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் , வடமாகாண ஆளுனர் அலுவலகத்தில் நேற்றைய தினம் திங்கட்கிழமை நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்ட போது, வடமாகாணத்தில் வைத்தியர்கள் பற்றாக்குறையாக இருக்கின்றது, அதனை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு செல்லுங்கள் என ஆளுனரிடம் கேட்டேன். அதற்கு ஆளுனர் வடக்கில் உள்ள தமிழ் பேசும் வைத்தியர்கள் கொழும்பில் சென்று கடமையாற்ற விரும்பி இங்கிருந்து வெளியேறி செல்லும் போது அங்குள்ள வைத்தியர்கள் எப்படி இங்கே வந்து கடமையாற்ற விரும்புவார்கள் என என்னிடம் கேள்வி எழுப்பினார்.
அதற்கு என்ன பதில் சொல்வது என தெரியாது. மௌனமாக இருந்தேன் என வடமாகாண சுகாதார அமைச்சர் ஞா. குணசீலன் தெரிவித்தார்.
அம்பியூலன்ஸ் வண்டியில் பிறந்த 15 குழந்தைகள்: வடமாகாண சபையில் ஞா.குணசீலன் -
Reviewed by Author
on
January 09, 2018
Rating:
No comments:
Post a Comment