அண்மைய செய்திகள்

recent
-

தென்ஆப்ரிக்காவில் முதல்முறையாக ஒருநாள் தொடரை வென்று இந்திய அணி சாதனை


தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான ஐந்தாவது ஒருநாள் போட்டியில் 73 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி, ஒருநாள் தொடரை 4-1 என கைப்பற்றி சாதனை படைத்துள்ளது.

இந்தியா - தென்ஆப்பிரிக்கா இடையிலான 5-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி போர்ட் எலிசபெத்தில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற தென்ஆப்பிரிக்கா அணி கேப்டன் மார்கிராம் பவுலிங் தேர்வு செய்தார். தவான், ரோகித் சர்மா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். ரோகித் சர்மா நிதானமாக விளையாட தவான் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். தவான் 23 பந்தில் 8 பவுண்டரியுடன் 34 ரன்கள் எடுத்து ரபாடா பந்தில் ஆட்டமிழந்தார்.

அடுத்து ரோகித் சர்மா உடன் விராட் கோலி ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ரோகித் சர்மா 50 பந்தில் அரைசதம் அடித்தார். விராட் கோலி 36 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ரன்அவுட் ஆனார். அடுத்து வந்த ரகானேவும் 8 ரன்னில் ஆட்டமிழந்தார்.

4-வது விக்கெட்டுக்கு ரோகித் சர்மாவுடன் ஷ்ரேயாஸ் அய்யர் ஜோடி சேர்ந்தார். இருவரும் சிறப்பாக விளையாடினார்கள். ரோகித் சர்மா தனது 17-வது சதத்தை பூர்த்தி செய்தார். அவர் 107 பந்தில் சதம் அடித்தார். அவர் 126 பந்தில் 11 பவுண்டரி, 4 சிக்சருடன் 115 ரன்கள் சேர்த்தார். அடுத்து வந்த ஹர்திக் பாண்டியா தான் சந்தித்த முதல் பந்திலேயே வெளியேறினார்.

ஷ்ரேயாஸ் அய்யர் 30 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அதன்பின் வந்த டோனி 13 ரன்கள் எடுத்த நிலையில் நிகிடி பந்தில் ஆட்டமிழந்தார். புவனேஸ்வர் குமார் கடைசி வரை நின்று 19 ரன்கள் அடிக்க இந்தியா 50 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 274 ரன்கள் சேர்த்தது. இதனால் தென்ஆப்பிரிக்காவின் வெற்றிக்கு 275 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது. தென்ஆப்பிரிக்கா அணி சார்பில் நிகிடி 9 ஓவரில் 51 ரன்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட் வீழ்த்தினார்.

அதைத்தொடர்ந்து 275 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென்ஆப்ரிக்கா அணி களமிறங்கியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஹாசிம் அம்லாவும், எய்டன் மார்க்ரமும் களமிறங்கினர். இருவரும் நிதானமாக விளையாடி ரன் குவித்தனர். மார்க்ரம் 32 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய டுமினி 1 ரன்னிலும், டி வில்லியர்ஸ் 6 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அதன்பின் அம்லா உடன் மில்லர் ஜோடி சேர்ந்தார்.

சிறப்பாக விளையாடிய அம்லா அரைசதம் கடந்தார். மில்லர் 36 ரன்கள் எடுத்திருந்த நிலையில் சஹால் பந்தில் போல்டாகி வெளியேறினார். அவரைத்தொடர்ந்து ஹெய்ன்ரிச் கிளாசென் களமிறங்கினார். நிதானமாக விளையாடிய அம்லா 71 ரன்கள் எடுத்திருந்த நிலையில் எதிர்பாராத விதமாக ரன் அவுட் ஆகி வெளியேறினார். அதன்பின் களமிறங்கியவர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

பெலுக்வாயோ ரன் எடுக்காமலும், ரபாடா 3 ரன்னிலும், கிளாசென் 39 ரன்னிலும், ஷம்சி ரன் எடுக்காமலும், மோர்னே மார்கல் 1 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இதனால் தென்ஆப்ரிக்கா அணி 201 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதன்மூலம் இந்திய அணி 73 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஒருநாள் தொடரை கைப்பற்றியது. இந்திய அணியின் பந்துவீச்சில் குல்தீப் யாதவ் 4 விக்கெட்களும், பாண்டியா, சஹால் ஆகியோர் 2 விக்கெட்களும், பும்ரா ஒரு விக்கெட்களும் வீழ்த்தினர். இந்திய அணியின் ரோகித் சர்மா ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

தென்ஆப்ரிக்கா மண்ணில் இந்திய அணி ஒருநாள் தொடரை வெல்வது இதுவே முதல்முறையாகும். இந்த வெற்றியின் மூலம் ஆறு போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இந்திய அணி 4-1 என கைப்பற்றியுள்ளது.

 இரு அணிகளுக்கு இடையேயான ஆறாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி 16-ம் தேதி நடைபெறுகிறது. #SAvIND #INDvSA
தென்ஆப்ரிக்காவில் முதல்முறையாக ஒருநாள் தொடரை வென்று இந்திய அணி சாதனை Reviewed by Author on February 14, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.