அண்மைய செய்திகள்

recent
-

எனது கையெழுத்துப்பிரதிகளில் நாடகங்களினை காண்பது மட்டற்ற மகிழ்ச்சியே....S.V.ஜெயபாலன்

 நம்மைக்காண வருகின்றார் நாட்டுக்கூத்தின் அதித ஆர்வலர் இளைப்பாறிய அதிபர் ஒப்பாரி பாடகர்,பாடகர் நாடக கலாரசிகர் அண்ணாவியாருமான செ.விக்ரர் ஜெயபாலன் பறுனாந்து அவர்களின் அகத்திலிருந்து….. 

நாட்டுக்கூத்து நாடகங்களின் எனது கையெழுத்துப்பிரதிகளில் காண்பது எனக்கு  மட்டற்ற மகிழ்ச்சியே……..

தங்களைப்பற்றி---
எனது சொந்த இடம் பேசாலை தற்போது 3ம்வட்டாரம் பேசாலையில் எனது குடும்பத்துடன் மகிழ்ச்சியாக் நாடக ஆர்வலராக கலையிலும் ஈடுபாட்டுடன் செயலாற்றி வருகின்றேன். எனது சேவைக்கு என்னுடன் இணைந்து பணியாற்றிய எனது மனைவி ஜெ.மேரி எலிசபெத் நினைவில்….

தங்களது கலையார்வம் பற்றி….
எனக்கு கலையார்வம் மட்டும் தான் கலைப்படைப்புக்களை படைக்கும் அளவுக்கு கற்பனாவளம் இல்லை அதனால் படைக்கவில்லை எனது கலையார்வத்திற்கு எனது மாமனர் புலவர் அவுரான் செபஸ்தியான் குரூஸ் மிகவும் புகழ்பெற்றவர்(எனது மனைவியின் தந்தையார்)அதேபோல அண்ணாவியார் தாவீது செபஸ்தியான் பீரிஸ் (தாய்மாமன்) இவர்கள் இருவரினதும் ஆற்றல் திறமைகளை எனது சிறுவயதில் இருந்து பார்த்து வளர்ந்ததால் ஏற்பட்ட ஆர்வமே…

தாங்கள் அதிபராக கடமையாற்றிய பாடசாலைகள் பற்றி-----
  • மன்.ஓலைத்தொடுவாய் RCTMS (1990 முதல் நியயமனம் )
  • மன்.தலைமன்னார் GTMS
  • மன்.தலைமன்னார் துறை RCTMS (1999-2003)
  • மன்.எழுத்தூர் RCTMS
  • மன்.புனித பற்றிமா MMV
1990-2003 வரை அதிபராக கடமையாற்றினேன் அதன் பின்பு 2003 முதல் 2006 வரை உதவிக்கல்விப்பணிப்பாளராக கடமையாற்றி ஓய்வுபெற்றேன்.

அதிபராக ஓய்வுபெற்ற பின் கல்விச்செயற்பாடு பற்றி---
மகள் அவர்கள் தனது தந்தை பற்றி…

ஊருக்குள் இப்படித்தான் சொல்லுவார்கள் கணிதபாடத்தால் கைவிடப்பட்வர்களின் காவலர் ஏன்என்றால் கணித பாடத்தில் குறைந்த புள்ளிகளை பெற்று பெயிலானவர்களுக்கு வகுப்பு எடுத்து எப்படியாவது 40புள்ளிகள் எடுத்து சித்தியடையவைத்து விடுவார் அதுமட்டுமல்ல விஞ்ஞானம்,ஆங்கிலம்,தமிழ்,வரலாறு,சமயம் என 08பாடங்களினையும் விளங்கப்படுத்தும் ஆற்றல் இருந்ததுடன் குறிப்பாக தமிழில் பழமொழிகள் ஒத்தகருத்துச்சொற்கள் என யார் எப்போது கேட்டாலும் உடனே விளங்கப்படுத்துவார்.

தாங்கள் ஈடுபட்ட கலைவிடையங்கள் பற்றி---
  • நாட்டுக்குத்து நெறியாளராகவும் இராகங்கள் பாடுதல்
  • ஒப்பாரி கலைஞராக 1964
  • கல்யாணம்மற்றும் மங்களச்செயற்பாடுகளில் பாடல்கள் பாடுதல்

நாடக ஆர்வலராக இருக்கும் நீங்கள் இதுவரை எத்தனை நாடகங்களை பிரதி பண்ணியுள்ளீர்கள்….
இதுவரை 11 நாடகங்களை எனது கையெழுத்தில் பதிவு செய்துள்ளேன் அதுவும் இரண்டு இரவுக்கதைகள் மூன்றிரவுக்கதைகள் நாடகங்களை எழுதும் போது அதன் ராகங்களை தாளங்களை பாடியபடியே தான் எழுதுவேன் எனக்கு  நாடகங்களின் 80 வீதமான இராகதாளங்களை பாடிப்புரிந்து கொண்டு எழுதுவேன். எங்கு நாடகங்கள் நடந்தாலும் அங்கு நாடகம் பார்க்க சென்றுவிடுவேன் நாடகம் முடிந்த பின்பு  அவர்களிடம் அந்த நாடக ஏட்டினை கேட்டுப்பெறுவேன் அப்படி நான் கேட்டு பெற்று எழுதியவைதான் இந்த 11நாடகப்பிரதிகள் சிலர் நம்பித்தரமாட்டார்கள் அவர்களிடம் எனது ஆர்வத்தினை விளங்கப்படுத்துவேன் அப்படியிருந்தும் சிலர் தரமாட்டார்கள் கிடைத்ததை எழுதினேன் எனது கையெழுத்தில் இனிவரும் தலைமுறைக்காக பாதுகாத்து வைத்துள்ளேன்.

தாங்கள் பிரதி பண்ணிய நாடகநாட்டுக்கூத்து வாசகப்பாக்கள் பற்றி---
  • புனித அந்தோனியார் வாசகப்பா
  •  புனித அருளானந்தையர் நாடகம்-1989
  • புனித ஸ்நாபக அருளப்பர்-2000
  • மூவிராசாக்கள் வாசாப்பா -2013
  • புனித சந்தியோகுமையேர் நாடகம்
  • அப்போஸ்தலரான சந்தோமையார் நாடகம்
  • கன்னி பிலோமினாள் நாடகம்
  • இயேசுவின் முன்னோடியான திருமுழுக்கு அருளப்பர் நாடகம்
  • கென்றீக்கு எம்பரதோரர் இராசகன்னி நாடகம்
  • சந்நீக்கிலார் நாடகம்
  • அகஸ்துஸ் சேசார் எம்பரதோர் நாடகம்
நான் எழுதிய மரியன்னை பாமாலையும் அதனுடன் எழுதிக்குறையாகவுள்ள நாடகமும்
  •  மரியன்னை பாமாலை
  • நன்னூல் காண்டிகை உரை
  • இடையரானந்தம்
  • ஆங்கிலப்பழமொழிகளும் தொகுத்து எழுதிவைத்துள்ளேன்.
11நாடகங்ளை பிரதிபண்ணியுள்ளீர்கள் ஏன் நீங்கள் சுயமாக நாடகம் எழுதவில்லை….
ஏனக்கு நாடகங்கள் நாட்டுக்கூத்துக்கள் கவிதைகள் எழுதவராது அந்தளவுக்கு கற்பனைவளமும் இல்லை அப்படி நான் எழுதினாலும் ஏற்றுக்கொள்வார்களா என்றகேள்வியும் எனக்குள் இருந்தது அத்தோடு எனது கையெழுத்தில் எனக்கிருந்த ஆசையினால் எது எனக்குகிடைத்தாலும் பிரதி பண்ணிவிடுவேன் போட்டோ கொப்பி எடுப்பதில்லை அப்படியே பார்த்து எழுதிவிடுவேன்.

இப்போது நூல் எழுதி வெளியிடும் எண்ணம் இருக்கா…
கண் கெட்ட பிறகு சு10ரிய நமஸ்காரமா அவ்வாறான எண்ணம் எப்போதும் இல்லை இப்போது கைநடுக்கம் உள்ளது அதனால் எழுதமுடியாது அதுதான் எனது தற்போதைய கவலை என்பேன்.

தங்களுக்கு மறக்கமுடியாத விடையம் என்றால்….
நான் 16 வயதில் செமினறியில் இருக்கின்றேன் அப்பேர்துதான் அந்தச்சம்பவம்
எனது அப்பாவை ஐயா என்றும்  எனது தாத்தாவை அப்பா என்றும் தான் அழைப்பேன் எனது வழமையான செயற்பாடு எனக்கு தந்தி வருகின்றது உனது அப்பா இறந்து விட்டார் உடனடியாக வரவும் என்று நானும் எனது தாத்தா தான் வயது போயிற்று தானே அதுதான் இறந்திற்றார் என்று மனதை தேற்றிக்கொண்டு வீடுவருகின்றேன் என்னை செமினறியில்இருந்து இரண்டுபேர் கொண்டு வந்து விட்டுப்போகின்றார்கள் நான் விரைவாக உள்ளே வருகின்றேன். வாசலில் குத்துக்கல்லாட்டம் இருக்கின்றார் எனது தாத்தா (தாத்தாவை அப்பாவென்றுதானே அழைப்பேன்)
 அப்ப யார்....இறந்தது அழுதுகொண்டு இருக்கின்றார்கள் பார்க்கின்றேன் இறந்திருப்பது எனது அப்பா அதிர்ந்து போனேன் எனது கண்ணில் கண்ணீர் வரவில்லை உடலில் ஒரு நடுக்கமும் பய உணர்வும் தொற்றிக்கொண்டது. ஆன்றிலிருந்து பெரிதாக மேடைகளில் ஏறி பேசமாட்டேன் அந்த நடுக்கம் வந்துவிடும் என்னால் ஒன்றும் செய்ய முடியாது இப்போது நடுக்கம் அதிகம் வயது72 ஆகிவிட்டது தானே இதுவும் நான் கலைப்படைப்பை படைக்காமல் இருந்ததிற்கு ஒரு காரணமாக இருக்கலாம்.

மறக்கமுடியாத கலைஞர் என்றால்….
பலர் இருக்கின்றார்கள் அதில் முதன்மையானவர் எனது மாமானார் புலவர் அவுறான் செபஸ்தியான் குரூஸ் ஓய்வுபெற்ற அதிபர் நாடகநாட்டுக்கூத்து நெறியாளர் அண்ணாவியார் நடிகர் எனப்பன்முக ஆளுமை கொண்டவர் பிறப்பு-1916-10-17 இறப்பு 21-10-1989 அன்று அதிகாலை 3-15மணியளவில் இறைவனடி சேர்ந்தார்.

கலைஞர்களின் தற்போதைய நிலை பற்றி…
இன்று இல்லை அன்றும் இனி என்றும் கலைஞர்களுடன் வறுமை கூடவே இருப்பதை நான் கண்டிருக்கின்றேன் அத்தோடு தற்போதைய சூழலில் இப்படித்தான் உள்ளது......
படிக்காதவனை பணம் இருந்தா மதிக்கிறாங்க
புடித்தவன் பணம் இல்லை என்றால் அவன் மதிக்கப்படுவதில்லை
இதுதான்இப்போது இயல்பான விடையமல்லவா

தங்களை மிகவும் கவர்ந்த நாடகம் என்றால்----
நான் பிரதிபண்ணியுள்ள 11 நாடகங்களுமே எனக்கு பிடித்தவைதான் அதிலும் நான் இயக்கி மேடையேற்றிய நாடகமான அருளானந்தையர் நாடகமும் அதுபோல மூவிராசாக்கள் வாசாப்பும் என்னை மிகவும் கவர்ந்தவை தான்.

தாங்கள் மேடையேற்றிய நாடகங்கள் என்னால்….
சில சமூக நாடகங்ளை மேடையேற்றினேன் அத்தோடு பிரதானமாக
  • புனித அருளானந்தையர் நாடகம்-1989
  • புனித  ஸ்நாபக அருளப்பர்-2000
  • மூவிராசாக்கள் வாசாப்பும்-2013-(32வருடங்களுக்கு பின்பு மேடையேற்றம் கண்டது இதன் ஓலைச்சுவடியும் வைத்துள்ளார் பழுதடைந்துள்ளது) நாடகங்களை இயக்கி இராகங்கள் பாடி மேடையேற்றியுள்ளேன்.

தாங்கள் பெற்ற பட்டங்களும் விருதுகளும் பற்றி…

நான் பெரிதாக பட்டங்களும் விருதுகளும் பெறவில்லை ஏன் என்றால் நான் கலைஞன் இல்லையே...
  • புனித அருளானந்தையர் நாடகம்-1989 இசை இராகதாளங்கள் சரிவர மேடையேற்றியதற்காக  அண்ணாவியார் பட்டம் வழங்கப்பட்டது.
  • 04 முறை புனித அருளானந்தையர் நாடகம்-1989 மேடையேற்றும் எழுதிய புலவர அவுரான் செபஸ்தியான் குரூஸ் இறந்தார் கவலையான விடையமே.
  • 21-06-2008 கலை இலக்கிய விழாவில் கௌரவிப்பு
  • மன்.தலைமன்னார்துறை அ.த.க. பாடசாலை வைரவிழாவில் (1957-2017) 07-09-2017 நிகழ்வில் 1999-2003வரை அதிபராக கடமையாற்றிமைக்காக பாராட்டி நினைவுச்சின்னம் வழங்கப்பட்டதுபல மேடைகளில் பொன்னாடை போர்த்தி என்னை கௌரவப்படுத்தியுள்ளார்கள் இதை நான் பெரிதாக விரும்புவதில்லை

தங்களினைப்பற்றி ஒரு வார்த்தை என்றால்….
மீண்டும்…ஆங்கிலத்தில்
“I am Not A Poet  But a Plagiarist”
இப்படிச்சொன்னாலும் உண்மையில் பாராட்டப்படவேண்டிய ஒரு கலைஞர்தான் கலையை படைப்பவன் எப்படி கலைஞன் கவிஞன் எழுத்தாளன் ஆகின்றானோ....அதை ஏற்றுக்கொள்பவனும் பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கு தருபவனும் கலைஞன் தானே இதில் மாற்றுக்கருத்துண்டா…

மன்னாரில் கலைஞர்களின் வெளிப்பாடு நியூமன்னார் இணையம் பற்றி---
உண்மையில் அருமையான சேவை இதுவரை என்னை யாரும் வீடு தேடிவந்து பேட்டி எடுக்கவில்லை நீங்கள் தான் எடுத்துள்ளீர்கள் நான் கலைஞன் இல்லை கலைஞார்வலன் மட்டுமே தங்களின் சேவையானது எமது கலைஞர்களுக்கும் கலையார்வலர்களுக்கும் மிகவும் தேவையான ஒன்று தொடர்ச்சியாக செய்யுங்கள் கலை வளரும் தங்களின் சேவைகள் பாராட்டுக்குரியது என்றும்

சந்திப்பு- வை.கஜேந்திரன்
நியூமன்னார் இணையத்திற்காக...












எனது கையெழுத்துப்பிரதிகளில் நாடகங்களினை காண்பது மட்டற்ற மகிழ்ச்சியே....S.V.ஜெயபாலன் Reviewed by Author on May 14, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.