அண்மைய செய்திகள்

recent
-

கல்லறைத்திருவிழா….

கல்லறைத்திருவிழா….
.
கல்லறைத்திருவிழா
சில்லறையாய் அங்கும்...இங்கும்...
நல்லறை என்று
சொல்லறைகின்றேன்….

கருவிழி கொண்டு
காலப்பெரு வெளியில் வாழ்ந்து
கருவறை கண்டவர்களும் இல்லை...
கல்லறை கண்டவர்களும் இல்லை...

பார்த்து பார்த்து கட்டிய வீடு செல்வம்
பார்த்து பார்த்து சேர்த்த சொத்துக்கள்
பாசம் காட்டி வளர்த்த பிள்ளைகள்-உறவுகள்
பந்தங்கள் சொந்தங்கள்-எல்லாம்
வெந்துபோகும் உடலுக்குள்ளும்
ஆத்மா அற்ற உடலுக்குள்ளும்….

அலையலையாய்…..
ஆசைகள் எல்லாம்
அனைந்து போன விளக்குப்போல...
அங்கே ஒரு மூலையில்
அநாதையாக கிடக்கின்றேன்.........பலர்
அழகான பூவுலகிலும்.........

அன்று என்னருகில் எத்தனை பேர்......
ஆனந்தமாய் இருந்தபோதும்
அத்தனை துன்பங்களிலும் கூட இருந்த உறவுகள்
அருகில் இல்லை இப்போ….

அழகாய்…..நல்மனம்
அருமையான பெயரோடு-பிணம்
ஆறடிதான் மிச்சம் என்று
அன்று கேட்டு சிரித்தேன் -இன்று
அமைதியாக உறங்குகின்றேன்
அடங்கியது உடல்....முடங்கியது வாழ்க்கை…

பல வண்ணத்தில்
பலரின் எண்ணத்தில்
பலரின் கல்லறைகள்
பளபளப்பாய் மின்னுகின்றது….

பக்கத்தில் இருந்தபோது
பாசமாய் எட்டிப்பாராமல்
பரிவோடு பேசாமால்
பகல்பொழுதில் உணவு தராமல்

பாயில் நோயில் கிடந்தபோதும்
பறையாமல் இருந்துவிட்டு-பின்
பாலூற்றுகின்றார் பட்டாபிசேகம்
பந்தல் போட்டு விருந்துபசாரம் மட்டுமா…???
கொட்டும் மேளமும் பேண்ட்டும்
வெட்டும் ஆடும் மாடும் கோழியும்
எட்டுச்செலவும் 31….41….கூடும் கூட்டம்

காரணம் காட்டி
தோரணம் கட்டும்
பிறக்கும் போதே அணியும் ஆபரணம்
இறப்பு என்னும் மரணம்……….

கல்லறைச்செலவை…
கண்மூட-முன் செய்திருக்கலாம்
கடனாய் வழங்கியிருந்தாலும்-இன்னும் கொஞ்ச
காலம் வாழ்ந்திருப்பேன்…..

கரு கொண்டவர்க்கெல்லாம் ஒரு நாள் வரும்
கல்லறையில்.......கார்த்திகை 02 திருநாள்......

-வை.கஜேந்திரன்-



கல்லறைத்திருவிழா…. Reviewed by Author on November 02, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.