அண்மைய செய்திகள்

recent
-

“என்னை முதல்வராக்க நினைத்தார் ஜெயலலிதா!”


ஹைதராபாத்தில் வி.ஐ.பி-க்கள் வசிக்கும் பகுதி பஞ்ஜாரா ஹில்ஸ். அமைதியும் ரம்மியமும் நிறைந்த அந்த ஏரியாவில்தான் நடிகை விஜயசாந்தியின் வீடு. காங்கிரஸ் கட்சியின் பிரபலங்களில் ஒருவரான இவர், தெலங்கானா மாநில காங்கிரஸ் பிரசாரக் குழுத்தலைவர். இரண்டு காவலர்கள் மட்டுமே உள்ள வீட்டில், ஒரு சிசிடிவி கேமராகூட இல்லை. காரில் கட்சிக்கொடியும்கூட இல்லை. ஒரு  வி.ஐ.பி வீடு என்பதற்கான அடையாளங்களும் இல்லை. புன்னகையுடன் வரவேற்ற விஜயசாந்தி, தெலங்கானா, ஆந்திரா, தமிழ்நாடு மற்றும் இந்திய அரசியல் வரை பேசியது எல்லாமே அவரது சண்டைக் காட்சிகளைப்போல அதிரிபுதிரி அதிரடிதான்.


‘`அரசியல் பயணத்தில் உங்களின் பிரதான எதிரி, தெலுங்கு தேசம் கட்சி. நடந்து முடிந்த தெலங்கானா சட்டமன்றத் தேர்தலில் அக்கட்சியுடன் காங்கிரஸ் கூட்டணி வைத்துக்கொண்டதில் உங்களுக்கு உடன்பாடு இருந்ததா?”


‘`நிச்சயமாக இல்லை. 1999-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் `தனித் தெலங்கானா கோரிக்கையைக் கைவிட்டால்தான் கூட்டணி’ என்ற உறுதியுடன் இருந்தார், சந்திரபாபு நாயுடு. அதை பி.ஜே.பி ஏற்றுக் கொண்டது. அந்தக் கூட்டணியில் எனக்கு உடன்பாடில் லாததால்தான் பி.ஜே.பி-யிலிருந்து வெளியேறினேன். சந்திரபாபு நாயுடுவின் மீது தெலங்கானா மக்களுக்கு இன்னும் கோபம் குறையவில்லை. இதைச் சுட்டிக்காட்டி, ‘தெலுங்கு தேசம் கட்சியுடன் கூட்டணி வேண்டாம்; தனித்துப் போட்டியிடுவோம்’ என்றேன். ஆனால், சந்திரசேகர ராவை எதிர்க்க வலுவான கூட்டணி வேண்டும் என எங்கள் கட்சி மேலிடம் முடிவெடுத்தது. விளைவு, நாங்கள் தோல்வியடைந்தோம். ‘நீங்கள் சொன்னது சரிதான். தவறு செய்துவிட்டோம்’ என எங்கள் கட்சியினர் என்னிடம் கூறுகிறார்கள். இப்போது வருத்தப்பட்டு என்ன பயன்?”

“ ‘கடந்த தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றாத சந்திரசேகர ராவ் கட்சியைத் தோல்வி யடையச் செய்யுங்கள்’ எனப் பிரசாரம் செய்தீர்கள். ஆனால், பெரும்பான்மை பலத்துடன் அவரை மக்கள் வெற்றிபெறச் செய்திருக்கிறார்களே?”   

“ ‘தலித் மக்களுக்கு மூன்று ஏக்கர் நிலம், டபுள் பெட் ரூம் வீடு, ஒவ்வொரு வீட்டுக்கும் ஒரு வேலைவாய்ப்பு, தெலங்கானா வளர்ச்சிடைந்த மாநிலமாகும், நாங்கள் வெற்றி பெற்றால், எங்கள் கட்சியின் தலித் சமூகத்தைச் சார்ந்த ஒருவரே முதல்வர்’ - இவைதாம் தெலங்கானா மாநிலத்தின் முதல் சட்டமன்றத் தேர்தலில் சந்திரசேகர ராவ் மக்களுக்கு அளித்த முக்கியமான வாக்குறுதிகள். இதில் எதையுமே அவர் நிறைவேற்ற வில்லை. மக்கள் தன் ஆட்சியின் மீது அதிருப்தியில் இருப்பதை உணர்ந்துதான், முன்கூட்டியே சட்டமன்றத்தைக் கலைத்தார். பிறகு தேர்தலுக்கு இடைப்பட்ட காலத்தில், தன் ஆட்சியில் கொள்ளையடித்த பணத்தை, எல்லாத் தொகுதிகளிலும் செலவழித்தார். வாக்காளர்களுக்குப் பல ஆயிரங்கள்வரை பணப்பட்டுவாடா செய்தார். இதற்குக் காவல்துறையினரும் உடந்தை. மேலும், வாக்குப் பதிவிலும் நிறைய மோசடி நடைபெற்றது. இதற்குப் பிரதமர் மோடி மற்றும் தேர்தல் ஆணையம் பெரிதும் உதவியிருக்கின்றனர். சந்திரசேகர ராவ் மிகச் சிறந்த சூழ்ச்சிக்காரர்; மக்களை ஏமாற்றும் தந்திரம் தெரிந்தவர்.  முதல்வரான பிறகு, மக்கள் நலனில் அக்கறையே செலுத்தாதவர், யாகம் வளர்ப்பது, ஜோதிட நம்பிக்கையில் மூழ்கியிருப்பதையெல்லாம் மக்கள் கவனித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்.”

``டிஆர்எஸ் கட்சியின் முன்னணித் தலைவராக உருவாகியிருந்த நேரத்தில் அக்கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டீர்கள். பிறகு அந்தக் கட்சி இருமுறை ஆட்சியைப் பிடித்தது. ‘ஒருவேளை அக்கட்சியிலேயே போராடி இருந்திருக்கலாமோ’ என நினைத்திருக்கிறீர்களா?”


``அப்படியோர் எண்ணம் எனக்குள் எப்போதும் வராது! ஹீரோக்களை மீறிய புகழுடனும் ரசிகர்கள் படையுடனும் இருந்தேன். பி.ஜே.பி-யிலிருந்து விலகியதும், தனித் தெலங்கானாப் பிரிவினைக்காக, `தல்லி தெலங்கானா’ கட்சியைத் தொடங்கி னேன். எனக்குப் பிறகுதான் சந்திரசேகர ராவ் அரசியலுக்கு வந்தார். `இருவரின் நோக்கமும் ஒன்றுதான். நாம் ஒரே கட்சியில் இருந்து போராடினால் தெலங்கானாக் கோரிக்கை பலம் பெறும்’ என்றார், சந்திரசேகர ராவ். பிறகு, அவர் கட்சியுடன் என் கட்சியை இணைத்தேன். ஆனால், சந்திரசேகர ராவ் என்னை மறைமுகமாக அழிக்க நினைத்தார். மேடக் நாடாளுமன்றத் தொகுதிக்கு வேட்புமனுத் தாக்கல் செய்தேன். எனக்குத் தெரியாமல் அவரும் அதே தொகுதியில் வேட்புமனுத் தாக்கல் செய்தார். எதிர்ப்புக்குப் பிறகு, அவர் தன் மனுவை வாபஸ் பெற்றார்.



தனித் தெலங்கானாக் கோரிக்கைக்காக, அப்போது எம்.பி-க்களாக இருந்த நானும் சந்திரசேகர ராவும் நாடாளுமன்றத்தில் போராடினோம். அதிலும் அவர் அடிக்கடி நாடாளுமன்றம் வரமாட்டார். 2014-ம் ஆண்டு, அப்போதைய மத்திய அரசின் ஆட்சிக்காலம் முடியும் காலகட்டம். எப்படியாவது அப்போதைய நாடாளுமன்றக் கூட்டத்தில் ‘தெலங்கானா தனி மாநில மசோதா’வை வெற்றிபெறச் செய்ய வேண்டும் எனத் தனி ஒருத்தியாக நான்தான் அதிகம் போராடினேன். டிஆர்எஸ் கட்சியிலும் மக்கள் மத்தியிலும் எனக்குச் செல்வாக்கு உயர்ந்திருந்தது. அவரை மீறி நான் உயர்ந்துவிடுவேன் என்ற அச்சத்தில்தான், தெலங்கானா மாநிலம் உருவாக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியான அன்றிரவே, எக்காரணமுமின்றி சந்திரசேகர ராவ் என்னைக் கட்சியிலிருந்து நீக்கினார். அவரின் உண்மை முகத்தை அப்போதுதான் உணர்ந்தேன். இவ்வளவு நடந்தும், அவருடன் இணைந்து பணியாற்றும் எண்ணம் எனக்கு எப்படி வரும்?”

``பிரதமர் நரேந்திர மோடி அரசைப் பற்றி உங்கள் மதிப்பீடு என்ன?”


``தோல்வியடைந்த அரசு! பி.ஜே.பி ஆளும் மாநிலங்கள் மற்றும் பிற மாநிலங்களில் மக்களுக்கு நீண்டகால பலன் தரும் வளர்ச்சித் திட்டங்களை அவர் செய்ய வில்லை. பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி வரி உயர்வு நடவடிக்கைகள் தோல்வி யடைந்ததால் மக்கள் அடைந்த துன்பங்களை அறியாத பிரதமர். மோடி பிரதமராகும் முன்புவரை, மக்களுக்கு பி.ஜே.பி-யின் மீது ஓரளவுக்கு நல்ல மதிப்பு இருந்தது. இப்போது இல்லை. சுதந்திர இந்தியாவில் இப்படி மோசமான ஒரு பிரதமரை நான் கண்டதில்லை. வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பி.ஜே.பி மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது. அதுதான் நாட்டுக்கும் மக்களுக்கும் நல்லது. நான் பி.ஜே.பி-யில் மகிளா மோர்ச்சா செயலாளராக இருந்த நேரம், மோடி தேசியச் செயலாளராக இருந்தார். கட்சியில் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப் படுவதைப் பற்றி அவர் மோசமாகப் பேசினார். கோபம்வந்து, அவரை அனைவரின் முன்னிலையிலும் திட்டினேன். பிறகு அமைதியாகி விட்டார். அப்படி இருந்தவர் முதலமைச்சர் ஆனதையே என்னால் ஏற்றுக்கொள்ள முடியாத நிலையில், பிரதமராகி இன்னும் மிதப்பில் இருக்கிறார்.”  

``ஜெயலலிதாவுடனான உங்கள் நட்பு பற்றி...”

``என் திரைப்படங்களைப் பார்த்து அடிக்கடி என்னைப் பாராட்டியிருக்கிறார் ஜெயலலிதா அம்மா. அப்படித் தான் எங்களுக்குள் நட்பு ஏற்பட்டது. ஒருமுறை போயஸ் கார்டன் வீட்டில் அவரைச் சந்தித்தேன். இரண்டு காலிலும் கட்டைவிரல்களின் நகங்கள் நீக்கப்பட்டு புண்ணாக இருப் பதால் பேண்டேஜ் சுற்றப் பட்டிருப்பதாக அம்மா கூறினார். சர்க்கரை பாதிப்பு, ரத்த அழுத்தம், மூச்சிரைப்பு உள்ளிட்ட பிரச்னைகளால் அப்போதே அவர் சிரமப் பட்டார். நான் ஆறுதல் சொன்னதுடன், நம்பிக்கையாகப் பேசினேன். அப்போது நாடாளுமன்றத் தேர்தலில், பா.ஜ.க-வுடன் அ.தி.மு.க கூட்டணி அமைத்தது. தமிழ்நாட்டில் அ.தி.மு.க-வுக்குப் பிரசாரம் செய்ய ஜெயலலிதா என்னை அழைத்தார். தமிழகம் முழுக்கப் பிரசாரம் செய்தேன். பிறகு ஆந்திர அரசியலில் கவனம் செலுத்தியதால், தமிழ்நாட்டு அரசியலில் என்னால் கவனம் செலுத்த முடியவில்லை. ஆனாலும், அரசியல் பிரச்னைகள் முதல் தன் உடல்நிலை பாதிப்புகள் வரை ஜெயலலிதா அம்மா என்னிடம் மனம்விட்டுப் பேசுவார்.

சொத்துக்குவிப்பு வழக்குப் பிரச்னையால், அவர் பதவியை இழந்த நேரம். `ஆட்சி நிர்வாகத்தை வழிநடத்த நம்பிக்கையான ஒருவரை எதிர்பார்க்கிறேன். அ.தி.மு.க-வில் இணைந்து பணியாற்றுங்கள்’ என எனக்கு அழைப்பு விடுத்தார் அம்மா. `தெலங்கானாவுக்காகப் போராடிக்கொண்டிருக்கிறேன். இந்நிலையில் நான் தமிழக அரசியலுக்கு வருவது சரியாக இருக்காது’ எனச் சொன்னேன். அதைக் கனிவுடன் ஏற்றுக்கொண்டார். அதன் பிறகே, ஓ.பன்னீர்செல்வத்தை முதல்வராக்கினார்.  நான் இருக்க வேண்டிய இடத்தில்தான், ஓ.பன்னீர்செல்வம் இருந்தார்.”

``ஜெயலலிதாவின் மரணம் மற்றும் அதற்குப் பிந்தைய தமிழக அரசியல் சூழலை எப்படிப் பார்க்கிறீர்கள்?”

``தற்போது தமிழகத்தில் நடப்பது ஜெயலலிதா அம்மாவின் ஆட்சியில்லை. மோடியின் மறைமுக ஆட்சி. நன்றாக இருக்கும் கட்சிகளில் பிளவு ஏற்படுத்துவதே அவர் வேலை. அதைத்தான் இந்தியா முழுக்கச் செய்துகொண்டிருக்கிறார். எம்.ஜி.ஆருக்குப் பிறகு, அ.தி.மு.க-வைக் கட்டுப்பாட்டுடன் வளர்த்தவர் ஜெயலலிதா. அவர் பட்ட கஷ்டங்களை அருகிலிருந்து பார்த்த முறையில், அக்கட்சியின் வளர்ச்சிக்குப் பணியாற்றிய உரிமையில், தற்போதைய அ.தி.மு.க ஆட்சி மற்றும் கட்சி நிர்வாகம் இரண்டும் தவறான பாதையில் செல்வதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. தற்போது அ.தி.மு.க கட்டுப்பாடில்லாத கட்சியாக இருக்கிறது.”

“சசிகலாவுக்கு ஆதரவாகக் குரல் கொடுக்கிறீர்களே?”

“ஜெயலலிதா அம்மா இருந்த காலத்திலிருந்தே, சசிகலாவுடனும் எனக்கு நீண்டகால நட்பு உண்டு. நமக்கு வேண்டப்பட்டவர் கஷ்டத்தில் இருக்கும்போது, அவருக்கு ஆதரவாக இருக்க வேண்டும். அப்படித்தான் சசிகலாவுக்கு ஆதரவாகக் குரல் கொடுக்கிறேன். அவர் கணவர் நடராசன் மறைந்தபிறகு, மன்னார்குடி சென்று அவருக்கு அஞ்சலி செலுத்தினேன். கடந்த மாதம் பெங்களூரு சிறையில் சின்னம்மாவைச் சந்தித்துப் பேசினேன். அது, அரசியலுக்கு அப்பாற்பட்ட சந்திப்பு. ஜெயலலிதா அம்மாவின் மரணத்தில் சின்னம்மாவுக்குப் பங்கிருப்பதாகக் கூறப்படுவது வதந்தி. அது மோடியின் சூழ்ச்சி.”

``ரஜினி, கமலின் அரசியல் என்ட்ரி..?”

``தமிழக மக்களின் சார்பில், `சீக்கிரம் அரசியலுக்கு வாங்க’ என நானும் ரஜினிக்கு அழைப்பு விடுக்கிறேன். கமல் அரசியலுக்குள் வந்துவிட்டார். வரும் காலங்களில் அவரின் செயல்பாடுகள் எப்படி இருக்கின்றன எனப் பொறுத்திருந்து பார்ப்போம்.”

``சினிமாவிலிருந்து விலகி 14 ஆண்டுகள் ஆகின்றன. மீண்டும் நடிப்பீர்களா?”
``எந்த நடிகையும் பெறாத புகழை, நான் பெற்றுவிட்டேன். அரசியல் பணிக்காகவே சினிமாவிலிருந்து விலகினேன். `வைஜெயந்தி ஐ.பி.எஸ்’ மாதிரி ஒரு கதை என்றால், நடிப்பேன்.’’


“என்னை முதல்வராக்க நினைத்தார் ஜெயலலிதா!” Reviewed by Author on February 17, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.