அண்மைய செய்திகள்

recent
-

உயிரைப் பறிக்கும் கருத்தடை, கருக்கலைப்பு மாத்திரைகள்... ஓர் எச்சரிக்கை ரிப்போர்ட்!



மருத்துவர்களின் பரிந்துரையின்றி கருக்கலைப்பு மாத்திரைகளை வாங்கிச் சாப்பிடுவதால் கர்ப்பிணிகள் உயிரிழக்கும் நிகழ்வுகள் அதிகரித்து வருகின்றன. அதனால் மருத்துவரின் பரிந்துரைச்சீட்டு இல்லாமல் கருக்கலைப்பு மாத்திரைகள் வழங்கும் மருந்துக் கடைகள் மீது கண்காணிப்பைத் தீவிரப்படுத்தியுள்ளது தமிழ்நாடு மருந்துக் கட்டுப்பாட்டு இயக்ககம்.

தமிழகத்தில் அண்மையில் நடைபெற்ற தேசியச் சுகாதாரத் திட்ட ஆய்வுக்கூட்டத்தில் பங்கேற்ற அதிகாரிகள், "மருத்துவரின் பரிந்துரைச் சீட்டு இல்லாமலேயே பல மருந்துக் கடைகள் கருக்கலைப்பு மாத்திரைகளை விற்பனை செய்கின்றன. பல கர்ப்பிணிகள் மருத்துவரின் பரிந்துரை இல்லாமலேயே சுயமாக அந்த மாத்திரைகளை வாங்கிச் சாப்பிடுகின்றனர். இதனால் உயிரிழக்கும் நிகழ்வுகள் அதிகரித்து வருகின்றன" என்ற அதிர்ச்சி தகவலைத் தெரிவித்துள்ளனர். இதனால் சுகாதாரத்துறை உயர் அதிகாரிகள், மருந்துக் கடைகளைக் தீவிரமாகக் கண்காணிக்கும்படி மருந்துக் கட்டுப்பாட்டு இயக்ககத்துக்கு அறிவுறுத்தியுள்ளனர்.
கருக்கலைப்பு


இதுதொடர்பாக மருந்துக் கட்டுப்பாட்டு இயக்கக உயர் அதிகாரி ஒருவர் கூறும்போது, ``கருத்தடை மாத்திரை மற்றும் கருக்கலைப்பு மாத்திரை ஆகிய இரண்டு வகையான மாத்திரைகள் மருந்துக்கடைகளில் விற்பனை செய்யப்படுகின்றன. அதில் கருக்கலைப்பு மாத்திரைதான் மிகவும் ஆபத்தானது. பரிந்துரையில்லாமல் அந்த மாத்திரையின் மூலம் மூன்று மாதக் கருவைக்கூட கலைத்துவிட முடியும். மருத்துவர் பரிந்துரையில்லாமல் மாத்திரைகளைச் சாப்பிடும்போது பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டு, உயிரிழப்புகள்கூட ஏற்படும். அதனால் மருத்துவர் பரிந்துரையில்லாமல் கருத்தடை, கருக்கலைப்பு இரண்டு வகையான மாத்திரைகளையும் விற்பனை செய்யக் கூடாது என்பது விதி. ஆனால் சிலர் சட்டவிரோதமாகக் கருத்தடை, கருக்கலைப்பு மாத்திரைகளை விற்பனை செய்து வருகின்றனர்.
கருக்கலைப்பு மாத்திரைகளால் கர்ப்பிணிகள் உயிரிழந்த நிகழ்வுகளின் அடிப்படையில் 30 மருந்துக்கடைகளை எங்கள் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்து தீவிரமாகக் கண்காணித்து வருகிறோம். மருத்துவர் பரிந்துரைச்சீட்டு இல்லாமல் மருந்துகள் விற்பனை செய்தால், மருந்துக்கடை உரிமையாளர் மீது சட்டபூர்வ நடவடிக்கைகள் எடுக்கப்படும். அவர்களது உரிமமும் ரத்துசெய்யப்படும்" என்றார்.

கருத்தடை மாத்திரைகள்
``கருத்தடை, கருக்கலைப்பு மாத்திரைகளை சுயமாக வாங்கிச் சாப்பிடுவதால் என்னென்ன பாதிப்புகள் ஏற்படும்?" மகப்பேறு மருத்துவர் டாக்டர் காவ்யா கிருஷ்ணனிடம் கேட்டோம். 
``கருத்தடை மாத்திரை என்பது கருத்தரிப்பதைத் தடை செய்வதற்காகக் கொடுக்கப்படும் மாத்திரை. கருக்கலைப்பு மாத்திரை வயிற்றில் வளர்ந்துள்ள கருவைக் கலைப்பதற்காகக் கொடுக்கப்படுவது. இரண்டு மாத்திரைகளுக்குமான பயன்பாடு மாறுபட்டது. கருத்தடை மாத்திரைகள் விற்பனை சென்னை உள்ளிட்ட சில  இடங்களில் தடை செய்யப்பட்டுள்ளன. காரணம், இந்த மாத்திரைகளின் தோல்வி விகிதம் அதிகம். இந்த மாத்திரைகளைச் சாப்பிட்டாலும் கருத்தரிக்கும் நிகழ்வு நடந்துவிடுகிறது என்பதால் தடை செய்யப்பட்டுள்ளது. ஆனாலும் சில மருந்துக்கடைகளில் சட்டவிரோத விற்பனை நடைபெறுகிறது.


பல மருந்துக்கடைகளில் கருத்தடை மாத்திரைக்குப் பதில் கருக்கலைப்பு மாத்திரைகளைக் கொடுத்துவிடுகிறார்கள். என்ன மாத்திரை சாப்பிடுகிறோம் என்று தெரியாமலே பலர் அதை வாங்கிச் சாப்பிட்டுவிடுகிறார்கள்.
கருத்தடை மாத்திரைகளில் பல்வேறு வகை உள்ளன. எந்தெந்த மாத்திரைகளை எப்படிச் சாப்பிட வேண்டும் என்பதை மருத்துவர்தான் பரிந்துரைக்க வேண்டும். மருந்துக்கடைகளில் வாங்கிச் சாப்பிடும்போது அல்லது மாத்திரைகளைச் சரியான முறையில் எடுத்துக்கொள்ளாதபோது மாதவிடாய் சமயத்தில் அதிக ரத்தப்போக்கு, ஹார்மோன்கள் சமர்ச்சீரின்மை ஏற்படும். இதனால் மாதவிடாய் சுழற்சி சரியாக இருக்காது. உடல்பருமன், இரைப்பை அழற்சி, உயர் ரத்த அழுத்தம், ரத்தப்போக்கின்போது ரத்தம் உறைவது போன்ற பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புள்ளன. கருத்தடை மாத்திரைகளை 35 வயதுக்கு மேற்பட்டவர்கள் எடுப்பதும் ஆபத்தானது. சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம் இருப்பவர்களும் இந்த மாத்திரைகளை எடுத்துக்கொள்ளக் கூடாது.

கருக்கலைப்பு மாத்திரைகள்தாம் மிகவும் ஆபத்தானவை. கருக்கலைப்பு மாத்திரைகளை முறையாக எடுக்காவிட்டால், முழுமையான கருக்கலைப்பு நிகழாமல் போகும். இதனால் ரத்தப்போக்கு அதிகமாகும். கலைக்கப்பட்ட கருவின் மிச்சம் கர்ப்பப்பைக்குள்ளே தங்கி, கர்ப்பப்பையில் நோய்த்தொற்று ஏற்படும். கருக்கலைப்பு மாத்திரை சாப்பிடுவதற்கு முன்னால், உருவாகியிருக்கும் கரு கர்ப்பப் பைக்குள் உள்ளதா, கருக்குழாயில் தங்கியிருக்கிறதா என்பதைக் கண்டறிய வேண்டும். ஒருவேளை அந்தக் கரு, கருக்குழாயில் தங்கியிருந்தால் கருக்கலைப்பு மாத்திரைகள் சாப்பிடக் கூடாது. காரணம், கருக்கலைப்பு மாத்திரைகளால் கருக்குழாயில் தங்கியிருக்கும் கரு அங்கேயே வெடித்துச் சிதறும் வாய்ப்புள்ளது. இதனால் ரத்தஇழப்பு அதிகமாகி உயிரிழக்க நேரிடும்.

8 வாரம் வரையான கருவைக் கலைப்பதற்கு மட்டுமே கருக்கலைப்பு மாத்திரைகள் கொடுக்கப்பட வேண்டும். 8 வாரத்துக்கும் அதிகமான கருவைக் கலைப்பதற்கு இந்த மாத்திரைகளைச் சாப்பிட்டால் முழுமையான கருக்கலைப்பு நிகழாமல், ரத்தப்போக்கு ஏற்பட்டுக்கொண்டே இருக்கும். ஆனால் கரு கர்ப்பப் பைக்குள்ளேயே தங்கிவிடும். சிலர் ஒருமுறை மருத்துவர் கொடுத்த பரிந்துரைச் சீட்டைப் பயன்படுத்தி, மீண்டும் மீண்டும் மாத்திரைகளை வாங்கிச் சாப்பிடுவார்கள். இதுவும் ஆபத்தானது.
கருத்தடை, கருக்கலைப்பு மாத்திரைகள் இரண்டையுமே ஒவ்வொரு முறையும் மருத்துவரின் பரிந்துரையின்படி மட்டுமே வாங்கிச் சாப்பிட வேண்டும்" என்றார் அவர்.
- விகடன்-
உயிரைப் பறிக்கும் கருத்தடை, கருக்கலைப்பு மாத்திரைகள்... ஓர் எச்சரிக்கை ரிப்போர்ட்! Reviewed by Author on February 28, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.