இறுதி வரை நிறைவேறாத ஆசை! மருத்துவமனையில் அனாதையாக வைக்கப்பட்ட சில்க் ஸ்மிதாவின் உடல்.. கண்ணீர் கதை
தமிழ், ஹிந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய பல மொழிப் படங்களில் 450 திரைப்படங்களில் நடித்து தனக்கென தனி ரசிகர் கூட்டத்தையே உருவாக்கிய சில்க் ஸ்மிதாவின் தனிப்பட்ட வாழ்க்கை பல்வேறு சோகங்கள் நிறைந்ததாகவே இருந்தது.
விஜயலட்சுமி என்ற இயற்பெயர் கொண்ட சில்க் ஸ்மிதா 1960 ஆம் ஆண்டு டிசம்பர் 2ஆம் திகதி இந்தியாவின் ஆந்திரபிரதேச மாநிலத்திலுள்ள ஏலூரு என்ற இடத்தில் ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்தார்.
இளமையில் இவருடைய வசீகரத் தோற்றத்தினால் பலருடைய தொல்லைக்கு ஆளானார். இதனால், இவருடைய பெற்றோர்கள் இவருக்கு சிறுவயதிலேயே திருமணம் முடித்துவைத்தனர். பிறகு குடும்ப வாழ்க்கையில் ஏற்பட்ட துன்பத்தின் காரணமாக சென்னைக்கு வந்து சேர்ந்த அவர், அங்கு உறவினர் வீட்டில் தங்கி வேலைத் தேடினார்.
பின்னர் தமிழ் திரைப்பட நடிகர் வினுசக்ரவர்த்தி அவர்களால் வண்டிச்சக்கரம் என்ற தமிழ் படத்தில் அறிமுகமானார்.
குறுகிய காலத்தில் சினிமாவில் உச்சத்துக்கு சென்றாலும் அவரை ஒருவித வெறுமை துரத்தி கொண்டே இருந்தது.
அவரின் சொந்த வாழ்க்கை இருள் சூழ்ந்தபடியே இருந்தது, குடும்ப வாழ்க்கை மீது அதிக ஆசை கொண்ட சில்க் ஸ்மிதாவுக்கு அது கடைசி வரை கனவாகவே இருந்தது.
அவர் வாழ்க்கையில் பல ஆண்கள் வந்தனர், ஆனால் அவர் எதிர்பார்த்த அன்பு கடைசி வரை கிடைக்கவில்லை.
இது வரை ஒரு நல்லவனை கூட நான் பார்க்கவில்லை என ஒருமுறை சில்க் கூறிய வார்த்தையில் உள்ள அர்த்தங்கள் ஏராளம்!
ஒருமுறை பத்திரிக்கையாளர் ஒருவர் உங்களுக்கு நிறைவேறாத ஆசை உள்ளதா என சில்க்கிடம் கேட்க, நான் நக்சலைட் ஆக வேண்டும் என ஆசைப்பட்டேன், ஆனால் என் வாழ்க்கை திசைமாறியது, இருந்தாலும் அந்த நெருப்பு என் நெஞ்சில் எரிந்து கொண்டிருக்கிறது என்றார் அவர்.
கோடிகளை சம்பாதித்தாலும் குடும்பத்தை தன்னுடன் நெருங்கவிடவில்லை சில்க், இந்த தடுமாற்றமே அவர் வாழ்க்கையின் இன்னல்களுக்கு காரணம் என கூறப்படுகிறது.
அதே நேரத்தில் சொந்த படங்களை தயாரித்து நஷ்டம் ஏற்பட்டதால் கடன் அவரின் கழுத்தை நெரிக்க தொடங்கியது.
இதோடு காதல் தோல்வியாலும் அவர் துவண்டதாக கூறப்பட்டது.
இந்த சூழலில் தான் கடந்த 1996ஆம் ஆண்டு செப்டம்பர் 23ஆம் திகதி சில்க் ஸ்மிதா வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டது.
இறந்த அவரின் உடல் சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனாதையாக வைக்கப்பட்டிருந்தது.
ஒட்டுமொத்த தமிழினத்தையும் மகிழ்வித்த கலைமகள் ஒருவர் பிணவறையில் அமைதியாக தூங்கி கொண்டிருந்தாள்.
பின்னர் அவரின் தாயும், சகோதரரும் ஆந்திராவில் இருந்து சென்னை வந்து சில்க் உடலை பார்த்து கதறினார்கள். அவரை சொத்துக்காக கொன்றுவிட்டார்கள் என கூறினார்கள, இதே குற்றச்சாட்டை பலரும் முன் வைத்தனர்.
ஆனால் அவர்களின் குரல் அப்போது எடுபடவில்லை. ஏன், இன்று வரை சில்க் மரணம் கொலையா அல்லது தற்கொலையா என்ற மர்மம் நீடித்து தான் வருகிறது.
இறுதி வரை நிறைவேறாத ஆசை! மருத்துவமனையில் அனாதையாக வைக்கப்பட்ட சில்க் ஸ்மிதாவின் உடல்.. கண்ணீர் கதை
Reviewed by Author
on
September 19, 2019
Rating:
No comments:
Post a Comment