அடையாளத்தைத் தக்கவைக்க போராடும் குர்து மக்கள்: அழித்தொழிக்கத் துடிக்கும் துருக்கி -
ஒய்.பி.ஜி என அழைக்கப்படும் குர்திஷ் மக்கள் பாதுகாப்புப் படை குர்திஷ் மக்களை பாதுகாக்கிறது.
சிரியாவில் ஐ.எஸ். பயங்கரவாதிகளை ஒழித்துக் கட்டுவதில் இந்த அமைப்பு பெரும் பங்கு வகித்தது.
அமெரிக்க படைகள் மற்றும் சிரிய கிளர்ச்சிப் படைகளுடன் சேர்ந்து கொண்டு ஐ.எஸ். பயங்கரவாதிகளை ஒழித்துக் கட்டியது ஒய்.பி.ஜி., அமைப்பு.
மேலும், பிடிபட்ட ஐ.எஸ். பயங்கரவாதிகள் குர்திஷ் மக்கள் பாதுகாப்பு படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள சிறைகளில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.
சிரியாவில் நிலைமை இப்படி இருக்க துருக்கியில், குர்திஷ்களுக்கு பெரிய அளவில் மதிப்பு கிடையாது.
மேலும் தனி தேசம் கேட்கும் குர்திஷ்கள் தங்கள் நாட்டிலும், தங்கள் நாட்டின் எல்லை அருகேயும் இருப்பதை துருக்கி விரும்பவில்லை.
குர்திஷ்களின் தனி தேசத்தை விரும்பாத துருக்கி அதிபர் தாயீப் எர்டோகன் தங்கள் நாட்டிலும் சிரியாவிலும் செயல்பட்டு வரும் குர்திஷ்தான் தொழிலாளர்கள் கட்சியை ஒழித்துக் கட்ட வேண்டும் என்பதை இலக்காக கொண்டவர்.
எல்லையோரம் உள்ள குர்திஷ் இனப் போராளிகளை தீர்த்துக்கட்ட தக்க சமயத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்த துருக்கி அதிபர் எர்டோகனுக்கு,
சிரியாவில் உள்ள அமெரிக்க படைகளை திரும்ப பெறுவதாக ஜனாதிபதி டிரம்ப் வெளியிட்ட அறிவிப்பு மகிழ்ச்சியை அளித்தது.
தங்கள் நாட்டு படைகளை சிரியாவில் இருந்து வாபஸ் பெறுவதாக அறிவித்த டிரம்ப், ஒருவேளை குர்திஷ் போராளிகளுக்கு எதிராக துருக்கி போர் தொடர்ந்தால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என எச்சரித்தார். இருப்பினும் டிரம்பின் எச்சரிக்கையை பொருட்படுத்தாத துருக்கி அரசு, குர்திஷ் இனப் போராளிகளுக்கு எதிராக போரைத் தொடங்கியுள்ளது.
கடந்த புதன்கிழமை இரவில் சிரியாவின் ரஸ் அல் அயின் நகரை நோக்கி, துருக்கி ராணுவம் வான் வழித்தாக்குதலைத் தொடங்கியது.
டல் அப்யத் உள்பட 2 நகரங்களில் துருக்கி ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது.
துருக்கியின் தாக்குதலால் உயிருக்கு அஞ்சி அங்கு வசிக்கும் 2 லட்சம் மக்கள், தங்கள் இருப்பிடங்களை விட்டு கூட்டம் கூட்டமாக வெளியேறி வருகின்றனர்.
இதுவரை ஒய்.பி.ஜி. போராளிகள் குழுக்களின் 181 முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக துருக்கி கூறியுள்ளது.
துருக்கியின் இராணுவ நடவடிக்கையின் முதல் நாளில் 8 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் பலர் காயமடைந்தனர் என தகவல் வெளியாகி உள்ளது.
மேலும், சிரியாவின் எல்லையை ஒட்டிய அக்காக்கலே என்ற இடத்தில் துருக்கி ராணுவ டாங்குகள் குவிக்கப்பட்டுள்ளன.
இந்தப் போரால், சிரியா மட்டுமல்லாமல் உலக நாடுகளில் ஐ.எஸ். பயங்கரவாதம் மீண்டும் தலைதூக்க வாய்ப்பு இருப்பதாக உலக நாடுகள் கவலை தெரிவித்துள்ளன.
அடையாளத்தைத் தக்கவைக்க போராடும் குர்து மக்கள்: அழித்தொழிக்கத் துடிக்கும் துருக்கி -
Reviewed by Author
on
October 12, 2019
Rating:
No comments:
Post a Comment