அண்மைய செய்திகள்

recent
-

கிறிஸ்துமஸ் தீவு: கொரோனா வைரசுக்கான கண்காணிப்பு பிரதேசத்தில் தமிழ் அகதி குடும்பம்

சீனாவின் வுஹான் நகரிலிருந்து அழைத்து செல்லப்பட்ட ஆஸ்திரேலியர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளதா என்பதை கண்காணிக்க, கிறிஸ்துமஸ் தீவில் அவர்கள் தனித்து வைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், இவ்விவகாரம் குறித்து எந்தவொரு தகவலும் கிறிஸ்துமஸ் தீவில் வைக்கப்பட்டுள்ள தமிழ் அகதி குடும்பத்திற்கு வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகின்றது.

பிரியா- நடேசலிங்கம் எனும் தமிழ் அகதி குடும்பத்திற்கு ஆஸ்திரேலியாவில் தஞ்சம் வழங்குவது தொடர்பான வழக்கு, ஆஸ்திரேலிய நீதிமன்றத்தில் நடந்து வரும் சூழலில் ‘கொரோனா வைரஸ்’ விவகாரம் புதியதொரு அச்சத்தை இக்குடும்பத்திடையே ஏற்படுத்தியுள்ளது.கடந்த 2012 யில் படகு வழியாக இலங்கையிலிருந்து வெளியேறி ஆஸ்திரேலியாவில் தஞ்சமடைந்திருந்த நடேசலிங்கமும், 2013 யில் தஞ்சமடைந்திருந்த பிரியாவும் ஆஸ்திரேலியாவில் சந்தித்த பின் திருமணம் செய்து கொண்டனர். தஞ்சக்கோரிக்கையாளர்களான அவர்களுக்கு ஆஸ்திரேலியாவிலேயே இரு பெண் குழந்தைகள் (கோபிகா, தருணிகா) பிறந்தன.

ஆஸ்திரேலியாவின் பிலோயலா (Biloela) நகரில் வசித்து வந்த இவர்களின் விசா, கடந்த மார்ச் 2018ல் காலாவதியாகியதாக கைது செய்யப்பட்டு மெல்பேர்ன் தடுப்பு முகாமில் வைக்கப்பட்டனர். அண்மையில், அவர்கள் இலங்கைக்கு நாடுகடத்தப்பட இருந்த நிலையில் அம்முயற்சி கடைசி நிமிட நீதிமன்ற தலையீட்டால் தடுத்து நிறுத்தப்பட்டது. பின்னர், அவர்களை கிறிஸ்துமஸ் தீவுக்கு கொண்டு சென்றது ஆஸ்திரேலிய அரசு. 

பிரியா, நடசேலிங்கத்தின் தஞ்சக்கோரிக்கைக்கான அத்தனை விதமான சட்ட வாய்ப்புகளும் பயன்படுத்தப்பட்டுவிட்ட நிலையில், இரண்டு வயது குழந்தை தருணிகாவுக்கு பாதுகாப்பு விசா வழங்கப்பட்டால் இக்குடும்பம் ஆஸ்திரேலியாவில் வாழக்கூடிய சூழல் ஏற்படலாம் என சொல்லப்படுகின்றது. இந்த நிலையில், இது தொடர்பாக விரைவில் நடக்கக்கூடிய நீதிமன்ற விசாரணை முக்கியத்துவம் மிகுந்ததாக பார்க்கப்படுகின்றது.   இக்குடும்பம் முன்பு வசித்த குவின்ஸ்லாந்த் பகுதியிலிருந்து சுமார் 4000 கிலோ மீட்டருக்கு அப்பாலுள்ள கிறிஸ்துமஸ் தீவு தடுப்பு முகாமில் தற்போது வைக்கப்பட்டுள்ளனர். இந்திய பெருங்கடலில் உள்ள இத்தீவு, ஆஸ்திரேலியா நிர்வகிக்கும் பகுதியாக இருந்து வருகின்றது.

கொரோனா வைரசால் மீண்டும் பெரும்பாலானோரால் விவாதிக்கப்படும் பகுதியாக கிறிஸ்துமஸ் தீவு இருந்து வரும் நிலையில், பிரியாவை தொடர்பு கொண்டு பேசிய சுதந்திர பத்திரிகையாளர் ரெபிகே ஹோல்ட்,”வுஹானிலிருந்து வெளியேற்றப்பட்ட மக்களுக்கான மையமாக இத்தீவை பயன்படுத்தும் அரசின் திட்டத்தை பிரியாவின் குடும்பம் அறிந்திருக்கவில்லை,” எனக் கூறியிருக்கிறார்.

கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்கான பகுதி முழுக்க முழுக்க தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசம் எனக் கூறியுள்ளார் ஆஸ்திரேலிய உள்துறை அமைச்சர் பீட்டர் டட்டன்.

அரசின் இம்முடிவை குறித்து அதிர்ச்சி தெரிவித்துள்ள இக்குடும்ப வழக்கறிஞர், “அனைவரிடம் இருந்தும் தனிமைப்படுத்தப்பட்டவர்களாக அவர்கள்(வுஹானிலிருந்து வெளியேற்றப்பட்டவர்கள்) கிறிஸ்துமஸ் தீவில் வைக்கப்பட்டிருக்கும் போது, பிரியா குடும்பத்தை கிறிஸ்துமஸ் தீவில் வைத்திருப்பது சரியாக இருக்காது,” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.


கிறிஸ்துமஸ் தீவு: கொரோனா வைரசுக்கான கண்காணிப்பு பிரதேசத்தில் தமிழ் அகதி குடும்பம் Reviewed by Author on February 09, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.