மன்னாரின் நிலமை பல்வேறு கோரிக்கை அடங்கிய கடிதம் மன்னார் மறைமாவட்ட பொது நிலையினர் ஆணைக்குழுவினால் அரசாங்க அதிபருக்கு கையளிப்பு.
மன்னார் மாவட்டத்தின் வனப்பகுதிகள், கடற்பகுதிகளின் பாதுகாப்பை, எல்லைக் கண்காணிப்பை இறுக்கமாக பேணுவதன் மூலம் பாதிப்புகளிலிருந்து எமது மாவட்ட மக்களைப் பாதுகாக்க முடியும் என மன்னார் மறைமாவட்ட பொது நிலையினர் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இவ்விடையம் தொடர்பாக மன்னார் மறைமாவட்ட பொது நிலையினர் ஆணைக்குழு செவ்வாய்க்கிழமை 07-04-2020 மன்னார் மாவட்ட அரசாங்க அதிபருக்கு அசர கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளது.
குறித்த கடிதத்தில் மேலும் குறிப்பிடுகையில்,,,
மன்னார் மறைமாவட்ட பொது நிலையினர் ஆணைக்குழு ஆகிய நாம் கொவிட் 19 தடுப்பு நடவடிக்கைக்காக தாங்கள் மற்றும் அனைத்து தரப்பினரும் முன்னெடுத்துவரும் நடவடிக்கைகளுக்கு மக்கள் சார்பான நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவிக்கும் அதேநேரம், நாம் ஊடகங்களினுடாக மன்னார் மக்களின் அமைப்பு சார் பிரதிநிதிகளிடம் தொடர்பு கொண்டு கலந்துரையாடியதற்கு அமைய பின் வரும் பரிந்துரைகளையும் வேண்டுகோளையும் தங்களிடம் முன்வைக்க விரும்புகின்றோம்.
மன்னார் மாவட்ட எல்லை பாதுகாப்பும் அத்துமீறி உள் நுழைவதைத் தடுத்துல்.
மன்னார் மாவட்டம் இதுவரை கொரோனா தொற்றிலிருந்து பாதுகாப்பான தொற்றற்ற மாவட்டமாக இருந்து வருகின்றது. இதனை அடுத்துள்ள மாவட்டங்களில் சில அபாய நிலையான மாவட்டங்களாக காணப்படுகின்றது.
இதன் காரணத்தினால் மக்களின் விளக்கமற்ற தன்மையால் சுய தனிமைப்படுத்தல்களைத் தவிர்க்க மீன்பிடித் தொழிலாளர் போன்று கடல் மார்கமாகவோ, அல்லது காடுகளினூடாகவோ பிற மாவட்ட மக்கள் மன்னார் மாவட்டத்திற்கு ஊடுருவ வாய்புகள் அதிகம். அது அவர்களை தொற்றிலிருந்து பாதுகாக்காது என்பதை அவர்கள் அறிந்திருக்காமையே அதற்கு காரணம்.
இருப்பினும் அது எமது மாவட்டத்தினை அபாய நிலைக்கு இட்டுச்செல்லலாம். எனவே நாம் வனப்பகுதிகள், கடற்பகுதிகளின் பாதுகாப்பை, எல்லைக் கண்காணிப்பை இறுக்கமாக பேணுவதன் மூலம் இத்தகைய பாதிப்புகளிலிருந்து எமது மாவட்ட மக்களைப் பாதுகாக்கலாம்.
இது தொடர்பாக உயர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்துவதன் மூலமும் எல்லையோர மக்களுக்கு விழிப்புணர்வடையச் செய்வதன் மூலமும் இத்தகைய நடவடிக்கைகளில் வெற்றியடைய முடியும்.
மாவட்ட ரீதியான அனுமதிச்சிட்டை நடை முறை
தற்போது அத்தியாவசிய பொருள் விநியோகத்திற்கென வழங்கப்படும் அனுமதிச்சிட்டை அந்தந்த பொலிஸ் பிரிவுடனும், பிரதேச செயலாளர் பிரிவுடனும் முடிவடைவதால் மக்கள் சில அசௌகரியங்களை சந்திக்கின்றனர்.
உதாரணமாக முசலி பிரதேச வியாபாரி மன்னார் நகரத்திற்கு வரவேண்டுமெனில் அவர் 3 பிரதேச செயலகங்கள், பொலிஸ் பிரிவில் அனுமதி பெறவேண்டியுள்ளது.
தற்போது மட்டுப்படுத்தப்பட்டுள்ள கால இடவெளியில் இது சிரமமாக உள்ளது.
எனவே ஒரு இடத்தில் பெறப்படும் அனுமதிச் சிட்டை குறித்த தேவையைப் பூர்த்திசெய்யக்கூடிய வகையில் அமைந்தால் அது உரியவர்களின் நேரத்தை மிச்சப்படுத்துவதுடன் அசௌகரியங்களை தவிர்க்க உதவும்.
மன்னார் மாவட்ட எல்லைகளில் வர்த்தக பொருள் பரிமாற்றம்.
தங்களால் இப்பொழுது நடைமுறைப்படுத்தப்படுகின்ற உயிலங்குள வர்த்தகப் பரிமாற்று நிலையத்தை மன்னார் மாவட்ட எல்லையாகிய பறையநாலான்குளப் பகுதிக்கு நகர்த்த முயற்சித்தல். முசலி, மடு, நானாட்டான் பிரதேச செயலக பகுதிகளும் பாதுகாக்கப்பட வாய்புகள் அதிகம். அதேபோல் வெள்ளாங்குளத்தை அண்மித்து யாழ் வழி பொருள் கைமாற்றலைக் கட்டுப்படுத்தல்.
வேளி மாவட்ட கடலுணவு வர்த்தகர்கள் தொடர்பாக.
யாழ் மாவட்டம் உள்ளிட்ட பிற இட கடலுணவு வர்த்தகர்கள் மன்னாருக்கு வந்து கடலுணவைக் கொள்வனவு செய்கிறார்கள். அவர்கள் வருகின்றபோது யாருக்காவது தொற்று இருக்குமாயின் அவர் மூலமாக மன்னார் வர்த்தகர்களுக்கும், மக்களுக்கும் பரவ வாய்ப்புள்ளது.
எனவே உலருணவு மாவட்ட எல்லைப் பரிமாற்றம் போன்று கடலுணவுகளையும் மாவட்ட எல்லைகளில் கைமாற்றிவிடுகின்ற பொறிமுறை உருவாக்கி செயற்படுத்தினால் அதன்மூலம் பாதுகாப்பினை அதிகரிக்கலாம்.
பொருட்களின் மானிய விலைகள் மற்றும் விலைக்கட்டுப்பாடுகள்
அரசினால் விதிக்கப்பட்டுள்ள விலைக்கட்டுப்பாடுகள், மனிய விலைகள் ஆகியன மக்களை உரியவகையில் சென்றடைவதை விலைக்கட்டுப்பாட்டு உத்தியோகத்தர்கள், விநியோகஸ்தர்கள் மூலமாக உறுதிசெய்தல். இதன்போது மக்கள் செறிவடைவதைக் குறைக்க உள்ளுர் வர்த்தகர்கள் திறந்த வீதியோர வியாபாரம் மூலம் கடலுணவு, மரக்கறி, அத்தியாவசிய உலருணவு ஆகியவற்றை அங்காங்கே விற்பனை செய்வதை ஊக்குவித்தல். மன்னார் மாவட்ட வர்த்தகர்களுக்கு அடையாள அட்டைகளை வழங்குவதுடன், விற்பனையின்போது அதை காட்சிப்படுத்தச்செய்தல்.
உள்ளுர் உற்பத்தி ஊக்குவிப்பு, விநியோகம், மற்றும் நகரப்புற வீட்டுத்தோட்டங்கள்
தற்போது எமது மாவட்ட கிராமங்களில் உள்ள தோட்டச்செய்கைகளை ஊக்குவித்து அவற்றின் உற்பத்தி தொடர்பான தகவல்களைத் திரட்டி மாவட்ட ரீதியில் விநியோகிக்க வலையமைப்பு உருவாக்க நடவடிக்கை எடுத்தல். நெல் உற்பத்தியில் இயன்றளவு உள்ளுர் வளங்களைப் பயன்படுத்துவது மாவட்டக் கட்டுப்பாடுகளுக்கு துணைநிற்கும்.
அதேவேளை நகர்புற மக்கள் மாடித்தோட்ட முறைகளை இணையங்களில் பார்வையிட்டு வீட்டுத்தோட்டங்களை உருவாக்கினால் அது சுயதேவைப் பூர்த்தியடைந்த மாவட்டமாக எமது மாவட்டத்தினை மாற்ற ஓரளவு பயன்தரும். இதற்கு அரச, அரச சார்பற்ற விவசாய அமைப்புகள் முன்னவருதை ஊக்குவித்து உறுதிசெய்தல் வேண்டும்.
மேற்குறித்த நடவடிக்கைகள் மன்னார் மாவட்ட மக்களைப் பாதுகாக்க அரச அதிகாரிகள், அரச சார்பற்ற நிறுவனங்கள், சமுக அமைப்புகள் பொது ஆர்வலர்கள் என உள்ளடக்கியதாக மாவட்ட எதிர்கால திட்டமிடல் குழு ஒன்று அமைத்து இத்தொற்றினால் அடுத்துவரும் மாதங்களில் ஏற்படக்கூடிய பொருளாதார சமுக நெருக்கடிகளை முகங்கொடுக்க தயாராகுதல்.
தாங்கள் ஏலவே எடுத்திருக்கும் நடவடிக்கைகளுக்கு வலுச்சேர்ப்பனவாய் அமையும் என நம்புவதோடு பிற மாவட்டங்களும் தத்தம் மாவட்டங்களில் இத்தகைய நடவடிக்கைகளை பரிசீலித்து தமக்கேற்றாற்போல் நடைமுறைப்படுத்தி கொவிட் 19 தொற்றிலிருந்து எமது நாட்டைப் பாதுகாப்போம்.
தங்களுடன் இணைந்து செயலாற்ற எமது ஆணைக்குழு எப்பொழுதும் தயாராக உள்ளது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கின்றோம்.என குறித்த கடித்ததில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மன்னாரின் நிலமை பல்வேறு கோரிக்கை அடங்கிய கடிதம் மன்னார் மறைமாவட்ட பொது நிலையினர் ஆணைக்குழுவினால் அரசாங்க அதிபருக்கு கையளிப்பு.
Reviewed by Author
on
April 08, 2020
Rating:
No comments:
Post a Comment