மன்னார் மாவட்டத்தில் மாவீரர் தினத்தை நினைவு கூற மன்னார் நீதிமன்றம் விதித்த தடை உத்தரவு நீடிப்பு
தடை உத்தரவிற்கு எதிராக தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வீ.எஸ்.சிவகரன் மன்னார் நீதிமன்றத்தில் இன்றைய தினம் நகர்தல் பத்திரம் ஒன்றை தாக்கல்செய்தார்.
-இதன் போது குறித்த வழக்கு விசாரனை சார்பாக ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தலைமையில் மன்னார் மாவட்ட சட்டத்தரணிகள் மன்னார் நீதிமன்றத்தில் முன்னிலையாகி இருந்தனர்.
மன்னார் நீதவான் எம்.கணேசராஜா முன்னிலையில் நேற்று திங்கட்கிழமை காலை குறித்த வழக்கு விசாரனைகளுக்காக மன்னார் நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதன் போது குறித்த உத்தரவை வழங்க நீதவான் நீதிமன்றத்திற்கு சட்டத்திலே நியாயதிக்கம் கொடுக்கப்படவில்லை என ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் மன்றில் சமர்ப்பணம் செய்தார்.
மேலும் நீதிமன்றத்திற்கு நியாயதிக்கம் இல்லாது இருந்த போதும் கூட பொறுப்பானவர்கள் என்ற அடிப்படையில் நாங்கள் எந்த சட்டத்தையும் மீற மாட்டோம். சுகாதார நடை முறைகளை கையாளுவோம்.
பொது நிகழ்வை நடாத்தினால் சுகாதார அதிகாரிகளின் அனுமதியை பெற்றுச் செய்வோம்.
என்கின்ற உத்தரவாதங்களையும் நீதிமன்றத்திற்கு வழங்கி தடை உத்தரவை நீக்குமாறு கோரி இருந்தனர்.
எனினும் மன்னார் நீதவான் குறித்த தடை உத்தரவை நீக்க மறுத்துள்ளார்.
தமிழீழ விடுதலைப்புலிகள் உள் நாட்டிலும்,வெளி நாட்டிலும் தடை செய்யப்பட்ட இயக்கமாக இருக்கின்ற காரணத்தினால் குறித்த நிகழ்வுகளை நடாத்த முடியாது எனவும், கொரோனா வைரஸ் தொற்று ஆபத்தான நிலமையில் இருப்பதினாலும் மக்கள் ஒன்று கூடினால் குறித்த தொற்று பரவக்கூடிய சூழ்நிலை காணப்படுகின்றமையினாலும் ஏற்கனவே பொலிஸார் ஊடாக வழங்கப்பட்ட உத்தரவுகளை நீடிப்பதாகவும் நீதவான் தெரிவித்தார்.
இதற்கமைவாக மன்னார் மாவட்டத்தில் மாவீரர் தினத்தை நினைவு கூற மன்னார் நீதிமன்றம் விதித்த தடை உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது.
மன்னார் மாவட்டத்தில் மாவீரர் தினத்தை நினைவு கூற மன்னார் நீதிமன்றம் விதித்த தடை உத்தரவு நீடிப்பு
Reviewed by Author
on
November 23, 2020
Rating:
No comments:
Post a Comment