மன்னார் எண்ணை வள ஆராய்வில் இந்திய நிறுவனம்; காங்கேசன்துறை சீமெந்து ஆலையும் இந்திய நிறுவனத்திற்கு
கெய்ன் இந்தியா [ Cairn India (Pvt Ltd) ] என்ற நிறுவனமே எண்ணெய் வள ஆய்வில் ஈடுபட்டுள்ளது.
கெய்ன் இந்தியாவின் துணை நிறுவனமான கெய்ன் லங்கா [ Cairn Lanka ], கடற்படுக்கையில் எண்ணெய் இருக்கிறதா என்பது பற்றிய ஆய்வில் ஈடுபட்டுள்ளது.
இதற்கென ‘வைகிங்’ [ SR/V Viking II ] என்ற ஆழ்துளையிடும் வசதியுள்ள ஆய்வுக் கப்பல் ஒன்று மன்னார் கடற்படுக்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
கடந்த 11ஆம் திகதி, இந்தக் கப்பல் கொழும்புத் துறைமுகத்தில் தரித்து நின்ற போது அங்கு விஜயம் செய்த சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச அதன் செயற்பாடுகள் தொடர்பாகக் கேட்றிந்திருந்தார்.

தற்போது இந்த ஆய்வுக் கப்பல் மன்னார் கடற்படுக்கையில் ஆய்வுகளை ஆரம்பித்துள்ளது; முப்பரிமாண தகவல் சேகரிப்பு நடவடிக்கைள் முதற்கட்டமாக மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்த வேலைத் திட்டம் அடுத்த வருடம் மார்ச் மாதத்துக்குள் நிறைவடையும்.
இதன் பின்னர் எண்ணெய் வளம் பற்றிய அனைத்து ஆய்வு முடிவுகளும் அடுத்த வருட நடுப்பகுதிக்குள் இறுதி செய்யப்படும்.
இந்த ஆய்வின் போது - எண்ணெய் வளம் இருப்பது உறுதி செய்யப்பட்டால் 2011ஆம் ஆண்டில் ஆழ்துளையிடும் பணிகள் ஆரம்பிக்கப்படும் என்று கெய்ன் லங்கா நிறுவனத்தின் பணிப்பாளர் இந்திரஜித் பனர்ஜி தெரிவித்துள்ளார்.
இந்த எண்ணெய் அகழ்வுக்காக கெய்ன் இந்தியா நிறுவனம் 110 மில்லியன் டொலரை முதலீடு செய்துள்ளது.
எட்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ள மன்னார் கடற்படுக்கைப் பகுதியின் ஒரு பகுதியே கெய்ன் இந்தியாவுக்கு வழங்கப்பட்டுள்ளது; இது 3000 சதுர கி.மீ பரப்பளவுடைய பகுதியாகும்.
இந்தப் பகுதியில் 400 தொடக்கம் 1900 மீற்றர் வரையான ஆழத்துக்கு துளையிட்டு ஆய்வுகளை மேற்கொள்வதற்கு இந்த நிறுவனத்துக்கு கடந்த 2007ஆம் ஆண்டில் சிறிலங்கா அரசு அனுமதியளித்திருந்தது.
கடந்த வருடம் இதற்கான உடன்பாட்டைச் செய்து கொண்ட கெய்ன் லங்கா நிறுவனம், முற்பணமாக - ஒரு மில்லியன் டொலரை சிறிலங்கா அரசுக்கு வழங்கியிருந்தது.

கெய்ன் இந்தியா நிறுவனம் தற்போது ராஜஸ்தானில் எண்ணெய் அகழ்வில் ஈடுபட்டுள்ளது; தினமும் இந்த நிறுவனம் 20,000 பீப்பாய் எண்ணெயை உற்பத்தி செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
இப்போது தான் - முதல் முறையாக இந்த நிறுவனம் இந்தியாவுக்கு வெளியே முதலீடு செய்துள்ளது.
அதே வேளை - காங்கேசன்துறை சீமெந்து ஆலையையும் இந்திய நிறுவனம் ஒன்றிடம் ஒப்படைப்பதற்கான முயற்சிகள் நடப்பதாகத் தகவல்கள் கசிகின்றன.
தொடர்புபட்டசெய்தி -
மன்னாரில் இந்தியக்கலம் தனது ஆய்வைத் தொடங்கியது
எண்ணெய்ப் படிவு
மன்னார் எண்ணை வள ஆராய்வில் இந்திய நிறுவனம்; காங்கேசன்துறை சீமெந்து ஆலையும் இந்திய நிறுவனத்திற்கு
Reviewed by NEWMANNAR
on
October 31, 2009
Rating:

No comments:
Post a Comment