ஆடித் திருவிழாவுக்கு தயாராகும் மடுத்திருப்பதி

யூலை 02ஆம் திகதி (திங்கள் கிழமை) ஆடித் திருவிழா நாள் ஆகும். அன்றைய தினம் காலை 6.15 மணிக்கு இடம்பெறும் பெருவிழாத் திருப்பலியை சிலாப மறைமாவட்ட ஆயர் மேதகு வலன்ஸ் மெண்டிஸ் ஆண்டகை, கொழும்பு உயர் மறைமாவட்ட துணை ஆயர் மேதகு இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை, மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இரா. யோசேப்பு ஆண்டகை ஆகியோரும் குருக்களும் இணைந்து கூட்டுத்திருப்பலியாக ஒப்புக்கொடுப்பர்.
திருவிழாத்திருப்பலியைத் தொடர்ந்து மடு அன்னையின் திருச்சுருவப் பவனியும் திருச்சுருவ ஆசீரும் இடம்பெறும்.
திருவிழாவுக்கு முதல் நாள் யூலை 01ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நற்கருணை தினமாகும். அன்றைய நாள் ஞாயிறு தினமாக இருப்பதனால் காலை 6.00 மணிக்கு தமிழிலும், 7.00 மணிக்கு சிங்களத்திலும் திருப்பலிகள் ஒப்புக்கொடுக்கப்படும். அன்றைய நாள் மாலை வழிபாடுகள் 6.15 மணிக்கு திருச்செபமாலயுடன் ஆரம்பமாகும். அதைத்தொடர்ந்து தமிழ் சிங்கள மொழிகள் இணைந்ததாக திருப்பலி ஒப்புக்கொடுக்கப்படும். திருப்பலியைத் தொடர்ந்து நற்கருணை ஆராதனை, மறையுரைகள், நற்கருணைப் பவனி, நற்கருணை ஆசீர் ஆகியவை இடம்பெறும் என அருட்திரு தமிழ் நேசன் அடிகளார் ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.
மன்னார் மறைமாவட்டத்தில் தொடர்பாடல் துறைக்குப் பொறுப்பாக இருக்கும் அருட்திரு தமிழ் நேசன் அடிகளார் மடுத்திருவிழா பற்றி செய்தி ஊடகங்களுக்கு விடுத்த அறிக்கையில் மேலும் தெரிவித்ததாவது:
இவ்வாண்டு மடுத்திருப்பதியின் ஆடித்திருவிழாவுக்கான அனைத்து பூர்வாங்க ஏற்பாடுகளையும் மடுப் பரிபாலகர் அருட்திரு. எமிலியானுஸ்பிள்ளை அவர்கள் மேற்கொண்டுள்ளார். மன்னார் ஆயரின் வழிநடத்தலில் மன்னார் மறைமாவட்ட குருக்கள் மற்றும் ஏனைய மறைமாவட்டக்; குருக்களின் ஒத்துழைப்போடு மடுப்பரிபாலகரின் தலைமையில் திருவிழா ஆயத்தங்கள் இடம்பெற்று வருகின்றன.
மடு யாத்திரிகர்களின் வசதிக்காக, போக்குவரத்து ஒழுங்குகள், தண்ணீர் வசதிகள், சுகாதார வைத்திய சேவைகள், பாதுகாப்பு ஒழுங்குகள் போன்றன செய்யப்பட்டுள்ளன. புதிதாக அமைக்கப்பட்ட குளாய்களில் குடிதண்ணீர் மற்றும் பாவனைக்கான தண்ணீர் வழங்கப்படுகின்றன. உணவுப் பொருட்களை புதிதாக அமைக்கப்பட்ட சந்ததைப் பகுதியில் பெற்றுக்கொள்ளலாம்.
மருதமடுத் திருத்தலம் ஒரு வியாபார ஸ்தலமோ அல்லது சுற்றுலாப் பகுதியோ அல்ல. பல நூற்றாண்டுகளாக ஆன்மீக மனமாற்றமும், அமைதியும் அருளும் புனிதமான திருத்தலமாகும். எனவே இத்திருத்தலத்திற்கு யாத்திரிகர்களாக வருவோர் இத்தலத்தின் புனிதத்தன்மைக்கு ஏற்ப நடந்துகொள்ளவேண்டும் என அறிவுறுத்தப்படுகின்றனர். திருத்தலத்தின் புனிதத்திற்குப் பொருந்தாத ஆடல், பாடல், சீட்டு விளையாடுதல், இசைக்கருவிகளைப் பயன்படுத்துதல் போன்ற கேளிக்கைகளும், மது அருந்துதலும், மது விற்றலும் முற்றாக தடைசெய்யப்பட்டுள்ளன. இத்திருத்தலத்தில் கண்ணியமான நடத்தையைப் பேணும்படியாகவும், மரியாதையான ஆடைகளை அணியுமாறும் யாத்திரிகர்கள் வேண்டப்படுகின்றார்கள்.
மிதிவெடி அபாயங்கள் இன்னும் இருப்பதால் மிதிவெடி அகற்றப்;படாத காட்டுப்பகுதிக்குள் செல்வதும், மரங்களை வெட்டுவதும் முற்றாகத் தடைசெய்யப்பட்டுள்ளன. மடு அன்னையின் பரிந்துரையையும் ஆசியையும் வேண்டி இத்திருத்தலத்திற்கு வரும் அனைத்து மக்களும் அன்போடு வரவேற்கப்படுகின்றார்கள்.
ஆடித் திருவிழாவுக்கு தயாராகும் மடுத்திருப்பதி
Reviewed by NEWMANNAR
on
June 29, 2012
Rating:

No comments:
Post a Comment