ஹல்துமுல்லையில் சுமார் 5 ஏக்கர் நிலப்பரப்பில் மண் சரிவு
ஹல்துமுல்லை, நிக்கபொத்த பகுதியில் சுமார் 5 ஏக்கர் நிலப்பரப்பில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது.
இறப்பர் தோட்டமொன்றிலேயே இந்த மண் சரிவு ஏற்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
மண் சரிவு அபாயம் காரணமாக ஹல்துமுல்லை, நிக்கபொத்த பகுதியில் 5 வீடுகளைச் சேர்ந்த மக்களுக்கு அங்கிருந்து வெளியேறுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் தாம் எங்கு செல்வதென்று அறியாது தவிக்கின்றனர் அப்பகுதி மக்கள்.
எவ்வாறாயினும் மண் சரிவினால் ஏற்பட்ட சேதங்கள் தொடர்பில் இதுவரை தகவல் பதிவாகவில்லை என இடர் முகாமைத்துவ நிலையத்தின் பதுளை மாவட்ட உதவிப் பணிப்பாளர் ஈ.எல்.ஏ.எம்.உதயகுமார குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, மண்சரிவு ஏற்பட்டுள்ள பகுதியில் தேசிய கட்டட ஆய்வு நிலையம் ஆய்வுகளை ஆரம்பித்துள்ளது.
இந்த ஆய்வுகள் நிறைவுபெற்றதும் மண் சரிவு அபாயம் குறித்து மதிப்பீடு செய்து அடுத்தக் கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக, இடர் முகாமைத்துவ நிலையத்தின் பதுளை மாவட்ட உதவிப் பணிப்பாளர் கூறியுள்ளார்.
இதேவேளை எல்ல – வெல்லவாய வீதியை பயன்படுத்துவோர் விழிப்புடன் இருக்க வேண்டும் என இடர் முகாமைத்துவ நிலையம் அறிவுறுத்தியுள்ளது.
அந்த வீதியின் சில பகுதிகளில் கற்கள் மற்றும் மண் மேடுகள் சரிந்து விழும் அபாயம் நிலவுவதாக நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.
நேற்றிரவு முதல் எல்ல – வெல்லவாய வீதியின் சில பகுதிகளில் கற்கள் சரிந்து வீழ்ந்த வண்ணமுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் குறிப்பிட்டது.
அத்துடன் வீதியின் போக்குவரத்து நடவடிக்கைகளுக்கும் பாதிப்பு ஏற்பட்டதாக நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் கூறினார்.
மண் சரிவு தொடர்பிலான ஏதேனும் பிரச்சினைகள் ஏற்படும் பட்சத்தில் 117 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பினை ஏற்படுத்தி அறிவிக்க முடியும் எனவும் இடர்
முகாமைத்துவ நிலையம் குறிப்பிட்டுள்ளது.
ஹல்துமுல்லையில் சுமார் 5 ஏக்கர் நிலப்பரப்பில் மண் சரிவு
 
        Reviewed by NEWMANNAR
        on 
        
April 20, 2015
 
        Rating: 
      
 
        Reviewed by NEWMANNAR
        on 
        
April 20, 2015
 
        Rating: 


No comments:
Post a Comment