மீண்டும் இயங்கும் உலகின் மிகப் பெரிய பௌதிக ஆராய்ச்சிக் கூடம்
நவீன உலகின் மிகப் பெரியதும் சக்தி வாய்ந்ததுமான பௌதிக ஆராய்ச்சிக் கூடமான சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் அமைந்துள்ள CERN ஆராய்ச்சிக் கூடம் 2 வருட கால இடைவெளிக்குப் பின் மறுபடி இயங்கத் தொடங்கியுள்ளது.
LHC என அழைக்கப் படும் இந்தத் துகள் முடுக்கி (particle accelerator) தான் நவீன உலகின் மிகப் பெரிய எந்திரம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே மார்ச் மாதம் இயக்கத் திட் டமிடப்பட்டிருந்த இதன் பணி சில சிக்கல்களால் தள்ளிப் போடப் பட்டு சில தினங் களுக்கு முன் மறுபடி இயக்கப் பட்டுள்ளது. அணுசக்தி ஆராய்சிக்கான ஐரோப்பிய நிறுவனத்தின் (CERN) விஞ்ஞானிகள் தமது இறுதிப் பரிசோதனைகளை நிறைவு செய்த பின்னர் LHC இன் 27 Km நீளமான வளையத்துக்குள் முதலாவது அணுக் கற்றைகளைச் செலுத்தித் தமது ஆய்வைத் தொடங்கினர்.
இன்றைய பௌதிக உலகுக்கு துணை அணுத் துகள்கள் குறித்த அவசியமான சான்றுகளை (evidence) சேகரிக்கும் பௌதிகவியலாளர் சமூகத்தின் முக்கிய தேவையைப் பூர்த்தி செய்வதே எமது எதிர்பார்ப்பு என CERN ஆய்வு கூட இயக்குநர் ரோல்ஃப் ஹேயர் அதன் உத்தியோகபூர்வ இணையத் தளத்தில் தெரிவித்துள்ளார்.
LHC எந்திரமானது ஒரு செக்கனுக்கு 600 மில்லியன் துகள்களை சுமார் 10 மணி நேரங்களுக்கு தொடர்ச்சியாக சுழலும் கற்றை மூலம் உருவாக்குகின்றது. இந்தத் துகள்கள் ஒளியின் வேகத்துக்கு அண்மையில் பூமியில் இருந்து நெப்டியூனுக்குச் சென்று மீளத் திரும்ப எடுக்கும் மொத்தத் தூரத்தின் அதாவது 10 பில்லியன் Km களுக்கும் அதிகமாகப் பயணிக்க உந்தப் படுகின்றன. அதாவது LHC இற்குள் ஒர் புரோட்டோன் ஆனது ஒளியின் வேகத்துக்கு அண்மையில் ஒரு செக்கனுக்கு 11 245 சுற்றுக்களை மேற்கொள்கின்றது. சுமார் ஆயிரக் கணக்கான விஞ்ஞானிகளும், பொறியியலாளர்களும் தொழிநுட்பவியலாளர்களும் இணைந்து ஜெனீவா ஏரிக்கும் ஜூரா மலைத் தொடருக்கும் இடையே அமைந்துள்ள இந்த ஆய்வு கூடத்தில் இந்த மிக நீண்ட ஆராய்ச்சியை மேற்கொள்வதற்கான காரணம் இவ்வாறு விளக்கப்படுகின்றது:
அதாவது இன்று பெரும்பாலான அறிவியலாளர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ள பிரபஞ்சத்தின் தோற்றத்துக்குக் காரணமான பெரு வெடிப்பின் (Big Bang) சில கணங்களுக்குப் பின் சக்தியின் அடர்த்தி மற்றும் வெப்பநிலை உட்பட துகள் அடிப்படையில் நிலவிய நிபந்தனைகளை மீள செயற்கை முறையில் உருவாக்கி பிரபஞ்சம் எவ்வாறு பரிணாமம் அடைந்தது என்பதை அறிந்து கொள்வதே CERN இல் மேற் கொள்ளப் படும் பரிசோதனைகளின் பிரதான நோக்கமாகக் கூறப்படுகின்றது.
இதற்கு முக்கிய இன்னொரு காரணம் இன்றைய துகள் இயற்பியலில் (particle physics) இன் தரமான மாதிரி (Standard model) அடிப்படையிலான எமது அறிவு பூரணமற்றதாக இருப்பதும் ஆகும் என LHC இன் ஆப்பரேஷன் குழுத் தலைவர் டாக்டர் மைக் லாமொண்ட் கூறுகின்றார். பிரபஞ்சவியலில் (Cosmology) இல் மிகவும் புதிராகவுள்ள கரும் பொருள் (Dark matter) மற்றும் கரும்சக்தி (Dark energy) ஆகியவை தொடர்பிலும் ஈர்ப்பு விசை போன்ற அடிப்படை விசைகள் தொடர்பிலும், நிறை (mass) உடைய மற்றும் நிறை அற்ற துணை அணுத் துணிக்கைகள் தொடர்பிலும் மேலதிக விளக்கங்களைப் பெறுவதற்கும் CERN பரிசோதனைகள் உத வும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
CERN இல் அமைந்துள்ள LHC ஆய்வு எந்திரம் மட்டுமே ஏறக்குறைய 3 பில்லியன் யூரோக்கள் செலவில் நிர்மாணிக்கப் பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் புதிய துகள் (proton) மோதல் ஆய்வுகள் ஜுன் முதற் கொண்டு நிகழ்த்தப் படலாம் எனவும் ஆனாலும் இதன் மூலம் 2016 மத்தியிலேயே புதிய கொள்கைகள் வெளிச்சத்துக்கு வரலாம் எனவும் எதிர் பார்க்கப்படுகின்றது.
2012 இறுதியில் LHC இல் கற்றை சக்தி அளவை 6.5 TeV இற்கு உயர்த்துவதற்காக இது தற்காலிகமாக மூடப் பட்டிருந்ததை குறிப்பிடத்தக்கது.
மீண்டும் இயங்கும் உலகின் மிகப் பெரிய பௌதிக ஆராய்ச்சிக் கூடம்
Reviewed by Author
on
May 13, 2015
Rating:

No comments:
Post a Comment