இந்தியக் கடலோரக் காவல்படையின் விமானம் மாயம்
இந்தியக் கடலோரக் காவல்படைக்குச் சொந்தமான டோர்னியர் விமானம் ஒன்று, நேற்று இரவு காணாமல் போனது. இரண்டு விமானிகள் உட்பட மூன்று பேர் பயணம் செய்த அந்த விமானத்தைத் தேடும் பணி தீவிரமாக நடந்துவருகிறது.
திங்கட்கிழமையன்று மாலை ஆறு மணி அளவில், சென்னை விமான நிலையத்திலிருந்து இந்த விமானம் கண்காணிப்புப் பணிக்காகப் புறப்பட்டுச்சென்றது.
இரவு 9.23 நிமிடத்தில், இறுதியாக இந்த விமானம் திருச்சி வமான நிலையத்தோடு தொடர்பில் இருந்தது. அதற்குப் பிறகு இந்த விமானத்துடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது.
விமானம் காணமல்போனபோது, அந்த விமானத்தில் விமானி வித்யாசாகர், துணை விமானி எம்.கே. சோனி, வழிகாட்டி சுபாஷ் சுரேஷ் ஆகிய மூன்று பேர் இருந்தனர்.
இந்த விமானம் சிதம்பரத்திற்குக் கிழக்கே 16 கி.மீட்டர் தூரத்தில் 9,000 அடி உயரத்தில் பறந்துகொண்டிருந்தபோது காணமல்போனதாக கடலோரக் காவல்படையின் கிழக்கு மண்டல ஐ.ஜி. ஷர்மா தெரிவித்துள்ளார்.
இந்த விமானத்தைத் தேடுவதற்காக இந்தியக் கப்பற்படை, கடலோரக் காவல்படையச் சேர்ந்த எட்டுக் கப்பல்களும் இரண்டு விமானங்களும் தேடுதல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
சிதம்பரத்தையொட்டியுள்ள சதுப்புநிலப் பகுதியில் இந்த விமானம் விழுந்திருக்கலாமா என்ற கோணத்திலும் தேடுதல் நடத்தப்பட்டுவருகிறது. விமானத்தின் பாகங்கள் எதையாவது பார்த்தால், உடனடியாக தகவல் கொடுக்கும்படி கடலூர், சிதம்பரத்தைச் சேர்ந்த மீனவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்தியக் கடலோரக் காவல்படையின் விமானம் மாயம்
Reviewed by NEWMANNAR
on
June 09, 2015
Rating:

No comments:
Post a Comment