மன்னார் வங்காலையில் காணாமல் போன 3 மாணவர்களில் இருவர் கண்டுபிடிப்பு.ஒருவர் பற்றிய தகவல் இல்லை.
மன்னார் வங்காலையை சேர்ந்த 12 வயதுடைய மூன்று மாணவர்கள் நேற்று(4) வியாழக்கிழமை மாலை முதல் காணாமல் போன நிலையில் அவர்களில் இரண்டு மாணவர்கள் இன்று(6) வெள்ளிக்கிழமை காலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மன்னார் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மன்னார் வங்காலையில் தரம் 7 இல் கல்விகற்கும் 12 வயதுடைய மூன்று மாணவர்களே காணாமல் போன நிலையில் அவர்களில் இரண்டு மாணவர்கள் இன்று(5) வெள்ளிக்கிழமை காலை மன்னார் பேரூந்து தரிப்பிடத்தில் வைத்து மன்னார் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளனர்.
மன்னார் வங்காலையைச் சேர்ந்த தரம் 7 இல் கல்வி கற்கும் டானியல்(வயது-12) மற்றும் அஜித்குமார்(வயது-12) ஆகிய இரு மாணவர்களே இவ்வாறு பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளனர்.
மேலும் அதே வகுப்பில் கல்வி கற்கும் சாலின் மார்க் (வயது-12) என்ற மாணவன் தொடர்பில் தகவல்கள் கிடைக்கவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக பொலிஸாரால் மீட்கப்பட்ட இரண்டு மாணவர்களின் உறவினர்கள் தெரிவிக்கையில்,,,
குறித்த மூன்று மாணவர்களும் வங்காலையில் உள்ள பாடசாலையில் தரம் 7 இல் கல்வி கற்று வரும் நிலையில் நேற்று வியாழக்கிழமை(4) மாலை குறித்த மூன்று மாணவர்களும் வங்காலையில் இருந்து மன்னாருக்கு பேரூந்தில் வருகை தந்துள்ளனர்.
பின் குறித்த 3 பேரூம் மன்னாரில் இருந்து யாழ்ப்பாணம் செல்லும் பேரூந்தில் யாழ்ப்பாணம் சென்றுள்ளனர்.பின் யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு செல்லும் பேரூந்தில் பயணித்த குறித்த 3 மாணவர்களும் வவுனியாவில் இறங்கியுள்ளனர்.
இந்த நிலையில் டானியல் மற்றும் அஜித்குமார் ஆகிய இருவரும் வேறு இடங்களுக்கு செல்ல மறுத்த நிலையில் அவர்கள் இருவரும் இன்று(5) வெள்ளிக்கிழமை காலை 6 மணியளவில் வவுனியாவில் இருந்து மன்னார் நேக்கி பேரூந்தில் வருகை தந்தனர்.
இந்த நிலையில் மன்னார் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து விரைந்து சென்ற மன்னார் பொலிஸார் குறித்த இருவரையும் மன்னார் பேரூந்து தரிப்பிடத்தில் மீட்டு மன்னார் பொலிஸ் நிலையத்தில் உள்ள பெண்கள் மற்றும் சிறுவர் தடுப்பு பிரிவில் ஒப்படைத்துள்ளனர்.
மூன்றாவது மாணவனான சாலியன் மார்க் (வயது-12) வவுனியாவில் இருந்து எங்கு சென்றார் என்ற விடயம் இது வரை தெரியவில்லை.மன்னார் பொலிஸார் குறித்த மாணவன் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பொலிஸாரினால் மீட்கப்பட்ட குறித்த இரு மாணவர்களும் தற்போது மன்னார் பொலிஸ் நிலையத்தின் பெண்கள் மற்றும் சிறுவர் தடுப்பு பிரிவில் தடுத்து வைக்கப்பட்டு விசாரனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதோடு குறித்த இரு மாணவர்களையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மன்னார் வங்காலையில் காணாமல் போன 3 மாணவர்களில் இருவர் கண்டுபிடிப்பு.ஒருவர் பற்றிய தகவல் இல்லை.
Reviewed by NEWMANNAR
on
June 05, 2015
Rating:
No comments:
Post a Comment