அண்மைய செய்திகள்

recent
-

எமது ஒற்றுமையை உலகுக்கு நிருபிக்க வேண்டும்: சிவில் சமூகம்,,,


வடகிழக்கில் வாழும் தமிழ் மக்கள் தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு ஒருமித்து வாக்களித்து எமது ஒற்றுமையை மீண்டுமொரு முறை உலகிற்கு நிருபித்துக் காட்ட வேண்டுமெனவும் இழக்கப்பட்ட உயிர்களை நாம் திரும்பப் பெறப்போவதில்லையாயினும். அவ் ஆத்மாக்களுக்கு செலுத்தும் காணிக்கையாக இது அமையும் எனவும் கல்முனை சிவில் சமூகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

எதிர்வரும் பொதுத்தேர்தல் தொடர்பாக மக்களை தெளிவு படுத்துவதற்காக கல்முனை சிவில் சமூகம் விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; கல்முனையை தளமாக கொண்டு இயங்கிவருகின்ற கல்முனை சிவில் சமூக அமைப்பு இப்பிரதேசத்தில் தமிழ் மக்கள் முகம் கொடுத்துவரும் நிருவாகச் சிக்கல்கள், சமூகப் பிரச்சினைகள் தொடர்பில் சம்பந்தப்பட்ட சகல தரப்பினரையும் அணுகி அதனூடாக சாதகமான தீர்வுகளைப் பெறுவதில் முனைப்புடன் செயற்பட்டு வருகின்ற அமைப்பு என்ற வகையில் தமது கடந்தகால அனுபவங்களின் அடிப்படையில் இந்த அறிக்கையை வெளியிடுகின்றது. கல்முனையில் ஏறத்தாள மூன்று தசாப்த காலங்களுக்கு மேலாக புரையோடிப்போன கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமுயர்த்தல், தமிழ் கலாசார மண்டபத்தை அமைத்தல், கல்முனை ஆதார வைத்தியசாலையின் அபிவிருத்தி கல்முனை மாநகர சபையின் தமிழ்ப்பிரதேசங்களுக்கான நியாயமான ஒதுக்கீடுகள் மற்றும் தமிழ்க் கிராமங்களின் எல்லைகளிலுள்ள காணிகளில் ஏனைய சமூகங்களால் மேற்கொள்ளப்படும் அத்துமீறல்களை தடுத்தல் போன்ற சவால் மிக்க செயற்பாடுகளில் சிலவற்றில் வெற்றியும் சிலவற்றில் கணிசமான முன்னேற்றமும் கண்டுள்ளோம். மேற்படி செயற்பாடுகளை முன்னெடுத்து இறுதிவரை முன்கொண்டு சென்ற வேளைகளில் அவற்றில் வெற்றியடைய முடியாமற் போனமைக்கு பாராளுமன்ற பிரதிநிதித்துவம் பிரதான தடையாக இருந்தமையை அனுபவ ரீதியாக உணர்ந்தோம். எமக்காக ஏனைய மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் எமது மாவட்டத்தைச் சேர்ந்த பெரும்பான்மை இனத்தின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குரல் கொடுத்த போதும் அவைகள் எமது பிரதிநிதித்துவம் இல்லை எனக்கூறி நிராகரிக்கப்பட்டமையை கண்டோம். அதுமட்டுமன்றி எம்மால் தெரிவு செய்யப்பட்டிருந்த பாராளுமன்றப் பிரதிநிதிகள் கூட எமது பிரதேசத்தில் அசம்மந்தமாக இருந்தமை காரணமாக அவர்கள் மேற்படி விடயங்களில் அக்கறை காட்டவோ நமது தலைமைகளிடம் அழுத்தம் கொடுக்கவோ முன்வரவில்லை. இறுதியாக கல்முனை மக்களின் அமோக ஆதரவுடன் தெரிவு செய்யப்பட்டு அரசின் பக்கம் தாவிய பாராளுமனற உறுப்பினர் பி.எச்.பியசேன கூட முற்றுமுழுதாக தமிழர்களுக்கெதிரான விரோதப் போக்கையே கையாண்டதுடன் விசேடமாக கல்முனை மக்களின் மேற்சொன்ன பிரச்சனைகளுக்கெதிரான முன்னேற்றங்களுக்கு தடைகளையே ஏற்படுத்தி வந்தார். மேற்படி நிலைமைகளை கருத்திற் கொண்டு எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் நமது பிரதேசத்தின் நலன்களையும் நீண்டகாலமாக எமது தமிழ்த் தலைமைகளின் முட்கள் நிறைந்த அரசியல் பயணத்தில் கைகோர்த்து துளியும் தளம்பாத நெஞ்சுறுதியுடன் இருக்கின்ற, இருக்கக்கூடிய அம்பாறை மாவட்டத்தின் அரசியல் போக்குகள் தேவைகள் மற்றும் நிலைமையினை நன்கு உணர்ந்த விலைப்பேசப்பட முடியாத தகுதியான ஒருவரைத் தெரிவு செய்ய வாக்களிக்குமாறு தயவாக கேட்டுக் கொள்கின்றோம்.

இதனிடையே தமிழ்த்தேசியத்துடன் ஒன்றித்திருந்து இறுதி நேரத்தில் ஏற்பட்ட சிற்சில மனத்தாங்கல்களால் பிரிந்து வட – கிழக்கில் வேறு கட்சிகளில் போட்டியிடுகின்ற எமது உறவுகள் தங்களுக்கு செலுத்தப்படுகின்ற சில நூறுவாக்குகள் கூட எமது தேசியப்பயணத்தை பாதித்துவிடக் கூடாது என்பதுடன் அவ்வாறான பழிச் சொல்லுக்கு தாங்கள் ஆளாகிவிடக்கூடாது என்பதை உணர்ந்து “கோழி மிதித்து குஞ்சு சாவதில்லை” என்பதற்கிணங்க தங்களது ஆதரவாளர்களையும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு என்ற தாய்த்தலைமைக்கே வாக்களிக்க தூண்டி தலைமையுடன் ஒன்றிணைந்து பயணிக்கும் சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்ள அழைப்பு விடுக்கின்றோம்.

மேலும் எமது தாயக மண்ணில் தமிழ்த்தலைமைகள் ஒன்றிணைந்து தமிழ்த் தேசிய கூட்டமைப்பை உருவாக்கி எம்மை ஒற்றுமைப்படுத்தி வலுப்படுத்தியது போல் வட கிழக்கிற்கு வெளியே வாழுகின்ற வட – கிழக்கு மக்கள் மனோ கணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்கு முன்னணிக்கு வாக்களித்து வட கிழக்கிற்கு வெளியேயும் எமது ஒற்றுமை உறுதிப்படுத்துமாறு அவ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எமது ஒற்றுமையை உலகுக்கு நிருபிக்க வேண்டும்: சிவில் சமூகம்,,, Reviewed by Author on August 07, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.