அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் ஜனாதிபதியிடம் நேரில் வலியுறுத்துவேன்: விக்னேஸ்வரன்
இலங்கை சிறைகளில் நீண்டகாலம் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்யப்படவேண்டும் என்பதை ஜனாதிபதியுடனான சந்திப்பின்போது முதன்மையாக வலியுறுத்துவேன் என வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் முதலமைச்சரின் வீட்டில் தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை மற்றும் எதிர்வரும் 12ம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதியுடனான சந்திப்பு தொடர்பாக ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருக்கின்றார்.
குறித்த விடயம் தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,
சிறைகளில் உள்ள அரசியல் கைதிகள் நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றார்கள். அவர்களுக்கு பிணை வழங்கி விடுதலை செய்யவுள்ளதாக செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.
அதனை நாங்கள் நிராகரிக்கின்றோம். மேலும் சிலர் மீது வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. உண்மையில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தால் அவர்களை எதற்காக விடுதலை செய்ய இவ்வளவு காலதாமதம் உண்டானது.
எனவே இந்தவிடயத்தில் உள்நோக்கம் உள்ளதா என்பதை அறியமுடியாமல் உள்ளது. இந்நிலையில் எதிர்வரும் 12ம் திகதி ஜனாதிபதியுடனான சந்திப்பில் குறித்த விடயம் தொடர்பாக நிச்சயம் சுட்டிக்காட்டுவோம்.
இதேவேளை, அமைச்சர்கள் மாற்றம் தொடர்பாக, தற்போது அமைச்சர்களாக உள்ளவர்களை மாற்றி புதியவர்களை அமைச்சர்களாக நியமிக்கவேண்டும் என சிலர் கோரிக்கை விடுகின்றார்கள்.
அதற்காக கூட்டங்களை நடத்துவதாகவும் நான் அறிகிறேன். இந்நிலையில் அமைச்சர்களை மாற்றும் விடயம் என்னுடைய பணி அதனை நான் பார்த்துக் கொள்கிறேன். மேலும் தற்போது அமைச்சர்களாக உள்ளவர்கள் எதுவும் குற்றங்கள், குறைகள் செய்திருந்தால் அதனை எமக்கு தெரியப்படுத்தலாம்.
அது தொடர்பில் நான் நடவடிக்கை எடுப்பேன். அரசியல் கைதிகள் விடுதலைகோரி கடை அடைப்பு போராட்டம் தொடர்பாக அரசியல் கைதிகள் விடுதலையினைக்கோரி கடை அடைப்பு போராட்டம் நடத்துமாறும், அதற்கான அழைப்பை முதலமைச்சர் விடுக்கவேண்டும். என அரசியல் கைதிகளின் குடும்பத்தினர் கோரியுள்ளதாகவும்,
அதற்கான கோரிக்கை எனக்கும் வழங்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியிருக்கின்றன. ஆனால் அவ்வாறான கோரிக்கை கடிதம் எனக்கு கிடைக்கவில்லை. கோரிக்கை கடிதம் கிடைக்கப்பெற்றால் அமைச்சர் வாரியத்துடன் இந்த விடயம் தொடர்பாக பேசி எடுக்க கூடிய நடவடிக்கைகளை என்னால் எடுக்க முடியும்.
அதற்கப்பால் நான் தனியாக கடை அடைப்புக்கான கோரிக்கை விடுவது சாத்தியமற்றது என்றார்.
அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் ஜனாதிபதியிடம் நேரில் வலியுறுத்துவேன்: விக்னேஸ்வரன்
Reviewed by NEWMANNAR
on
November 08, 2015
Rating:

No comments:
Post a Comment