அண்மைய செய்திகள்

recent
-

கூட்டமைப்புடன் பேச்சு நடத்துவோம்: அரசாங்கம்...


ஒற்றையாட்சி முறைமையை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமாட்டோம் என்று  எதிர்க்கட்சித் தலைவர் சம்மந்தன்  தெரிவித்திருந்தாலும்  அது தொடர்பில்  தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சு நடத்தி இணக்கப்பாட்டுக்கு வர முடியும் என்று  அரசாங்கம் எதிர்பார்க்கின்றது என நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ  தெரிவித்தார்.

மக்களின் கருத்துக்களுக்கு முக்கியத்துவம் அளித்தே புதிய அரசியலமைப்பை  அரசாங்கம் உருவாக்கவுள்ளது. இந்த இடத்தில் எவ்வாறான முறைமை வரும் என்று எம்மால் தீர்மானிக்க முடியாது.  சகல கட்சிகளுடனும் பேச்சுவார்த்தைகளை நடத்தி    அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய  பொதுவான இணக்கப்பாடு ஒன்றுக்கு வர முடியும் என்பது அரசாங்கத்தின் நம்பிக்கையாகும்  என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஒற்றையாட்சிக் கோட்பாட்டை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளவில்லை. ஏற்றுக்கொள்ளப்போவதுமில்லை என்று  எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்  தலைவருமான  சம்மந்தன்   கூறியுள்ளமை தொடர்பில்  கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

எமது மக்கள் தமது பூர்வீக மண்ணில் சுதந்திரமாக, கௌரவமாக, பாதுகாப்பாக வாழவேண்டும். வடக்கு கிழக்கு மீண்டும் இணைக்கப்படவேண்டும். மாகாண சபைகளுக்கு காணி, பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்படவேண்டும். ஐக்கிய இலங்கைக்குள் பகிரப்பட்ட இறையாண்மையின் அடிப்படையில் அதியுச்ச சமஷ்டி அடிப்படையிலான தீர்வொன்று வழங்கப்படவேண்டும் என்பதில் உறுதியாக இருக்கின்றோம் எனவும்  எதிர்க்கட்சித் தலைவர்  சம்மந்தன் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில்  நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ  இந்த விடயம் குறித்து மேலும் குறிப்பிடுகையில்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இந்த விடயம் குறித்து  வெளியிட்டுள்ள கருத்துக்கு நான்  அபிப்பிராயம் கூற முடியாது.  அவர் என்ன அடிப்படையில் இந்த விடயங்களை குறிப்பிட்டுள்ளார் என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால்  பொதுவான ஒரு விடயத்தை என்னால் குறிப்பிட முடியும்.

அதாவது  புதிய அரசியலமைப்பு மற்றும் அதில் உள்ளடக்கப்படவேண்டடிய தீர்வு முறைமை  தொடர்பில்  அரசாங்கம்    சகல கட்சிகளுடனும் பேச்சு நடத்தி இணக்கப்பாட்டுக்கு வந்த பின்னரே    இறுதி முடிவு எடுக்கும்.  இங்கு சகல கட்சிகளுடனும் பேச்சுநடத்துவோம் என்கின்றபோது  தமிழ்த்  தேசியக் கூட்டமைப்பும்  அதில் உள்ளடங்கும்.

அந்தவகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனும்   அரசாங்கம் பேச்சுவார்த்தை நடத்தும்.   இதன்போது தற்போது எழுந்துள்ள சிக்கல்கள் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தி  பொதுவான இணக்கப்பாட்டுக்கு வர முடியும் என்று நம்புகின்றோம்.   அதாவது  இந்த விடயத்தில்  தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் அரசாங்கம்  பேச்சுவார்த்தை நடத்தும் என்பதனை உறுதியாக கூற முடியும்.

இவ்வாறு சகல கட்சிகளுடனும் பேச்சுவார்த்தைகளை நடத்தி    அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய  பொதுவான இணக்கப்பாடு ஒன்றுக்கு வர முடியும் என்பது அரசாங்கத்தின் நம்பிக்கையாகும். அதனடிப்படையிலேயே நாங்கள் செயற்பட்டுவருகின்றோம். விசேடமாக   தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் நாங்கள் பேச்சுநடத்துவோம் என்றார்.

இதேவேளை   ஒற்றையாட்சிக்குள் அதிகாரங்களை பகிர்வது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தி இணக்கப்பாட்டுக்கு வர முடியும் என்று அண்மையில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியும் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

கூட்டமைப்புடன் பேச்சு நடத்துவோம்: அரசாங்கம்... Reviewed by Author on January 23, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.