பேஸ்புக் மூலம் திருடனை பிடிக்க முடியுமா?: கனடாவில் நிகழ்ந்த உண்மை சம்பவம்...
கனடா நாட்டில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் கொள்ளையிட்ட திருடனை அதன் உரிமையாளர் பேஸ்புக் மூலம் அதிரடி திட்டம் வகுத்து பிடித்த சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
மனிடோபா மாகாணத்தில் உள்ள கிம்லி நகரில் H.P. Tergesen & Sons என்ற வணிக வளாகம் ஒன்று அமைந்துள்ளது.
இந்த வணிக வளாகத்தில் கடந்த வெள்ளிக்கிழமை காலை நேரத்தில் திருடன் ஒருவன் புகுந்து அங்குள்ள விலை உயர்ந்த கடிகாரங்களை அள்ளிச்சென்றுள்ளார்.
மறுநாள் கடைக்குள் வந்து பார்த்த உரிமையாளரான Stefan Tergesen என்பவர் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளார்.
வணிக வளாகத்தில் நுழைந்து கொள்ளையிட்ட திருடனை தானே பிடிக்க வேண்டும் என உறுதி செய்துக்கொண்டு அதற்கான பணியில் இறங்கினார்.
முதலில், கடிகாரங்கள் திருடப்பட்ட இடத்தில் இருந்த கண்காணிப்பு கமெராவில் பதிவாகியிருந்த காட்சிகளை பல முறை பார்த்துள்ளார்.
பின்னர், அந்த காட்சிகளை தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டு ‘இதுபோன்ற ஒரு நபரை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா?’ என தனது வாடிக்கையாளர்களிடம் கேட்டுள்ளார்.
இந்த வீடியோ காட்சிகளை நூற்றுக்கணக்கான வாடிக்கையாளர்கள் பார்த்ததை தொடர்ந்து, ஒரு வாடிக்கையாளருக்கு அடையாளம் தெரிந்து திருடனின் பெயர் மற்றும் அவனுடைய பேஸ்புக் பக்கத்தின் ஸ்கிரீன் ஷாட்டை(Screen Shot) உரிமையாளருக்கு அனுப்பி வைத்துள்ளார்.
இதனை பெற்ற உரிமையாளர் உடனடியாக அந்த திருடனுக்கு நட்பு அழைப்பு(Friend Request) அனுப்பியுள்ளார். மேலும், ‘நான் உங்களை ஏற்கனவே சந்தித்திருக்கிறேன். உங்களுடன் நண்பராக விரும்புகிறேன்’ என்ற தகவலையும் அனுப்பியுள்ளார்.
நடப்பதை அறியாத அந்த திருடன் உரிமையாளர் அனுப்பிய நட்பு அழைப்பை ஏற்றுக்கொண்டுள்ளார்.
இதன் பின்னர், திருடனிடம் உரிமையாளர் அன்பாக பேஸ்புக் மூலம் பேசத் தொடங்கியுள்ளார்.
‘என்னுடைய கடைக்குள் வந்து திருடியது நீங்கள் தான் என்பது ஆதாரப்பூர்வமாக எனக்கு தெரியும். தவறை ஒப்புக்கொள்ளுங்கள்’ என சில மணி நேரங்கள் உருக்கமாக பேசியுள்ளார்.
உரிமையாளரின் அன்பான பேச்சைக்கேட்ட திருடன் உடனடியாக மனம் மாறியுள்ளார்.
‘உங்கள் கடையில் புகுந்து திருடியதற்காக வருந்துகிறேன். என்னை மன்னித்து விடுங்கள். என்னிடம் உள்ள அனைத்து பொருட்களையும் திருப்ப அளித்துவிடுகிறேன். நீங்கள் என்னை பொலிசாரிடம் ஒப்படைத்தாலும் அதற்கு நான் தயாராக இருக்கிறேன்’ என பதில் கூறியுள்ளார்.
திருடன் மனம் மாறியதை அறிந்த உரிமையாளர் ‘நீங்கள் திருந்தியதை கண்டு மகிழ்ச்சி அடைகிறேன்.
எனினும், இந்த திருட்டு சம்பவம் தொடர்பாக பொலிசாரிடம் புகார் அளிப்பது தவிர வேறு வழியில்லை’ எனக்கூறி உரையாடலை நிறுத்தியுள்ளார்.
இந்த திருட்டு சம்பவம் மற்றும் திருடனிடம் நடத்திய உரையாடலை பற்றி உரிமையாளர் பொலிசாரிடம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பொலிசார் பேசியபோது, ‘பாதிக்கப்பட்டவர்கள் எந்த சூழலிலும் திருடனை தொடர்புக்கொள்ள முயற்சி செய்வதை ஊக்கப்படுத்த முடியாது.
ஏனெனில், சில நேரங்களில் திருடர்கள் கொடூரமான செயல்களில் இறங்கினால் அது பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆபத்தாக முடிந்துவிடும்’ எனக்கூறி பதிலளித்துள்ளனர்.
இந்த திருட்டு சம்பவம் தொடர்பாக கிம்லி பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பேஸ்புக் மூலம் திருடனை பிடிக்க முடியுமா?: கனடாவில் நிகழ்ந்த உண்மை சம்பவம்...
Reviewed by Author
on
March 08, 2016
Rating:

No comments:
Post a Comment