முதலமைச்சர் மீதான சிங்கள இனவாதிகளின் குற்றச்சாட்டு! வடமாகாண சபை கண்டனம்....
வடமாகாணசபையினால் உருவாக்கப்பட்டுள்ள அரசியல் தீர்வு திட்டவரைபுகள் தொடர்பாக முதலமைச்சர் மீது மேற்கொள்ளப்படும் அவதூறான விமர்சனங்களுக்கு வடமாகாணசபை கடுமையான கண்டனத்தை தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் கண்டனத்தை வெளியிட்டுள்ள அவை தலைவர் சீ.வி.கே.சிவஞானம், இவ்வாறான விமர்சனங்களை தொடர்ந்து சகித்துக் கொள்ள முடியாது என குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை அரசாங்கம் அரசியலமைப்பு மறுசீரமைப்பு ஒன்றை மேற்கொள்ளவுள்ள நிலையில் குறித்த அரசியலமைப்பு மறுசீரமைப்பில் வடமாகாண தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளும் இடம்பெற வேண்டும் எனும் அடிப்படையில் வடமாகாணசபை ஒரு அரசியல் தீர்வு திட்ட வரைபை தயாரித்திருக்கின்றது. இதன் முதலாம் முன்மொழிவு கடந்த மாகாணசபை அமர்வில் முன்வைக்கப்பட்டதை தொடர்ந்து தென்னிலங்கையில் ஒன்றிணைந்த எதிர்கட்சிகள், முதலமைச்சர் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்திருக்கும் நிலையில் சிங்கள இனவாத அமைப்பான ஹெல உறுமய போன்ற கட்சிகள் முதலமைச்சரை கைது செய்ய வேண்டும் எனக்
கேட்டிருக்கின்றன.
இந்நிலையில் இந்த விடயம் தொடர்பாக இன்றைய தினம் நடைபெற்ற அரசியல் தீர்வு திட்டவரைபு தொடர்பான உறுப்பினர்களின் கருத்தறியும் விசேட அமர்வில் அவை தலைவர் பேசுகையிலேயே மேற்படி விடயம் தொடர்பாக சுட்டிக்காட்டி பேசியுள்ளார்.
இது தொடர்பாக மேலும் அவர் குறிப்பிடுகையில், நாம் எமது தீர்வு திட்ட வரைபுகளை தனியே வடகிழக்கு மாகாணங்களுக்கான வரைபாக தயாரிக்கவில்லை. இது இலங்கையின் அரசியலமைப்பு மறுசீரமைப்புக்குள் உள்வாங்கப்படுவதற்காக தயாரிக்கப்பட்டது. மேலும் இந்த வரைபு 19 பேர் கொண்ட விசேட குழவினால் தயாரிக்கப்பட்டது. இதனை முதலமைச்சர் தனியே தயாரிக்கவில்லை. எனவே தனி மனித விமர்சனங்களை தொடர்ந்தும் சகித்துக் கொள்ள முடியாது. முதலமைச்சர் மீது மேற்கொள்ளப்படும் விமர்சனங்கள் ஒட்டுமொத்தமாக வடமாகாணசபை மீது முன்வைக்கப்படும் விமர்சனம். இதனை தொடர்ந்து சகித்துக் கொள்ள முடியாது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் மீதான சிங்கள இனவாதிகளின் குற்றச்சாட்டு! வடமாகாண சபை கண்டனம்....
Reviewed by Author
on
April 22, 2016
Rating:

No comments:
Post a Comment