அண்மைய செய்திகள்

recent
-

ஐ.நா. ஆணையாளர் சுட்டிக்காட்டியுள்ள முக்கிய விடயங்கள்

யுத்தத்தின் இறுதிக் கட்டத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் மற்றும் சர்வதேச மனிதாபிமான சட்ட மீறல்கள் போன்றவற்றில் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் தமக்கு எப்போது நீதி கிடைக்கும் என்று தவிப்புடன் காத்துக்கொண்டிருக்கின்ற நிலையில் இலங்கை தொடர்பில் வாய்மூல அறிக்கையை வெளியிட்டுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் செய்ட் அல் ஹுசைன், அதில் பல்வேறு விடயங்களை வலியுறுத்தியுள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் செய்ட் அல் ஹுசைனின் அறிக்கை எவ்வாறு அமையும் என்று பாதிக்கப்பட்ட மக்கள் காத்துக்கொண்டிருந்த நிலையில் மிக முக்கியமான விடயங்களைக் கொண்டு அறிக்கை அமைந்துள்ளது.

குறிப்பாக யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் கொத்தணிக் குண்டுகள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக தற்போது பல அறிக்கைகளில் புதிய ஆதாரங்கள் முன்வைக்கப்பட்டு வருவதாகவும் எனவே இக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் சுயாதீனமான பக்கச் சார்பற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் மனித உரிமைகள் ஆணையாளர் கோரியுள்ளார்.

அத்துடன் கடந்த வருடம் உருவாக்கப்பட்ட தேசிய நல்லாட்சி அரசாங்கம் மறுசீரமைப்புகளுக்கு பொருத்தமான அரசியல் சூழலை உருவாக்கியுள்ளது.

எனினும் முழுமையான மறுசீரமைப்புக்கான வாக்குறுதி இன்னும் ஆபத்தான கட்டத்திலேயே உள்ளது. இந்த விடயத்தில் ஒரு குழப்பகரமான தன்மை காணப்படுகிறது.

பொறுப்புக்கூறலிலும் இது தாக்கத்தை செலுத்தும் என்றும் செய்ட் அல் ஹுசைன் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் நல்லிணக்க விடயத்தில் புதிய அரசாங்கம் மேற்கொண்டு வருகின்ற வேலைத்திட்டங்கள் தொடர்பாகவும் அல் ஹுசைன் எடுத்துரைத்துள்ளார்.

அதாவது அரசாங்கம் நல்லிணக்கத்துக்காக சில வேலைத்திட்டங்களை மேற்கொண்டுள்ளது.

2015ம் ஆண்டு நவம்பர் மாதம் அரசாங்கம் சில தமிழ் புலம்பெயர் அமைப்புக்கள் மீதான தடையை நீக்கியது.

தேசிய கீதத்தை தமிழ் மொழியில் பாட நடவடிக்கை எடுக்கப்பட்டது.

2016 மே மாதம் 19ம் திகதி யுத்த வெற்றி விழாவுக்கு பதிலாக நினைவு தினம் கொண்டாடப்பட்டது.

ஜனாதிபதியும் பிரதமரும் வடக்கில் பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்குச் சென்று வருகின்றனர்.

ஜனாதிபதி தன்னை கொல்ல வந்தவருக்கே மன்னிப்பு வழங்கியிருந்தார்.

இவ்வாறு குறிப்பிடத்தக்க நல்லிணக்க வேலைத்திட்டங்களும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மனித உரிமைகள் ஆணையாளர் கூறியுள்ளார்.

இது இவ்வாறிருக்க மக்கள் மத்தியில் நம்பிக்கையைக் கட்டியெழுப்புவதற்கு இலங்கையில் நிறுவன ரீதியான மாற்றம் அவசியமாகும்.

advertisement


அரசாங்கம் பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவதாக கூறிவிட்டு அதன் கீழ் தொடர்ந்து கைதுகளை மேற்கொண்டு வருகிறது.

2015 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் 40 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சில கைதுகள் பலாத்காரமாக இடம்பெற்றுள்ளன. முறையான செயற்பாடுகளின்று கைதுகள் இடம்பெறுகின்றன. அதாவது வெள்ளை வான் கடத்தல்களை போன்று சில கைது சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.

இது மக்கள் மத்தியில் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதுடன் அரசாங்கம் மீதான நம்பிக்கையை சீர்குலைத்துள்ளது என்றும் செய்ட் அல் ஹுசைன் குறிப்பிட்டுள்ளார்.

நீதி விசாரணைப் பொறிமுறையில் சர்வதேச நீதிபதிகள், வழக்கறிஞர்கள், விசாரணையாளர்களின் பங்களிப்பு தொடர்பில் மிக முக்கியமான கேள்வி இன்னும் நிலுவையில் இருக்கிறது.

பாதிக்கப்பட்ட மக்கள் பார்வையில் பொறுப்புக்கூறல் செயற்பாட்டில் சர்வதேச பங்களிப்பு அவசியமாக உள்ளது.

இதற்காக ஐ.நா. அலுவலகம் தொடர்ந்து ஆலோசனைகளையும், தொழில்நுட்ப உதவிகளையும் வழங்குவதற்கு தயாராகவுள்ளது.

இலங்கையின் செயற்பாடுகளுக்கு கால அவகாசம் தேவையாகும் என்றும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் செய்ட் அல் ஹுசைன் சுட்டிக்காட்டியுள்ளார்.

அந்த வகையில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் அல் ஹுசைனின் இலங்கை தொடர்பான வாய்மூல அறிக்கையானது நீதி நியாயத்துக்காக காத்திருக்கும் பாதிக்கப்பட்ட மக்கள் விடயத்தில் எவ்வாறு பிரதிபலிக்கின்றது என்பதை ஒருபுறம் ஆராய்வதுடன் மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கை எவ்வாறான விடயங்களை ஆராய்ந்துள்ளது என்பதை பார்க்க வேண்டியுள்ளது.

அதாவது 2009 ஆம் ஆண்டு யுத்தம் முடிவடைந்த பின்னர் யுத்தத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் மற்றும் மனிதாபிமான சட்டமீறல்களினால் பாதிக்கப்பட்ட மக்கள் தமக்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருக்கின்றனர்.

ஆனால் யுத்தம் முடிவடைந்து ஏழு வருடங்கள் கடந்துள்ள பின்னரும் இதுவரை பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்கவில்லை.

இந்த நிலையிலேயே ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பாக பிரேரணைகள் நிறைவேற்றப்பட்டு நம்பகரமான சுயாதீனமான விசாரணை பொறிமுறையை முன்னெடுக்குமாறு வலியுறுத்தப்பட்டு வந்தது.

இறுதியில் ஐ.நா. மனித உரிமைகள் அலுவலகம் இலங்கை தொடர்பில் விசாரணையை நடத்தி முழு அறிக்கையை முன்வைத்தது.

அந்த விசாரணை அறிக்கையின் பிரகாரமே கடந்த வருடம் இலங்கை தொடர்பில் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் பிரேரணை நிறைவேற்றப்பட்டது.

அந்த பிரேரணையை இலங்கை அரசாங்கமும் இணை அனுசரணை வழங்கி ஆதரித்திருந்தது.

இந்நிலையில் குறித்த பிரேரணை சரியான முறையில் அமுலாக்கம் செய்யப்படுகின்றதா என்பதை ஆராய்ந்து வாய்மூல அறிக்கையை வெளியிடுமாறு ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளருக்கு பணிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அந்த அறிக்கை வெளிவந்துள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் செய்ட் அல் ஹுசைனின் வாய்மூல அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய விடயங்கள் தொடர்பில் அரசாங்கம் மிகவும் தீவிரமாகவும் ஆழமாகவும் கவனத்திற் கொள்ள வேண்டியது அவசியமாகும்.

அதாவது பொறிமுறையை உருவாக்குவதில் தயக்கம், சட்டவிரோதமான முறையில் கைதுகள் இடம்பெறுகின்றமை, தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் விடுவிக்கப்படாமை உள்ளிட்ட பல்வேறு கரிசனைகளை மனித உரிமைகள் ஆணையாளர் வெளியிட்டிருக்கிறார்.

எனவே அரசாங்கம் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் முன்வைத்துள்ள விடயங்கள் தொடர்பில் ஆராய்ந்து பாதிக்கப்பட்ட மக்கள் திருப்தி கொள்ளும் வகையிலான முறையில் நல்லிணக்க வேலைத்திட்டங்களையும் விசாரணை பொறிமுறையையும் முன்னெடுக்க வேண்டும்.

குறிப்பாக விசாரணை பொறிமுறையை நிறுவுவதில் தாமதம் காணப்படுவதாக செய்ட் அல் ஹுசைனின் வாய்மூல அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

இது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தி தாமதமின்றி நீதி பொறிமுறையை நிறுவ வேண்டும்.

அத்துடன் வடக்கு, கிழக்கில் படையினர் வசமுள்ள பொது மக்களின் காணிகளை விடுவிக்கும் செயற்பாட்டிலும் முன்னேற்றம் தேவை என மனித உரிமைகள் ஆணையாளர் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

அரசாங்கம் ஏற்கனவே பொது மக்களின் காணிகளை விடுவிக்கும் செயற்பாட்டில் பல்வேறு வேலைத்திட்டங்களை ஆரம்பித்திருக்கிறது.

ஆனால் அவற்றை உரிய முறையில் மக்களுக்கு பயன்பாடு ஏற்படும் வகையிலும் விடுவிப்பதற்கு அரசாங்கம் அவசரமாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆக மொத்தத்தில் பார்க்கும் போது ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரின் இலங்கை தொடர்பான வாய்மூல அறிக்கையானது இலங்கைக்கு கால அவகாசத்தை வழங்குவதாக இருந்தாலும் நல்லிணக்க நீதிப் பொறிமுறை மற்றும் விசாரணை செயற்பாடுகளிலும் காணப்படுகின்ற குறைபாடுகளையும் சுட்டிக்காட்டியிருக்கிறது.

அதுமட்டுமின்றி பொறிமுறையில் காணப்படுகின்ற தாமதம் அதனை குறைத்து மதிப்பிடுவதற்கு வழிசெய்வதாகவும் மனித உரிமைகள் ஆணையாளர் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

எனவே இந்த விடயங்கள் குறித்து அரசாங்கம் தீவிர கவனம் செலுத்த வேண்டுமென்பதுடன் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் சுட்டிக்காட்டியுள்ள குறைபாடுகளை நிவர்த்திப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

எவ்வாறெனினும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு திருப்தி ஏற்படும் வகையில் நீதியான விசாரணை பொறிமுறையை முன்னெடுக்க வேண்டியது அவசியம் என்பதை வலியுறுத்துகிறோம்.
ஐ.நா. ஆணையாளர் சுட்டிக்காட்டியுள்ள முக்கிய விடயங்கள் Reviewed by NEWMANNAR on June 30, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.