விவசாய நிலங்களை வேறு தேவைக்கு பயன்படுத்துவதை தடுக்கக் கோரி பிரேரணை நிறைவேற்றம்!
வடமாகாணத்தில் விவசாய நிலங்கள் வேறு தேவைகளுக்காக பயன்படுத்தப்பட்டுவரும் நிலையில் அதனை தடுக்கும் வகையில் நியதிச்சட்டம் ஒன்றை உருவாக்க கோரி மாகாணசபை உறுப்பினர் க.சர்வேஷ்வரன் முன்மொழிந்த பிரேரணை வடமாகாணசபையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
வட மாகாண சபையின் 60ம் அமர்வு இன்றைய தினம் நடைபெற்றிருந்தது. இதன்போது வடக்கில் போருக்கு பின்னரான கடந்த 7 வருடங்களில் படையினரின் ஆக்கிரமிப்பு, கட்டிடங்கள் அமைப்பு போன்றவற்றினால் மிக வளமான விவசாய நிலம் அருகி வருகின்றது.
இந்நிலையில் அதனை தடுக்ககோரும் வகையிலான நியதிச்சட்டம் ஒன்றை உருவாக்ககோரும் பிரேரணை ஒன்றினை மாகாணசபை உறுப்பினர் க.சர்வேஸ்வரன் சபையில் முன்மொழிந்திருந்தார்.
மேற்படி பிரேரணையினை முன்மொழிந்து அவர் சபையில் உரையாற்றுகையில்,
60th NPC Session
வடமாகாணத்தின் பொருளாதாரம் விவசாயம், கடற்றொழில் அகியவற்றில் தங்கியுள்ளது. தனிமனிதனோ, சமூகமோ, இனமோ, நாடோ உணவு தேவையில் பூர்த்தியடையாமல் கையேந்தும் நிலை உருவானால் அதன் இருப்பு மற்றும் ஸ்திர த்தன்மை ஆகியன கேள்விக்குள்ளாக்கப்படும்.
அதன் அடுத்தக்கட்ட வளர்ச்சியும் தடைப்படும். போர் மற்றும் இடப் பெயர்வுகள் காரணமாக பெருமளவு விவசாய நிலங்கள் வீடுகள், கட்டிடங்கள், வர்த்தக நிலையங்கள் கட்டுவதற்கு பயன்படுத்தப்பட்டுள்ளது.
போருக்கு பின்னரான 7 வருடங்களில் படையினருடைய ஆக்கிரமிப்புகள், வீடுகள், வர்த்தக நிலையங்கள், கட்டிடங்கள் போன்றவற்றுக்காக வளமான விவசாய நிலம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதனால் அவை அருகிவரும் அபாயம் எழுந்துள்ளது.
ஆகவே வடக்கின் உணவு உற்பத்தி சுயபூர்த்தியை உத்தரவாத படுத்த வேண்டுமானால் மேற்படி நிலப்பயன்பாடு மீதான கட்டுப்பாடுகளை விதிக்க கூடியதான நியதிச்சட்டம் மிக விரைவாக உருவாக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என கூறினார்.
தொடர்ந்து இந்த பிரேரணை மீதான விவாதத்தில் கலந்து கொண்ட மாகாணசபை உறுப்பினர்கள், குளங்களை அடிப்படையாக கொண்டே விவசாயம் நடைபெற்று வந்த நிலையில், குளங்களை அண்மித்ததாக படையினர் இருந்து கொண்டிருக்கும் நிலையில் மக்கள் விவசாயம் செய்வதை தொடர்ந்தும் தாமதித்துக் கொண்டிருக்கின்றார்கள்.
படையினர் ஆக்கிரமித்திருக்கும் நிலங்களை விடவும் அதிகளவான புலம்பெயர் தமிழர்களின் நிலம் பயன்படுத்தப்படாத நிலையில் பற்றைகள் வளர்ந்து காணப்படுகின்றன.
எனவே, மக்களுடைய மனங்களில் மாறுதல்கள் உண்டாக வேண்டும் எனவும் சுட்டிக்காட்டியதுடன், விவசாயம் மற்றும் கடற்றொழில் ஆகிய துறைகளில் வழிப்படுத்தல்கள் அவசியம் எனவும் கூறியுள்ளனர்.
அத்துடன், இலாப நோக்கத்தை கொண்ட விவசாயம் மற்றும் கடற்றொழில் ஆகியன நிறுத்தப்பட வேண்டும் எனவும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.
இந்நிலையில் மேற்படி பிரேரணை சபையில் எந்தவிதமான எதிர்ப்பும் இல்லாமல் நிறைவேற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
விவசாய நிலங்களை வேறு தேவைக்கு பயன்படுத்துவதை தடுக்கக் கோரி பிரேரணை நிறைவேற்றம்!
Reviewed by Author
on
August 26, 2016
Rating:

No comments:
Post a Comment