காணாமல்போனோர் தொடர்பில் உத்தியோகபூர்வ அறிவிப்பை வெளியிடவேண்டும் - சம்பந்தன்
காணாமல் போனோர் தொடர்பில் அரசு உத்தியோகபூர்வ அறிவிப்பை விரைவில் வெளியிட வேண்டும் என தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், காணாமல் போனவர்களுடைய உறவுகளின் மனதில் சமாதானம் ஏற்படக்கூடிய வகையிலான ஒழுங்குகளையும் செய்ய வேண்டும் எனவும் அரசு கோரிக்கை விடுத்ததுள்ளார்.
வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் பிராந்திய கொன்சியூலர் அலுவலகம் நேற்றைய தினம் யாழ்.மாவட்ட செயலகத்தில் திறந்து வைக்கப்பட்டது. அந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே சம்பந்தன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்
வடமாகாணத்தில் இருந்து பல இலட்சக்கணக்கான மக்கள் சமீப காலங்களில் இடம் பெயர்ந்து வெளிநாடுகளில் வாழ்ந்து வருகின்றார்கள். இலங்கையில் வேறு எந்தவொரு மாகாணத்திலிருந்தும் இவ்வாறு தொகையான மக்கள் வெளிநாடுகளுக்கு குடிபெயரவில்லை. தமிழ் மக்களில் 50 வீதமான மக்கள் தற்போது இலங்கையில் வாழவில்லை. தற்போது தமிழ் மக்கள் அதிகமாக வாழும் யாழ்.மாவட்டத்தில் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் பிராந்திய கொன்சியூலர் அலுவலகத்தை ஆரம்பிப்பது முன்னேற்ற கரமான விடயம். அது மேலும் பலப்படுத்தப்பட வேண்டும்.
அதற்கும் மேலதிகமாக மக்களின் இறைமையின் அடிப்படையில் மக்களுக்கு அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என தொடர்ச்சியாக நாம் கேட்டு வருகிறோம். எமது காணி, பாதுகாப்பு, கல்வி, சுகாதாரம், விவசாயம் கைத்தொழில் கடற்தொழில் போன்ற பல விடயம் தொடர்பாக நீண்டகாலமாக பேசி வருகி றோம்.
இக் கோரிக்கை நிறைவேற்றப்பட வேண்டும். நாட்டு மக்கள் மத்தியில் உண்மையான புரிந்துணர்வு நல்லிணக்கம் ஏற்பட்டு நிரந்த சமாதானம் ஏற்பட வேண்டுமாக இருந்தால் அது சமத்துவ அடிப்படையிலேயே ஏற்பட வேண்டும். சமத்துவம் ஏற்பட வேண்டும் என்றால் இறைமையின் அடிப்படையில் அதிகாரம் பகிர்ந்தளிக்கப்பட்டு அந்தந்த மாகாணத்தில் வாழும் மக்கள் அந்த அதிகாரத்தை பயன்படுத்தி வாழக்கூடிய நிலை ஏற்பட வேண்டும்.
அவ்வாறான அரசியலமைப்பு ஆரம்பிக்கப்பட்டும். சில பல கருத்துக்கள் காரணமாக தாமதம் எற்பட்டுள்ளது. ஆனால் இந்த வருடத்துக்குள் இது நிறைவேற்றப்பட வேண்டும் என விரும்புகிறோம்.
எமது கருத்துடன் தொடர்புபட்ட புதிய அரசியல் யாப்பு வருவதனை தமிழ் மக்கள் மாத்திரமல்ல இக் கருத்துக்கு ஆதரவாக பெரும்பான்மையின மக்களும் பெரும்பான்மை அரசியல் தலைவர்கள் கூட விரும்புகின்றனர். முற்போக்கு சிந்தனையுடையவர்கள் ஒன்றாக அணிதிரண்டு இந்த நாட்டின் சுபீட்சத்தை மனதில் கொண்டு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். உலகில் மதிப்புள்ள நாடாக எமது நாடு வளர்ச்சி அடையவேண்டும் என்றால் தாமதம் இல்லாமல் இந்த அரசியலமைப்பு விரைவில் நடைபெற வேண்டும்.
மேலும் காணாமல் போனவர்களின் உறவுகளை சந்தித்து கலந்துரையாடிய பின்னர் பாராளுமன்றில் அவர்கள் தொடர்பான விடயத்தை விவாதித்து பல குழப்பங்கள் மத்தி யிலே, காணமால் போனோர் அலுவலகம் அமைக்கும் சட்டமூலம் நிறைவேற்றினோம். அது இன்னும் அமுல்படுத்தப்படவில்லை.அது விரைவில் அமுல்படுத்தப்பட வேண்டும்.
காணாமல் ஆக்கப்பட்டுள்ள உறவுகள் என்ன கேட்கிறார்கள்? தமது உறவுகளுக்கு என்ன நடந்தது என அறிய விரும்புகிறார்கள். கைது செய்யப்பட உறவுகளுக்கு என்ன நடந்தது என்றும் அவர்கள் உயிரோடு இருக்கிறார்களா இல்லையா என்ற விடயம் பற்றி தெளிவான பதில் இருக்க வேண்டும் என கேட்கிறார்கள்.
அது மிகவும் நியாhயமான கோரிக்கை. தமது உறவுகள் பற்றி தெளிவில்லாமல் தத்தளிக்கின்றார்கள்.
இந்த நிலை தொடரக் கூடாது. உண்மை அறிந்து மக்களின் மனதில் சமாதானம் ஏற்படக்கூடிய வகையில் ஏதும் ஒழுங்கு செய்யப்பட வேண்டும். அவர்களுக்கு ஆறுதல் கொடுக்கப்பட வேண்டும். மனதில் சாந்தி ஏற்படும் வகையில் ஒரு முடிவுக்கு வந்து உத் தியோகபூர்வ அறிவிப்பை உறவினருக்கு அறிவிக்க வேண்டும். அவர்களின் வாழ்கைக்கு வழி செய்ய வேண்டும். மக்கள் போராட்டத்தில் நியாயத்தை மறுக்க முடியாது. விரைவில் பதில் வழங்க வேண்டும் என சம்பந்தன் மேலும் தெரிவித்தார்.
காணாமல்போனோர் தொடர்பில் உத்தியோகபூர்வ அறிவிப்பை வெளியிடவேண்டும் - சம்பந்தன்
Reviewed by Author
on
January 28, 2017
Rating:

No comments:
Post a Comment