உள்ளூர் பேருந்து சேவைகள் அதிகரிக்கப்பட வேண்டும்: முல்லைத்தீவு மக்கள் கோரிக்கை
முல்லைத்தீவு மாவட்டத்தின் உள்ளூர் பஸ் சேவைகள் அதிகரிக்கப்பட வேண்டும் என பல கிராமங்களின் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இறுதிப் போர் நடைபெற்ற மாத்தளன், அம்பலவன் பொக்கணை, வலைஞர்மடம் மற்றும் குமுழமுனை, முத்தையன்கட்டு, மாந்தை கிழக்கு, துணுக்காய் ஆகிய பகுதிகளின் பல கிராமங்கள் பஸ் சேவைகள் நடைபெறாததன் காரணமாக மக்கள் போக்குவரத்து நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த மாவட்டத்தில் அதிக குடும்பங்கள் வாழ்கின்ற குமுழமுனை, முத்தையன்கட்டு ஆகிய கிராமங்களுக்கு பஸ் சேவைகள் நடைபெறுகின்ற போதிலும் இவை அதிகரிக்கப்பட வேண்டும் என இந்த பிரதேச மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.
முல்லைத்தீவின் இரு பிரதேச செயலாளர் பிரிவுகளான மாந்தை கிழக்கு, துணுக்காய் ஆகிய கிராமங்களின் பஸ் சேவைகளும் அதிகரிக்கப்பட வேண்டும் எனத் தொடர்ச்சியாக கோரிக்கை விடுக்கப்பட்டு வருகின்றது.
கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் வடமாகாண சபையின் பிரதி அவைத் தலைவர் வடமாகாண போக்குவரத்து அமைச்சின் செயலாளருக்கு கடிதம் ஒன்றிணை அனுப்பி வைத்துள்ளார்.
அந்த கடிதத்தில், மாங்குளத்தில் பஸ் நிலையத்தினை அமைத்து அந்த பஸ் நிலையத்தில் இருந்து பஸ்கள் மாந்தை கிழக்கு, துணுக்காய் கிராமங்களுக்குப் பயணிக்கக் கூடிய வகையில் பஸ் நிலையத்தினை அமையுங்கள் என கோரிக்கை விடுத்துள்ளார்.
ஆனால் இதுவரை பஸ் நிலையம் அமைப்பதற்கான முயற்சிகள் தொடங்கப்படவில்லை என பிரதேச வாசிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.
உள்ளூர் பேருந்து சேவைகள் அதிகரிக்கப்பட வேண்டும்: முல்லைத்தீவு மக்கள் கோரிக்கை
Reviewed by Author
on
July 15, 2017
Rating:

No comments:
Post a Comment