ரோஹிங்யா அகதிகள் எண்ணிக்கை 400000 உயர்வு: வங்காளதேசத்தில் 14,000 புதிய முகாம்கள் அமைப்பு
வங்காளதேசத்தில் தஞ்சமடைந்து வரும் ரோஹிங்யா அகதிகள் எண்ணிக்கை 4 லட்சமாக உயர்ந்துள்ளதால், அவர்களுக்கு 14000 முகாம்கள் அமைக்கப்பட்டு வருகின்றன என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மியான்மரின் வடக்குப் பகுதியான ரக்கினே மாநிலத்தில் சிறுபான்மை ரோஹிங்யா இன முஸ்லிம்கள் அதிகளவில் வாழ்ந்து வருகின்றனர். வங்காளதேசம் நாட்டில் இருந்து குடிபெயர்ந்து மியான்மரில் பத்து லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தொகையை கொண்டவர்களாக இருக்கும் இவர்களில் சிலர், கடந்த 2012-ம் ஆண்டில் இருந்து ஆட்சியாளர்களின் ஒடுக்குமுறைக்கு எதிராக ஆயுதம் தாங்கிய போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
ராணுவத்தினரின் தாக்குதலால் உயிருக்கு பயந்து ரோஹிங்யா முஸ்லிம்கள் வங்காளதேசத்திற்கு தப்பிச் சென்ற வண்ணம் உள்ளனர். மியான்மரில் உள்ள போலீஸ் சோதனைச் சாவடிகளின்மீது கடந்த ஆகஸ்ட் மாதம் 25-ம் தேதி ரோஹிங்யா போராளிகள் தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து அவர்களுக்கு எதிரான ராணுவ வேட்டை தீவிரமாகி உள்ளது.
மியான்மரில் ராணுவ நடவடிக்கைகள் தொடங்கிய நாளில் இருந்து சுமார் 3.70 லட்சம் ரோஹிங்யா முஸ்லிம்கள் அங்கிருந்து வெளியேறி அண்டை நாடான வங்காளதேசத்தில் அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ளனர்.
இந்நிலையில், வங்காளதேசத்தில் ரோஹிங்யா அகதிகளின் எண்ணிகை 4 லட்சமாக உயர்ந்துள்ளது. அதனால் அவர்களுக்காக 14000 முகாம்கள் அமைக்கப்பட்டு வருகின்றன என அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக, பேரிடர் மேலாண்மை துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் கூறுகையில், மியான்மரில் இருந்து வரும் ரோஹிங்யா அகதிகள் எண்ணிக்கை 4 லட்சத்தை தாண்டியுள்ளது. எனவே அவர்களை தங்க வைக்கும் வகையில் தற்காலிக முகாம்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. மொத்தம் 14000 முகாம்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. அவற்றை 10 நாள்களில் அமைத்து தரும்படி கோரிக்கை விடுத்துள்ளோம்.
ரோஹிங்யா அகதிகள் மீண்டும் அவர்களது நாட்டுக்கு திரும்பும்வரை அந்த முகாம்களில் தான் தங்க வேண்டும். சாலை, ரெயில் மற்றும் நீர் வழியாகவோ ஓரிடத்தில் இருந்து மற்ற இடத்துக்கு செல்ல அவர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என தெரிவித்துள்ளனர்.
ரோஹிங்யா அகதிகள் எண்ணிக்கை 400000 உயர்வு: வங்காளதேசத்தில் 14,000 புதிய முகாம்கள் அமைப்பு
Reviewed by Author
on
September 18, 2017
Rating:

No comments:
Post a Comment