பல்கலைக்கழக மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதை ஒருபோதும் ஏற்கவே முடியாது - சந்திரிக்கா -
யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் மற்றும் செயலாளர் ஆகியோரை பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்து தடுத்து வைத்திருப்பதை ஒருபோதும் ஏற்கவே முடியாது என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
இராணுவத்தினர், விசேட அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸார் ஆகியோர் இணைந்து நடத்திய சுற்றிவளைப்பு தேடுதலின் போது யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அறையில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் புகைப்படமும், மாவீரர்களின் புகைப்படங்களும் இருந்தன என குற்றம்சாட்டி, பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் எம்.திவாகரன், செயலாளர் எஸ்.பபில்ராஜ் ஆகியோர் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பில் சந்திரிக்கா இன்று ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
மாணவர்கள் இருவரும் அப்பாவிகள் என்று தமிழ் அரசியல்வாதிகளும் யாழ். பல்கலைக்கழக சமூகத்தினரும் தெரிவித்துள்ளனர். விடுதலைப் புலிகளின் படங்கள் கடந்த காலங்களில் வைக்கப்பட்டிருந்தன.
எனவே, சட்டமா அதிபர் இது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும். மாணவர்களின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு அவர்களை விடுவிக்க வேண்டும்.
யாழ்ப்பாண கல்வி சமூகத்தின் முதுகெலும்பாக யாழ். பல்கலைக்கழகம் விளங்குகின்றது. இதனால் தான் விடுதலைப் புலிகளின் காலத்தில் அந்த பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் அரசியல் நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்பட்டிருந்தனர்.
இதனால் எனது ஆட்சிக்காலத்திலும் மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்திலும் யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் சிலர் சிறைவாசம் அனுபவிக்க வேண்டி இருந்தது.
2009ஆம் ஆண்டுக்குப் பின் யாழ். பல்கலைக்கழத்தில் அமைதியான முறையில் கற்றல் நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன.
இந்தநிலையில், அப்பாவி மாணவர்களை கைது செய்து தடுத்து வைப்பது அந்த பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகளில் குழப்ப நிலையைத் தோற்றுவிக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.
பல்கலைக்கழக மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதை ஒருபோதும் ஏற்கவே முடியாது - சந்திரிக்கா -
Reviewed by Author
on
May 15, 2019
Rating:

No comments:
Post a Comment