உலக வாழ் மக்களுக்கு பாப்பரசர் விடுத்துள்ள அழைப்பு -
கத்தோலிக்கர்களின் தலைமையிடமான வத்திக்கான் நகரில், ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட சிறப்பு பிரார்த்தனையின் போது பாப்பரசர் இதனைத் தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு ஆண்டும் வத்திக்கான் நகரில் உள்ள புனித பீட்டர் சதுக்கத்தில் நடைபெறும் இந்த சிறப்பு பிரார்த்தனையில் உலகெங்கிலும் இருந்து ஆயிரக்கணக்கான கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் பங்கேற்பது வழக்கம்.
ஆனால் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக வத்திக்கான் நகரில் மக்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டடுள்ளன.
இதனால் பிரார்த்தனையில் மக்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை.
மூத்த கர்தினால்கள் உட்பட 12 பேர் மட்டும் பாப்பரசர் பிரான்சிஸ் தலைமையிலான பிரார்த்தனையில் பங்கேற்றனர்.
மேலும் ஞானஸ்நானம் உள்ளிட்ட வழக்கமான மத சடங்குகள் கைவிடப்பட்டன. அதே சமயம் பாப்பரசர் பிரான்சிஸின் பிரார்த்தனை நேரலையில் ஒளிபரப்பப்பட்டது.
பிரார்த்தனையின் முடிவில் பாப்பரசர் பிரான்சிஸ் மக்களுக்கு உரையாற்றினார்.
இதன்போது அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
எதிர்காலத்தை பற்றியும் மீண்டும் கட்டியெழுப்ப வேண்டிய அனைத்தையும் பற்றியும் பயம் உள்ளது. இது ஒரு வேதனையான நினைவு. இருண்ட நேரம். நமது நம்பிக்கை குறைக்கப்படுகின்றது.
ஆனால் இந்த தருணத்தில் கடவுள் நமக்கு திரும்ப திரும்ப சொல்லும் வார்த்தைகள் இவைதான். பயப்படாதீர்கள், பயப்பட வேண்டாம். இது இன்று நமக்கு உரைக்கப்படும் நம்பிக்கையின் செய்தி.
எனவே மக்கள் கொரோனா பற்றிய அச்சத்திற்கு அடிபணிய வேண்டாம். மாறாக இந்த நேரத்தில் மற்றவர்களுக்கு நம்பிக்கையை பரப்பும் தூதர்களாக இருக்க வேண்டும்.
மரணத்தின் அழுகைகளை மௌனமாக்குவோம். இனி போர்கள் இல்லை என்ற நிலையை அடைய வேண்டும். ஆயுதங்களை உற்பத்தி செய்வதையும் ஆயுத வர்த்தகத்தையும் நிறுத்திவிட்டு ஏழைகளுக்கு உதவுவோம் என குறிப்பிட்டுள்ளார்.
உலக வாழ் மக்களுக்கு பாப்பரசர் விடுத்துள்ள அழைப்பு -
Reviewed by Author
on
April 15, 2020
Rating:

No comments:
Post a Comment