உற்று பாருங்க.. இதுதான் முகேஷ் அம்பானி துபாய் வீடு.. பனை மர செயற்கை தீவில் மகன் ஆனந்த்துக்கு மாளிகை
27 மாடி வீடு
முகேஷ் அம்பானி தனது மனைவி மற்றும் பிள்ளைகளுடன் மும்பையில் உள்ள அன்டிலியா என்ற வீட்டில் வசித்து வருகிறார். அன்டிலியா என்பது வீடு என்று கூறப்படாலும் அதுவும் பங்களாதான். தெற்கு மும்பையில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டிருக்கும் அன்டிலியா 27 மாடிகளை கொண்டது. மும்பையில் குடும்பத்துடன் வசித்தாலும் பல வெளிநாடுகளில் அவரது குடும்பத்தினர் பெயரில் பங்களாக்களை வாங்கி வைத்துள்ளார் முகேஷ் அம்பானி.
துபாயில் பிரமாண்ட பங்களா
அந்த வகையில், தனது இளைய மகன் ஆனந்த் அம்பானிக்காக துபாயில் உள்ள பாம் ஜுமேரா பகுதியில் மிகப்பெரிய பங்களாவை முகேஷ் அம்பானி வாங்கி இருக்கிறார். இந்த பங்களாவை வாங்குவதற்கான ஒப்பந்தம் இந்த ஆண்டு தொடக்கத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் மொத்த மதிப்பு 80 மில்லியன் டாலர் எனக் கூறப்படுகிறது. அதாவது நமது இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.643 கோடி ஆகும். துபாயில் வீடுகளை வாங்கி விற்கும் ரியல் எஸ்டேட் துறையில் இதுவே மிகப்பெரிய ஒப்பந்தமாக பார்க்கப்படுகிறது.
என்ன வசதிகள்
கடற்கரை அருகே 33,000 சதுர அடியில் கட்டப்பட்டுள்ள இந்த பங்களாவில் 10 பிரம்மாண்டமான படுக்கை அறைகள் உள்ளன. 7 ஸ்பாக்கள் இரண்டு நீச்சல் குளங்கள் உள்ளன. இந்த நீச்சல் குளங்களை தவிர்த்து பங்களாவுக்குள்ளும் ஒரு பிரம்மாண்ட நீச்சல் குளம் உள்ளது. இந்த பங்களாவை ரிலையன்ஸ் குழுமத்தின் வெளிநாட்டு நிறுவனம் ஒன்றால் பராமரிக்கப்படும் எனக் கூறப்படுகிறது. ரிலையன்ஸ் குழுமத்தின் இயக்குநர் பரிமல் நத்வானியால் இந்த வில்லா நிர்வகிக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாம் ஜூமேரா சிறப்பு
இந்த பங்களா அமைந்துள்ள பாம் ஜுமேராவில் உலக அளவில் மிகப்பெரிய செல்வந்தர்களும், பிரபலங்களும் சமீபகாலமாக வீடுகளை வாங்கி வருகின்றனர். பாலிவுட் நடிகர் ஷாருக் கான், பிரிட்டன் கால்பந்து வீரர் டேவிட் பெக்காம் உள்ளிட்டோர் அண்மையில் அங்கு வீடு வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
பாம் ஜுமேரா - கடலில் ஒரு சொர்க்கம்!
ஒரு காலத்தில் பாலைவனமாக இருந்து இன்று செல்வ சீமான்களின் கோட்டையாக மாறியிருக்கும் நகரம் துபாய். பல நூறு அடுக்குமாடிகளை கொண்ட பிரம்மாண்ட கட்டிடங்கள், கண்ணை கவரும் கேளிக்கை விடுதிகள், தேவலோகத்தையும் மிஞ்சும் நட்சத்திர ஹோட்டல்கள் என பூமியில் ஒரு சொர்க்கமாக துபாய் மின்னி வருகிறது. அப்படிப்பட்ட துபாய் என்ற தங்க கிரீடத்தில் வைரக் கல் பதித்தால் எப்படி இருக்கும்? அப்படிதான் இருக்கிறது பாம் ஜுமேரா தீவுகள். இது இயற்கையான தீவுகள் அல்ல. கடலில் மனிதர்களால் உருவாக்கப்பட்ட ஒரு செயற்கை தீவுக்கூட்டம். கடலில் 10 மீட்டர் ஆழத்துக்கு மணல் கொட்டப்பட்டு அந்தப் பகுதிகளை மேடாக்கி இந்த தீவுக்கூட்டம் உருவாக்கப்பட்டிருக்கிறது. சுமார் 40 ஆயிரம் தொழிலாளர்களை கொண்டு இந்த தீவு கட்டமைக்கப்பட்டது. மேலே இருந்து பார்த்தால் ஒரு பெரிய பனைமரம் இருப்பதை போன்ற வடிவத்தில் இந்த தீவு இருக்கும். அதனால்தான் இதற்கு பாம் (palm) என பெயர் சூட்டப்பட்டுள்ளது.
நூற்றுக்கணக்கான நட்சத்திர ஓட்டல்கள், ரெஸ்டாரண்டுகள், கேளிக்கை மாளிகைகள் என நமது கற்பனையில் உருவான சொர்க்கத்தையே இந்த பாம் ஜூமேரா மிஞ்சிவிடும். அங்கு வசிக்கும் மக்களையும், சுற்றுலா பயணிகளை குளிர்விக்க அடிக்கடி செயற்கை மழையும் அங்கு பொழிய வைக்கப்படும். அதுமட்டுமல்லால், கடலில் நீர் சறுக்கு, படகு சவாரி உள்ளிட்ட விளையாட்டுகளும் இங்கு இருக்கின்றன. அமெரிக்காவில் பொழுதுபோக்கு நகரமாக விளங்கும் லாஸ் வேகாஸை போல துபாயில் இந்த பாம் ஜுமேரா விளங்குகிறது. எனவே பாம் ஜுமேராவில் வீடுகள் உள்ளிட்ட சொத்துகளை வாங்க உலக பணக்காரர்கள் மத்தியில் கடும் போட்டி நிலவுகிறது.
உற்று பாருங்க.. இதுதான் முகேஷ் அம்பானி துபாய் வீடு.. பனை மர செயற்கை தீவில் மகன் ஆனந்த்துக்கு மாளிகை
Reviewed by Author
on
August 27, 2022
Rating:

No comments:
Post a Comment