ஜனாதிபதியின் அழைப்பை நிராகரித்த தமிழ்த் தேசிய பொதுக் கட்டமைப்பு:
ஜனாதிபதி செயலகத்தால் விசேட கலந்துரையாடலுக்காக விடுக்கப்பட்ட அழைப்பை, தமிழ்த் தேசிய பொதுக் கட்டமைப்பை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்கள் நிராகரித்துள்ளனர்.
இந்த விசேட கலந்துரையாடல் நாளை திங்கட்கிழமை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்ததாக தெரியவருகின்றது.
ஜனாதிபதித் தேர்தலுக்காகத் தமிழ்ப் பொது வேட்பாளர் ஒருவரைக் களமிறக்குகின்ற தமிழ்த் தேசிய பொது கட்டமைப்பால், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
தமிழ்த் தேசிய பரப்பில் இயங்குகின்ற ஏழு அரசியல் கட்சிகள் மற்றும் 07 சிவில் சமூக அமைப்புகள் இணைந்து இந்தக் கட்டமைப்பை உருவாக்கியுள்ளன.
இதன்படி, தமிழ் பொது வேட்பாளராக பா. அரியநேத்திரனை நியமிப்பதற்கு அண்மையில் தீர்மானிக்கப்பட்டது.
இந்நிலையில் அவரை சந்திப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அழைப்பு விடுத்திருந்தார்.
எனினும் குறித்த சந்திப்பு தொடர்பான போதிய விளக்கங்கள் வழங்கப்படாததன் காரணமாக,மேலதிக விபரங்களை வழங்குமாறு கோரி ஜனாதிபதிக்கு தேசிய பொது கட்டமைப்பு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளது.
குறுகிய கால அழைப்பு மற்றும் தேர்தல் பணிகள் காரணமாக தமக்கு இந்த கலந்துரையாடலில் கலந்துகொள்ள முடியாது என தமிழ்த் தேசிய பொதுக் கட்டமைப்பு தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும் தெளிவான பதில் கிடைக்கும் பட்சத்தில் கலந்துரையாடல் தொடர்பில் பரிசீலிக்கப்படும் என தமிழ்த் தேசிய பொதுக்கட்டமைப்பின் உறுப்பினரும், ஈ.பி.ஆர்.எல்.எஃப்பின் தலைவருமான சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.
Reviewed by Author
on
August 11, 2024
Rating:


No comments:
Post a Comment