மன்னார் நகர சபை எல்லைக்குள் நீண்ட காலமாக சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய மாடு அறுக்கும் நிலையத்திற்கு சீல்
மன்னார் நகர சபை எல்லைக்குள் காணப்படும் மாட்டு இறைச்சி விற்பனை நிலையங்களுக்கான மாடு அறுக்கும் நிலையத்திற்கு மன்னார் பொது சுகாதார வைத்திய அதிகாரிகள் பணிமனையினால் சீல் வைக்கப்பட்டுள்ளது.
மன்னார் பொது சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வு நடவடிக்கையின் போது மன்னார் பள்ளிமுனை பகுதியில் அமைந்துள்ள மாடு அறுக்கும் நிலையமானது பல வருடங்களாக சுகாதார நடைமுறைகளுக்கும் அரச அறிவுறுத்தல்களுக்கு அமைய இயங்காத நிலையில் மன்னார் சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் மன்னார் பொது சுகாதார பரிசோதகர்கள் இணைந்து குறித்த நடவடிக்கையை மேற்கொண்டனர்.
குறிப்பாக மாடுகளை அறுக்கும் பகுதி அசுத்தமாக காணப்பட்டமை,உரிய சுகாதார நடைமுறைகள் பின் பற்றப்படாமை,விலங்கு கழிவுகள் சுற்றுப்பகுதிகளில் காணப்பட்டமை,கழிவு அகற்றும் செயற்பாடுகள் ஒழுங்கு படுத்தப்படாமை,கழிவுநீர் தேங்கி காணப்படுகின்றமை,மாடுகளை அறுக்கும் போது பின்பற்ற வேண்டிய சுகாதார நடைமுறைகள் பின் பற்றப்படாமை,அரச அறிவுறுத்தல்கள் பின் பற்றப்படாமை ,மாடு அறுப்பதற்குறிய கட்டமைப்பு காணப்படாமை போன்ற பல்வேறு குறைபாடுகளின் அடிப்படையில் குறித்த நிலையத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
குறித்த செயற்பாட்டின் காரணமாக மன்னார் நகரசபைக்கு பல லட்சம் வருமான இழப்பு ஏற்பட உள்ள போதிலும் மக்களின் சுகாதார வசதிகளை கருத்தில் கொண்டு நகரசபையும் குறித்த சுகாதார குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கான ஏற்பாடுகள் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

No comments:
Post a Comment