சிறப்பாக நடைபெற்ற முல்லைத்தீவு மாவட்ட விளையாட்டுப் போட்டி!
முல்லைத்தீவு பிரதேச செயலகங்களுக்கிடையிலான மாவட்ட மட்ட விளையாட்டுப் போட்டியின் இறுதி நிகழ்வு நேற்றைய தினம்(30) மாவட்ட அரசாங்க அதிபர் திரு.அ.உமாமகேஸ்வரன் தலைமையில் கரைதுறைப்பற்று பிரதேச சபை விளையாட்டு மைதானத்தில் பி.ப 3.00 மணிக்கு நடைபெற்றது.
நிகழ்வின் பிரதம விருந்தினராக சர்வதேச விளையாட்டு வீராங்கனை அகிலத்திருநாயகி அவர்கள் கலந்துசிறப்பித்தார்.
இறுதிப் போட்டியின் நிகழ்வாக கரைதுறைப்பற்று பிரதேச உதைபந்தாட்ட கழக அணியும் புதுக்குடியிருப்பு பிரதேச கழக அணியும் மோதியது இறுதியில் புதுக்குடியிருப்பு கழக அணி வெற்றிவாகை சூடியது.
மாவட்ட மட்ட பிரதேச விளையாட்டுப் போட்டியில் புதுக்குடியிருப்பு பிரதேசம் முதலாம் இடத்தினையும் கரைதுறைப்பற்று பிரதேசம் இரண்டாம் இடத்தினையும் மாந்தைகிழக்கு மூன்றாம் இடத்தினையும், பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
குறித்த நிகழ்வில் மேலதிக மாவட்ட அரசாங்க அதிபர் திரு.எஸ்.குணபாலன், கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி.மஞ்சுளாதேவி சதீசன்,புதுக்குடியிருப்பு பிரதேச உதவித் திட்டமிடல் பணிப்பாளர், மாவட்ட நிர்வாக உத்தியோகத்தர், கரைதுறைப்பற்று பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தர், கரைதுறைப்பற்று பிரதேசசபையின் செயலாளர், மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் திரு. முகுந்தன், மாவட்ட பயிற்றுவிப்பாளர், பிரதேச விளையாட்டு உத்தியோகத்தர்கள், ஏனைய உத்தியோகத்தர்கள் , பார்வையாளர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

No comments:
Post a Comment