மன்னார் போராட்டத்தை ஆதரித்து ஒன்று திரண்ட மன்னார் முஸ்லிம் மக்கள்
மன்னார் மாவட்டத்தில் இடம் பெற்றும் காற்றாலை மின் கோபுரங்கள் அமைத்தல் மற்றும் கனிய மணல் அகழ்வு உள்ளிட்ட செயற்திட்டங்கள் தொடர்பில் உறுதியான தீர்வு கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் என தெரிவித்து 13 ஆவது நாளாக இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (15) போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில்,இன்றைய தினம் மதியம் குறித்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து மன்னார் முஸ்லிம் மக்களும் கலந்து கொண்டனர்.
-இன்றைய தினம் வெள்ளிக்கிழமை(15) மதியம் நடைபெற்ற ஜும்மா தொழுகை நிறைவடைந்த நிலையில்,முஸ்லிம் மக்கள் குறித்த போராட்டத்தில் கலந்து கொண்டு குறித்த போராட்டத்திற்கு வலு சேர்க்கும் வகையில் தமது ஆதரவை வழங்கியுள்ளனர்.
மன்னார் நகர பிரதான சுற்றுவட்ட பகுதியில் 13 வது நாளாக மக்களினால் குறித்த போராட்டம் தொடர்ச்சியாக சுழற்சி முறையில் இடம் பெற்று வருகிறது.
அண்மையில் இடம் பெற்ற ஜனாதிபதியுடனான சந்திப்பில் காற்றாலை செயற்திட்டங்களை ஒரு மாத காலம் நிறுத்தி வைப்பதாக ஜனாதிபதியினால் வாக்குறுதி வழங்கப்பட்ட போதிலும் உறுதியான முடிவு வரும் வரை போராட்டத்தை கைவிடப் போவதில்லை என போராட்டகாரர்கள் தெரிவித்துள்ள நிலையில் இன்றைய தினம் போராட்டம் இடம் பெற்றமையும் குறிப்பிடத்தக்கது

No comments:
Post a Comment