குறைந்த அழுத்தப் பிரதேசம் நாட்டை விட்டு விலகுகிறது
தென்மேற்கு வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்தில் நிலவும் குறைந்த அழுத்தப் பிரதேசம் நாட்டை விட்டு விலகிச் செல்வதால், தற்போது நிலவும் பலத்த மழை நிலைமை படிப்படியாகக் குறைந்து வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அத்திணைக்களம் இன்று (22) பிற்பகல் 2 மணிக்கு விடுத்துள்ள அறிக்கையில் இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், நாளை (23) வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் அடிக்கடி மழை பெய்யக்கூடும்.
அதேபோல், களுத்துறை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் கடலோரப் பகுதிகளில் காலை வேளையில் மழை பெய்யக்கூடும்.
மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் களுத்துறை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் நாளை பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்பிரதேசங்களின் சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகளவான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும்.
இதற்கிடையில், மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களிலும் அம்பாறை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் சில இடங்களில் அதிகாலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படலாம்.
இடியுடன் கூடிய மழையின் போது ஏற்படக்கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய விபத்துக்களைக் குறைத்துக் கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
குறைந்த அழுத்தப் பிரதேசம் நாட்டை விட்டு விலகுகிறது
Reviewed by Vijithan
on
February 22, 2026
Rating:
Reviewed by Vijithan
on
February 22, 2026
Rating:


No comments:
Post a Comment