அமைச்சர் றிஷாட் பதியுதீனுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு
ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு அரசாங்கத்தின் அமைச்சரான றிஷாட் பதியுதீன், நீதிமன்றத்தை அவமதித்த குற்றத்துக்காக தண்டிக்கப்பட வேண்டுமென மேல் நீதிமன்றத்திடம் விண்ணப்பிக்கும் மனுவொன்றை மன்னார் சட்ட சங்கம், காலி சட்ட சங்கம் ஆகியவற்றின் தலைவர்கள் உட்பட சிரேஸ்ட சட்டத்தரணிகள் இன்று புதன்கிழமை தாக்கல் செய்தனர்.
வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் அமைச்சருமான றிஷாட் பதியுதீன், இம்மனுவில் பிரதிவாதியாக குறிப்பிடப்பட்டுள்ளார். நீதிமன்றத்தை அவமதித்தார் என அவருக்கு தண்டனை வழங்கக்கூடாது என்பதற்கு காரணம் காட்டுமாறு பிரதிவாதிக்கு நீதிமன்றம் பணிக்க வேண்டுமென மனுவில் கேட்டுள்ளனர்.
நீதிமன்றத்தை அவமதித்த குற்றத்துக்காக அவரை தண்டிக்க வேண்டுமெனவும் மனுவில் கூறப்பட்டுள்ளது. இல. பீ 396ஃ2010 வழக்கு தொடர்பாக மன்னார் நீதவான் கடந்த ஜூலை 16ஆம் திகதி விடுத்த ஆணையை மாற்றுமாறு ஜூலை 17ஆம் திகதி பிரதிவாதி நீதவானுக்கு தொலைபேசி மூலம் கூறியுள்ளார். அத்துடன், ஜூலை 18ஆம் திகதி தனியார் ஒருவரின் தொலைபேசியிலிருந்தும் நீதவானுக்கு இன்னொரு அழைப்பு வந்துள்ளது.
பிரதிவாதி, ஜூலை 18இல் நீதி சேவைகள் ஆணைக்குழுவின் தலைவரைச் சந்தித்து மன்னார் நீதவானை உடனடியாக இடமாற்றம் செய்யும்படியும் கேட்டுள்ளார். இதற்கு முன்னர் பிரதிவாதி, நீதி சேவைகள் ஆணைக்குழுவின் செயலாளருடன் தொலைபேசியில் பேசியுள்ளார்.
இவை எல்லாம் நீதித்துறையினதும் நிதிமன்றங்களினதும் முறையான செயற்பாட்டில் மேற்கொள்ளப்பட்ட தலையீடு என மனுதாரர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
அமைச்சர் றிஷாட் பதியுதீனுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு
Reviewed by NEWMANNAR
on
July 25, 2012
Rating:

No comments:
Post a Comment