பருத்தித்துறையில் புலிகளின் பாரிய இரகசிய சுரங்கப்பாதை?
பருத்தித்துறை நகரப் பகுதி பேருந்து நிலையத்தில் இருந்து துறைமுகத்துக்கு செல்ல புலிகள் பயன்படுத்தியதாக கருதப்படும் சுரங்கப் பாதை நேற்று தற்செயலாக கண்டறியப்பட்டுள்ளமை அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பருத்தித்துறை நகரப் பகுதியில் பேருந்து நிலையத்துக்கு அருகாமையில் வீதி திருத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
நேற்று இப்பகுதியில் வீதி திருத்தப்பணியில் ஈடுபட்டிருந்த புல்டோசர் ஒன்று திடீரென வீதியில் ஏற்பட்ட குழியொன்றில் இறங்கியது.
இந்தக் குழி சுரங்கப் பாதை போன்று துறைமுகத்தை நோக்கி நீண்டு செல்வது அவதானிக்கப்பட்டது. இதனையடுத்து அச்சமடைந்த வீதி புனரமைப்பு பணியில் ஈடுபட்டிருந்தோர் இது குறித்து இராணுவத்தினருக்கு தகவல் கொடுத்தனர்.
விரைந்து சென்ற இராணுவத்தினர் அந்தப் பகுதியை ஆய்வு செய்தனர். தொடர்ந்து இன்று இந்தப் பகுதியை முழுமையாக ஆய்வு செய்து இது துறைமுகத்தை நோக்கி செல்லும் சுரங்கப் பாதை தானா என்பது குறித்து ஆய்வு இடம்பெறும் எனத் தெரிய வருகிறது.
இதன் பின்னரே இது புலிகளால் பயன்படுத்தப்பட்ட இரகசிய சுரங்கப் பாதை தானா என்பது தெரியவரும்.
இதேவேளை, பிரதேச வாசிகள் சிலர் இப்பகுதியில் புலிகளின் சுரங்கப் பாதை ஒன்று இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமாக இருப்பதாக தகவல் வெளியிட்டுள்ளனர்.
புலிகளின் கட்டுப்பாட்டில் யாழ்ப்பாணம் இருந்தபோது பிரதான கடல்வழிப் பாதையாக பருத்தித்துறை துறைமுகத்தையே அவர்கள் பயன்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது.
எதிரிகளின் கண்களில் மண்ணைத் தூவி முக்கிய தலைவர்களை யாழ்ப்பாணத்தில் இருந்து இந்தச் சுரங்கப் பாதை ஊடாகவே கடல் வழியாக அவர்கள் மாற்று இடங்களுக்கு அழைத்துச் செல்லவும் வேறு தேவைகளுக்கு புலிகளால் இந்த இரகசியப் பாதை பயன்படுத்தப்பட்டிருக்கலாம் எனவும் கருதப்படுகிறது.
பருத்தித்துறையில் புலிகளின் பாரிய இரகசிய சுரங்கப்பாதை?
Reviewed by NEWMANNAR
on
July 27, 2013
Rating:

No comments:
Post a Comment