இன்றும், நாளையும் ஜனாதிபதி தேர்தல் தபால் மூல வாக்களிப்பு
ஜனாதிபதி தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பு இன்றும், நாளையும் இடம்பெறவுள்ளது.
இம்முறை தபால்மூலம் வாக்களிப்பதற்கு 05 இலட்சத்து, 41 ஆயிரத்து 831 வாக்காளர்கள் தகுதிபெற்றுள்ளனர்.
அதிகளவிலான 66 ஆயிரத்து 934 தபால்மூல வாக்காளர்கள் குருநாகல் மாவட்டத்தில் பதிவாகியுள்ளனர்.
இதேவேளை, பொலிஸ் உத்தியோகத்தர்களும், தெரிவத்தாட்சி அதிகாரிகளும் வாக்களிப்பதற்காக வேறு விசேட தினமொன்று ஒதுக்கப்பட்டுள்ளதாக மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம்.மொஹமட் குறிப்பிட்டார்.
வாக்களிப்பு நடைபெறும் பகுதிகளில் பிரசாரங்களில் ஈடுபடுவது முற்றாக தடைசெய்யப்பட்டுள்ளதாக மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம் மொஹமட் மேலும் கூறினார்.
இதேவேளை, தபால்மூல வாக்களிப்பின் கண்காணிப்பு பணிகளுக்காக ஆயிரம் கண்காணிப்பாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பெவ்ரல் அமைப்பு தெரிவிக்கின்றது.
இலங்கை போக்குவரத்துச் சபையின் அலுவலகங்கள், பொலிஸ் நிலையங்கள், கல்வி அலுவலகங்கள், மற்றும் இராணுவ முகாம் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி குறிப்பிட்டார்.
இந்நிலையில், தபால்மூல வாக்களிப்பு இடம்பெறும் பகுதிகளில் விசேட பாதுகாப்பு திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரொஹன கூறினார்.
வாக்களிப்பு மத்திய நிலையங்களுக்கு அருகில் பொலிஸ் ரோந்து நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாகவும், மோட்டார் சைக்கிளில் கண்காணிப்பு பணிகள் இடம்பெறவுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.
இன்றும், நாளையும் ஜனாதிபதி தேர்தல் தபால் மூல வாக்களிப்பு
Reviewed by NEWMANNAR
on
December 23, 2014
Rating:

No comments:
Post a Comment