மிஸ்டர் பிரபாகரன் என கூறியது தேசத்துரோகமா? -நீதிமன்றம் செல்வேன்- சந்திரிக்கா
பிரபாகரனின் பெயரை மூன்று முறையே உச்சரித்துள்ளேன். இந்நிலையில் மிஸ்டர் பிரபாகரன் என்று கூறியமையை தேசத்துரோக செயலென எடுத்துக் காட்டுகின்றனர். இது முட்டாள்தனமான செயலாகும். ஆணையும் பெண்ணையும் வேறுபடுத்தி காட்டவே மிஸ்டர் என்ற வார்த்தை பிரயோகிக்கப்படுகின்றது. மஹிந்த ராஜபக் ஷவிற்கு ஆங்கில மொழி தெரியாத குறையையே எடுத்துக்காட்டுகின்றது. எனவே இது தொடர்பில் தேர்தல் முடிவடைந்த பிற்பாடு நீதிமன்றம் செல்வேன் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்தார்.
மேலும் எனது ஆட்சியின் போது நாட்டை பிளவுபடுத்தவோ பயங்கரவாதத்தை போஷிக்கவோ இல்லை. இதன்பிறகும் நாட்டை பிளவுபடுத்த மாட்டேன். எனது பக்கம் தேசத்தை காப்பாற்றியவர்களே உள்ளனர் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்;
எம் மீது பலவகை தேசத்துரோக சாயம் பூசுகின்றனர். எனது ஆட்சியின் போது நாட்டை பிளவுபடுத்தும் வகையில் ஒருபோதும் செயற்பட்டது கிடையாது. எனது ஆட்சியின் போது யுத்தத்திற்கு உரிய முக்கியத்துவம் அளித்து இராணுவம் பலப்படுத்தப்பட்டது. இதற்கமையவே யாழ்ப்பாணத்தை நாம் வெற்றி கொண்டோம்.
எனவே, நாட்டை பிளவுபடுத்தும் தேவை எமக்கு கிடையாது. நாங்கள் பயங்கரவாதத்தை போஷிக்கக் கூடியவர்கள் அல்ல. பயங்கரவாதத்தினால் நாமே அதிகளவில் பாதிப்புக்கு உள்ளாகிறோம். ஆகவே, நாட்டை பிளவுபடுத்தும் நோக்கம் எமக்கும் இல்லை.
நாம் செய்த சேவைகளை மக்கள் நினைவு கூர்ந்து பார்க்க வேண்டும். இந்த நாட்டை காட்டிக்கொடுத்தது யார்? என்பதனை மக்களே தீர்மானிக்க வேண்டும்.
இதேவேளை, தற்போது பரவலாக என் மீது ஒரு வார்த்தை கொண்டு தேசத்துரோக பட்டம் சுமத்துகின்றனர். நான் யாழ்ப்பாணத்திற்கு தேர்தல் பிரசாரத்திற்காக சென்ற வேளை மிஸ்டர் பிரபாகரன் என்று கூறியமையே நாட்டை பிளவுபடுத்தும் செயலென கூறுகின்றனர்.
மிஸ்டர் என்ற வார்த்தையை பிரயோகிப்பது ஆணுக்கும் பெண்ணுக்கும் பாகுபட்டினை காண்பிப்பதற்காகும். ஆங்கிலம் தெரியாதவர்கள் முட்டாள்தனமான செயலில் களமிறங்கியுள்ளனர்.
நான் மூன்று தடவை பிரபாகரனின் பெயரை திட்டி தீர்க்கும் வார்த்தைகளையே பிரயோகித்தேன். இதேவேளை நான் கட்சியில் இருக்கும் போது ஒருபோதும் மிஸ்டர் பிரபாகரன் என அழைத்தது கிடையாது. எனினும் மஹிந்த ராஜபக் ஷ ஆட்சி பீடமேறிய உடன் மிஸ்டர் பிரபாகரன் என்ற வார்த்தையை பிரயோகம் செய்தார். எனவே, மிஸ்டர் பிரபாகரன் என்று முதலில் கூறியவர் மஹிந்த ராஜபக் ஷவாகும்.
மிஸ்டர் பிரபாகரன் என கூறியது தேசத்துரோகமா? -நீதிமன்றம் செல்வேன்- சந்திரிக்கா
Reviewed by NEWMANNAR
on
January 06, 2015
Rating:
Reviewed by NEWMANNAR
on
January 06, 2015
Rating:
.jpg)

No comments:
Post a Comment