மன்னார் மதுபான சாலைகளில் பகல் நேரத்தில் போத்தலில் அடைக்கப்பட்ட கள் விற்பனைக்குத் தடை-உள்ளூர் உற்பத்தியாளர்களை பாதுகாக்க புதிய நடைமுறை
மன்னார் மாவட்ட உள்ளூர் கள் உற்பத்தியாளர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கிலும் மன்னார் நகர சபையில் இன்று (28) மதுவரித் திணைக்கள அதிகாரிகள்,மன்னார் பொது சுகாதார வைத்தியதிகாரி, கள் உற்பத்தியாளர்கள் மற்றும் மதுபான சாலை உரிமையாளர் களுக்கிடையிலான முக்கிய சந்திப்பு ஒன்று நடைபெற்றது.
மன்னார் நகரசபை தலைவர் டானியல் வசந்தன் தலைமையில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில், உள்ளூர் கள் உற்பத்தியாளர்கள் எதிர்நோக்கும் சந்தைப்படுத்தல் சவால்கள் மற்றும் உற்பத்திப் பொருட்களை முறையாக விற்பனை செய்ய முடியாமை குறித்து விரிவாக ஆராயப்பட்டது.
குறித்த கலந்துரையாடலில் 5 மாதங்களுக்கு போத்தலில் அடைக்கப்பட்ட கள் மதுபான சாலைகளில் விற்பனை செய்வதை நிறுத்தி தருமாறு உள்ளூர் கள் உற்பத்தியாளர்கள் கோரிக்கை முன்வைக்கப்பட்டது .
இருந்த போதிலும் குறித்த கோரிக்கை தொடர்பில் பல்வேறு வாத பிரதிவாதங்கள் இடம் பெற்றது.
இருப்பினும் உள்ளூர் உற்பத்தியாளர்களின் கோரிக்கையின் அடிப்படையில் மதுபான விற்பைனையாளர்களின் சம்மந்ததுடன் விற்பனை நேரக்கட்டுப்பாடு தொடர்பில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.
அதன்படி மன்னார் நகர் பகுதியில் உள்ள மதுபான சாலைகளில் (Wine Stores) தினமும் காலை 10:00 மணி முதல் பிற்பகல் 02:00 மணி வரை போத்தலில் அடைக்கப்பட்ட கள் விற்பனையைத் தற்காலிகமாக நிறுத்தி வைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டது.
உள்ளூர் உற்பத்தியாளர்களின் கள் விற்பனையை உறுதிப்படுத்தவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதே நேரம் தற்போது இயங்காமல் இருக்கும் உயிலங்குளம் கள் உற்பத்தி நிலையத்தை (Toddy Bottling Plant) மீண்டும் முழுமையான அளவில் இயங்கச் செய்வதற்கு உடனடி நடவடிக்கைகளை மதுவரித் திணைக்களம் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன்னெடுக்க வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது.
இதன் மூலம் உற்பத்தியாளர்களின் கள்ளினை தரமான முறையில் போத்தல்களில் அடைத்து வெளிமாவட்டங்களுக்கு சந்தைப்படுத்த முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நடை முறைகளை மதுபானசாலை உரிமையாளர்கள் முறையாக பின்பற்றுவதை மதுவரித் திணைக்கள அதிகாரிகள் கண்காணிப்பதுடன், உற்பத்தியாளர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற முழுமையான ஒத்துழைப்பு வழங்குவதாகவும் உறுதியளிக்கப்பட்டது
இந்தத் தீர்மானங்கள் மூலம் மன்னார் மாவட்டத்தின் தென்னை மற்றும் பனை சார் கள் உற்பத்தியாளர்கள் பெரும் நன்மை அடைவர் என எதிர்பார்க்கப் படுவதோடு, உள்ளூர் உற்பத்திகளுக்கான கேள்வி அதிகரிக்கும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
Reviewed by Vijithan
on
April 28, 2026
Rating:

.jpg)





No comments:
Post a Comment