
யாழ். குடா நாட்டில் முன்னெடுக்கப்பட்ட மின்சார வேலைத்திட்டம் காரணமாக நீர் மற்றும் சூழல் மாசுபடுதல்களை சுட்டிக்காட்டி தாக்கல் செய்யப்பட்ட மனு விசாரணைக்காக வட மாகாண சபை முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் உள்ளிட்ட சிலருக்கு நீதிமன்றம் அழைப்பாணை விடுத்துள்ளது.
இவர்களை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 16ம் திகதி ஆஜராகுமாறு உயர் நீதிமன்றம் இன்று அழைப்பாணை பிறப்பித்துள்ளது.
வலிகாமம் � சுன்னாகத்தில் முன்னெடுக்கப்பட்ட மின்சார வேலைத்திட்டம் காரணமாக குடிநீர், சூழல் மாசு ஏற்பட்டதாக தெரிவித்து சுற்றுச்சூழல் பராமரிப்பு மத்திய நிலையத்தின் தலைவர் ரவீந்திர காரியவசம் அடிப்படை மனித உரிமை மீறல் மனுவொன்றை தாக்கல் செய்தார்.
குறித்த மனு இன்று உயர்நீதிமன்ற நீதியரசர்களான பிரியசாத் டெப், பிரியந்த ஜயவர்தன, அனில் குணரத்ன உள்ளிட்ட மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
மனுதாரர் மனுவின் பிரதிவாதிகளாக மத்திய சுற்றுச்சூழல் அதிகார சபை, மின்சார சபை, வட மாகாண முதலமைச்சர், வலிகாமம் பிரதேச சபை தலைவர், நோட்டன் மின்சார நிறுவகம் ஆகியோரது பெயர்கள் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் பிரதிவாதிகள் அனைவரையும் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 16ம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அழைப்பாணை விடுத்துள்ளது.
No comments:
Post a Comment