யாழ்ப்பாணம் மட்டுவில் அம்மன் ஆலயத்தில் பெண்ணின் தாலிகொடி திருட்டு; கிளிநொச்சியில் ஒழித்துவைப்பு
யாழ்ப்பாணத்தின் பிரசித்தி பெற்ற அம்மன் ஆலயங்களுள் ஒன்றாகவுள்ள , சாவகச்சேரி மட்டுவில் பன்றித்தலைச்சி அம்மன் ஆலயத்தில் இடம்பெற்ற திருட்டுச் சம்பவம் தொடர்பாக, 58 வயதுடைய பெண் உள்ளிட்ட மூன்று சந்தேக நபர்களை சாவகச்சேரி காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கடந்த மாதம் 30 ஆம் திகதி, ஆலயத்தில் இடம்பெற்ற 'பங்குனித் திங்கள்' வழிபாட்டின் போது, அங்கு வந்திருந்த பெண் ஒருவரின் தாலிக்கொடி அறுக்கப்பட்டுள்ளதாக சாவகச்சேரி காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.
கிளிநொச்சி பிள்ளையார் சிலையின் பின்புறம் மறைத்து வைப்பு
சாவகச்சேரி காவல் நிலையப் பொறுப்பதிகாரி ம.கோணேஸ்வரனின் வழிகாட்டலில், பெருங்குற்றப் பிரிவு பொறுப்பதிகாரி க.ஜெயரூபன் தலைமையிலான விசேட குழுவினர் இது குறித்துத் தீவிர விசாரணைகளை முன்னெடுத்தனர்.
ஆலயத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிரிவி (CCTV) காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு முன்னெடுக்கப்பட்ட விசாரணையில், சந்தேகத்திற்கிடமான பெண் அடையாளம் காணப்பட்டார்.
நேற்றைய தினம் (06) ஆலயத்தில் இடம்பெற்ற நான்காவது பங்குனித் திங்கள் உற்சவத்தின் போது, அதே இடத்திற்கு மீண்டும் வந்திருந்த சந்தேக நபரான பெண்ணை காவல்துறையினர் கையும் மெய்யுமாகக் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட பெண்ணிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில், திருடப்பட்ட தாலிக்கொடி கிளிநொச்சி பகுதியில் உள்ள ஓர் ஆலயத்தில், பிள்ளையார் சிலையின் பின்புறம் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டது.
மேலும், திருட்டுச் சம்பவத்திற்காகப் பயன்படுத்தப்பட்ட சிற்றூந்து ஒன்றும் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட 58 வயதான பிரதான பெண் சந்தேக நபர் உட்பட மூவரும் இன்றைய தினம் (07) சாவகச்சேரி நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதுடன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Reviewed by Vijithan
on
April 07, 2026
Rating:


No comments:
Post a Comment