துருக்கிய எல்லையில் குண்டுத் தாக்குதல் 28 பேர் உயிரிழப்பு; 100 பேர் காயம்

துருக்கிய நகரான சுரக்கில் நேற்று திங்கட்கிழமை மாலை இடம்பெற்ற குண்டுத் தாக்குதல் ஒன்றில் குறைந்தது 28 பேர் பலியானதுடன் 100 பேருக்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு உள்துறை அமைச்சு தெரிவித்தது.
சிரிய எல்லையிலுள்ள மேற்படி நகரில் இடம்பெற்ற இந்தத் தாக்குதலை தீவிரவாதத் தாக்குதல் ஒன்றென அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
சுரக் நகர கலாசார நிலையமொன்றிலுள்ள தோட்டத்திலேயே இந்த வெடிப்பு இடம்பெற்றுள்ளதாக துருக்கிய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
அதேசமயம் இந்தத் தாக்குதல் தற்கொலைக் குண்டுதாரியொருவராலேயே நடத்தப்பட்டதாக பெயரை வெளியிட விரும்பாத அதிகாரியொருவர் குறிப்பிட்டுள்ளார்.
அந்நாட்டின் பிரதமர் அஹ்மெட் டவுதோக்லு பிரதிப் பிரதமர் நுமான் குர்துல்மஸ், உள்துறை அமைச்சர் செபஹட்டின் ஒஸ்துர்க், தொழில் அமைச்சர் பாருக் செலிக் ஆகிய 3 அமைச்சர்களை சம்பவம் இடம்பெற்ற இடத்திற்கு நேரில் சென்ற நிலைமைகளைப் பார்வையிட அனுப்பி வைத்துள்ளார்.
மேற்படி தாக்குதல் யாரால் நடத்தப்பட்டது என்பது குறித்து விபரம் எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை.
துருக்கிய எல்லையில் குண்டுத் தாக்குதல் 28 பேர் உயிரிழப்பு; 100 பேர் காயம்
Reviewed by Author
on
July 22, 2015
Rating:

No comments:
Post a Comment