அண்மைய செய்திகள்

recent
-

முல்லைத்தீவில் நடக்கும் பகல் கொள்ளையை மாகாண சபை கண்டுகொள்ளாமல் இருப்பது ஏன்?


முல்லைத்தீவு மாவட்டத்தில் பெறுமதியான காட்டுமரங்கள் அழிக்கப்படுவது தொடர்பில் வடமாகாண சபையின் நடவடிக்கை என்ன? என முல்லைத்தீவு மாவட்டத்தின் சமூக மற்றும் சுற்றாடல் ஆர்வலர்கள், மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
முல்லைத்தீவு- குமுழமுனை பகுதியில் பொறுப்பற்ற விதமாக பெருமளவு காடுகள் அழிக்கப்பட்டுள்ளமை தொடர்பாக மேற்படி ஆர்வலர்கள் மற்றும் மக்கள் ஊடகங்களிடம் மேற்படி கேள்வியை எழுப்பியுள்ளனர்.

குறித்த விடயம் தொடர்பாக குறித்த தரப்புக்கள் மேலும் குறிப்பிடுகையில்,

குமுழமுனை பகுதியில் வளமானதும், பழமையானதுமான காடுகள் திட்டமிட்ட குடியேற்றத்திற்காக அழிக்கப்பட்டு பெருமளவு காட்டு மரங்கள் கொள்ளையிடப்பட்டிருக்கின்றது.

இந்த நிலையில் வடமாகாண மரநடுகை மாதம் என பிரகடனப்படுத்தி வடக்கில் 5 இலட்சம் மரங்களை நடுகை செய்யும் செயற்றிட்டத்தை வடமாகாணசபை மேற்கொண்டு வருகின்றது.

முன்னதாகவே எங்கள் மூதாதையர்களால் பாதுகாக்கப்பட்ட இயற்கை காப்பரண்களான எங்கள் முதுசம் கண்மூடித்தனமாக அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில் மரநடு கையில் ஆர்வமும், அக்கறையும் காட்டும் வடமாகாணசபையும், முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் முல்லைத்தீவில் நடந்து கொண்டிருக்கும் பகல் கொள்ளையை கண்டுகொள்ளாமல் இருப்பது எதற்காக?

கடந்த 5ஆம் திகதி நடைபெற்ற மாகாணசபையின் 37ஆவது அமர்வு தொடர்பாக நாம் எமது மாவட்டம் சார்ந்த மாகாணசபை உறுப்பினர் து.ரவிகரனுடன் தொடர்புகொண்டு
பேசியிருந்தோம்.

அப்போது அவர்கள் கூறிய விடயம் முஸ்லிம் மக்கள் மீள்குடியேற்றத்திற்கு தாம் எதிர்ப்பானவன் அல்ல. என்பதை தாம் சுட்டிக்காட்டியுள்ளதாகவும், குறித்த பிரச்சினை சபையில் பேசப்படுவதனால் தமிழ்- முஸ்லிம் இனங்களுக்கிடையில் பிளவு அதிகரிக்கும் நல்லிணக்கம் பாதிக்கப்படும் என சுட்டிக்காட்டப்பட்டதுடன்,

மேற்படி விடயம் தொடர்பாக முதலமைச்சர் பொறுப்புவாய்ந்த அதிகாரிகளிடம் அறிக்கை கோரியிருக்கும் நிலையில் அந்த அறிக்கை கிடைத்த பின்னர் அடுத்த அமர்வில் பேசலாம் என கூறப்பட்டதாகவும் ரவிகரன் எமக்கு தெரிவித்தார்.

நாம் வடமாகாண முதலமைச்சர், அமைச்சர்கள், பொறுப்புவாய்ந்த உறுப்பினர்களிடம் கேட்கும் விடயம் ஒன்றே. 5ஆம் திகதி நடைபெற்ற அமர்வில் ரவிகரன் 11 ஆதாரங்கள் தங்களிடம் உள்ளதாக சபையில் சுட்டிக்காட்டியிருந்தார்.

குறித்த ஆதாரங்களை பெற்றுக் கொண்டு உண்மையில் என்ன நடந்தது? என்ன நடந்து கொண்டிருக்கின்றது? என்பதை ஆய்வு செய்வதற்கான குழு ஒன்றை வடமாகாண சபை நியமித்திருக்கலாம். ஆனால் நியமிக்கவில்லை.

அதனை விட இனங்களுக்கிடையில் நல்லிணக்கம் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக ஒரு சிலரின் தனிப்பட்ட நலன்களுக்காக முதலமைச்சரே பல தடவைகள் கூறியதைப்போன்று பாலைவன பின்னணியில் இருந்து வந்தவர்களால் மேற்கொள்ளப்படும் இவ்வாறான நடவடிக்கைகளுக்கான அங்கீகாரத்தை வழங்குவது,

அதுவும் எமது ஒட்டுமொத்த மக்கள் செல்வாக்கினால் உருவாக்கப்பட்ட சபை செய்வது முறையானதா?

இந்த விடயம் தொடர்பாக ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரின் கவனத்திற்கு கொண்டுவந்திருக்கலாம், சட்டரீதியான நடவடிக்கைகள் எடுத்திருக்கலாம். ஆனால் அவ்வாறு எதனையுமே செய்யாமல் இன நல்லிணக்கம் குறித்து பேசிக்கொண்டிருப்பது மாறாக இனங்களுக்கிடையிலான பிளவை அதிகரிக்க வழி சமைக்குமே தவிர இன நல்லிணக்கத்தை ஒருபோதும் வளர்க்காது.

மேலும் முல்லைத்தீவில் காணி அபகரிக்கப்படும், குடியேற்றங்கள் மேற்கொள்ளப்படும், காடுகள் அழிக்கப்படும், மீனவர்களுடைய வாழ்க்கை பறிக்கப்படும், ஆனால் யாரும் கேட்கவே மாட்டார்கள்.

கேப்பாபிலவு தொடக்கம் கொக்கிளாய், கொக்குதொடுவாய் வரையில் தமிழர்களிடமிருந்து பிடுங்கப்பட்ட காணிகளுக்கும், வயல் நிலங்களுக்கும் வடமாகாணசபை அல்லது பாராளுமன்ற உறுப்பினர்கள் எடுத்த நடவடிக்கை என்ன?

போருக்கு பின்னர் முல்லைத்தீவில் தமிழர்களின் கரைவலைப்பாடுகள் பறிக்கப்பட்டன, நாயாற்றில், முகத்துவாரத்தில் சிங்கள மீனவர்கள் குடியேறி மீன் பிடித்தார்கள் இதற்கும்
வடமாகாணசபை மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் எடுத்த நடவடிக்கை என்ன?

ஒதியமலை தொடக்கம் வெலிஓயா வரையில் பல தமிழ் கிராமங்கள் சிங்கள கிராமங்களாக மாற்றப்பட்டு விட்டன இதற்கும் வடமாகாணசபை அல்லது பாராளுமன்ற உறுப்பினர்கள் எடுத்த நடவடிக்கை என்ன?

எதுவுமே இல்லை. இந்த நிலையே இப்போது குமுழமுனை பகுதியில் நடந்துகொண்டிருக்கும் காடழிப்புக்கும் நடக்கும். இதனைவிட மேலதிகமாக முல்லைத்தீவில் மிச்சமாய் இருக்கும் தமிழ் கிராமங்களுக்குள்ளும் வேறு இனங்கள் வந்து குடியேறும் தமிழர்களுடைய வீடுகள் அழிக்கப்பட்டு,

தமிழர்கள் துரத்தப்படும் நிலை வந்தாலும் இன நல்லிணக்கம் ஒன்றை மேற்கோள்காட்டி அவை இந்த மாகாணசபையினாலும், பாராளுமன்ற உறுப்பினர்களாலும் தட்டிக்கொடுக்கப்படும்.

இந்நிலையில் முல்லைத்தீவு மக்களை மட்டுமல்லாமல் வடமாகாண மக்களை இனிமேல் கடவுளே காப்பாற்றவேண்டும். என அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

இரண்டாம் இணைப்பு

திரைமறைவில் மீண்டும் முல்லைத்தீவில் அரங்கேறும் புதியதொரு காடழிப்பு

இனவழிப்பைத் தொடர்ந்து முல்லைத்தீவில் உக்கிரம் அடைந்துவருகின்றது காடழிப்பு விவகாரம். பல ஆண்டுகளாக வளர்க்கப்பட்டு, பாதுகாக்கப்பட்டு வந்த முல்லைத்தீவு காட்டு மரங்கள் பல மீள் குடியேற்றம் என்னும் பெயரில் அழிக்கப்பட்டு வருவதாக முல்லைத்தீவு மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

அது தொடர்பாக தெரியவருவதாவது,

முல்லைத்தீவு மாவட்டத்தின் தண்ணிமுறிப்பு குளக்கட்டுடன் இருக்கின்ற பாதுகாக்கப்பட்ட காட்டுப் பகுதியான சவராறும் அதனை அண்மித்த காடுகளும் முஸ்லிம் அமைச்சர் ஒருவரின் ஆதரவாளர்களால் சட்டவிரோதாமான முறையில் அழிக்கப்பட்டு வருவதாகத் தெரியவருகின்றது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் இருக்கின்ற தண்ணிமுறிப்பு குளம் 1951 ஆம் மீள்புனரமைப்பு செய்யப்படுகையில் எதிர்காலத்தில் 3 ஏக்கர் வீதம் 164 காணி துண்டுகளை குளத்துக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் அந்தப் பகுதியில் வழங்கலாம் என திட்ட வரைவை முன்வைத்திருந்தது.

ஆனால் அதே காலப்பகுதியில், தண்ணிமுறிப்பு குளக்கட்டை அண்மித்த காட்டை அழித்து, வயல் நிலங்களை உருவாக்க முயற்சித்த தமிழர்கள் 10 பேர் வன இலாகா அதிகாரிகளினால் கைதுசெய்தனர்.

குறித்த பகுதிக் காடுகள் அரசாங்கத்தினால் பாதுகாக்கப்பட்டவை எனவும், அதனை அழிக்க முடியாதெனத் தெரிவித்து காடழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டமைக்கான தண்டப் பணத்தையும் அவர்களிடமிருந்து அறவிடப்பட்டனர்.

அத்துடன் குளக்கட்டிலிருந்து 750 அடி தூரத்திற்கு எவ்வித விவசாயஇ கட்டுமான நடவடிக்கைகளுக்கும் மேற்கொள்ள முடியாது எனவும், அவ்வாறு மேற்கொண்டால் குளக்கட்டு பாதிக்கப்படுவதோடு நீர்க்கசிவு ஏற்பட்டு அணை உடைப்பெடுக்கவும் வாய்ப்பு ஏற்படும் என முல்லைத்தீவு மாவட்ட நீர்ப்பாசன திணைக்களம் எச்சரித்திருந்தது.

எனவே தண்ணிமுறிப்பு குளம் மீள்புனரமைக்கப்பட்ட காலத்திலிருந்து குறித்த பகுதியில் எவ்வித காணி உருவாக்கங்களும் இடம்பெறவில்லை. 2009 ஆம் ஆண்டு போர் முடிவுற்றதைத் தொடர்ந்து முல்லைத்தீவு மாவட்டத்தில் மீள் குடியேறிய குறித்த அமைச்சரின் ஆதரவாளர்கள் தண்ணிமுறிப்பு முள்ளியவளை பகுதிகளில் தேவைக்கு அதிகமான காணிகளை அடாத்தாகப் பிடிப்பதற்கும் அதற்காக பாதுகாக்கப்பட்ட காடுகளை அழிப்பதற்கு அமைச்சர்கள் அரச அதிகாரிகளின் திரைமறைவு ஆதரவுடன் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முள்ளியவளையை அண்மித்த சில இடங்களில் இவ்வாறான காடழிப்புக்கு எதிராக தமிழ் மக்கள் போராட்டம் நடத்தி இராணுவத்தினர் தலையிட்டு காடழிப்பை தடுத்து நிறுத்திய சம்பவங்களும் யாவரும் அறிந்ததே.

அதில் ஒருகட்டமாகவே தண்ணிமுறிப்பு குளக்கட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான வகையில் சவராற்று காட்டை அழித்து அதில் ஒரு குடும்பத்துக்கு 3 ஏக்கர் வீதம் 164 குடும்பங்களுக்கான 492 ஏக்கர் காணிகளை பிடிக்கும் முயற்சிகளில் அமைச்சரின் ஆதரவாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

அதற்காகப் போலியான ஆவணங்களையும் நிழற்பிரதி செய்யப்பட்ட கடிதங்களையும் அவர்கள் தயாரித்து அரச அதிகாரிகளிடம் சமர்ப்பித்து வருவதாகவும், பெயர் குறிப்பிட விரும்பாத உள்ள 10 விவசாய அமைப்பின் உறுப்பினர்கள் எம்மிடம் தெரிவித்தனர்.

மீளக் குடியமர்ந்த காலத்திலிருந்து சவராறு காட்டிற்கு ஏக்கர் வரி செலுத்தியமைக்கான பத்திரங்களை சான்றாகக் காட்டி அந்தக் காடுகள் தமக்கு மக்களுக்கு உரித்துடையவை என்று தெரிவித்தே இவ் அழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாகத் குறித்த அமைப்பின் உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

மேலும், ஏக்கர் வரி எனப்படுவது விவசாய நடவடிக்கைகள் இடம்பெற்றுக்கொண்டிருக்கும் நிலத்தில் தொடர்ந்தும் பயிர்செய்யவும் அதற்கான மானியங்களைப் பெற்றுக் கொள்ளவுமே கமநல திணைக்களத்துக்கு செலுத்தப்படும் ஒன்றாகும்.

ஆனால் காடுகளுக்கு ஏக்கர் வரி கட்டப்படும் முறைகளோ சட்டங்களோ இல்லை. குமுழமுனையில் இருக்கின்ற கமநல சேவைகள் திணைக்கள அதிகாரியே இவ்வாறு முஸ்லிம் மக்களிடமிருந்து கடந்த 3 வருடங்களாக ஏக்கர் வரியினைப் பெற்றுள்ளார்.

அது எவ்வகையில் பெறப்பட்டது என்று தங்களுக்குத் தெரியாது எனவும் அவர்கள் மேலும் தெரிவித்தனர். சவராறு மற்றும் நாகஞ்சோலை பகுதிகளின் காடழிப்பு நடவடிக்கைகள் உள்ள 10 விவசாய உறுப்பினர்கள்,  மக்களின் எதிர்ப்புக்கும் மத்தியில் இந்த வருட தொடக்கப்பகுதியில் இருந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதனைத் தடுத்து நிறுத்த வேண்டிய அதிகாரிகள் தொடர்ந்தும் மௌனம் சாதிப்பதும், அழிப்பதற்கான ஆதரவினை வழங்கி வருவதும் மக்கள் மத்தியில் பெரும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதேவேளை அண்மையில் முள்ளியவளை குமாரபுரம் பகுதியில் 600 ஏக்கருக்கு மேற்பட்ட காடுகள் அழிக்கப்பட்டு அமைச்சரின் ஆதரவைப் பெற்றவர்களால் காணிகள் பிடிக்கப்பட்டன.

இது குறித்து ஊடகங்களில் செய்திகள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த போதிலும், முல்லைத்தீவு மாவட்டத்தில் இருக்கின்ற வன மற்றும் காணி தொடர்பிலான திணைக்களங்களும் அதிகாரிகளும் எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளவில்லையெனவும் மக்கள் கருத்துவெளியிட்டுள்ளனர்.

இதேவேளை, இக்காடுகளை முன்னர் தமிழீழ விடுதலைப் புலிகள் தமது கட்டுப்பாட்டில் இருந்த வேளை பாதுகாத்து வந்தனர். ஆனால் 2009ம் ஆண்டிற்குப் பின்னர் யுத்தத்தின் அழிவுகளோடு பல மரங்களும் விமானத் தாக்குதல்களின் மூலம் அழிந்தன.

எனினும், குறிப்பிட்ட சில காலங்களில் சிறிய மரங்கள் வளர்ச்சியடைந்துள்ள நிலையில், மீண்டும் இவ்வாறான காடழிப்பானது தமிழர்களின் எதிர்கால இருப்பிற்கு குந்தகம் விளைவிப்பதாகவே அமைந்திருக்கின்றது.

மேலும், இது தொடர்பாக தமிழ் அரசியல்வாதிகள் வாய் திறக்காமல் இருப்பது மிகவும் கவலைக்குரிய விடையம் என மக்கள் கவலை வெளியிடுகின்றார்கள்.

முல்லைத்தீவில் நடக்கும் பகல் கொள்ளையை மாகாண சபை கண்டுகொள்ளாமல் இருப்பது ஏன்? Reviewed by Author on November 08, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.